Skip to main content

ஒபிஎஸ் தர்மயுத்தத்தின் மர்ம காட்சி அம்பலம்!

Published on 05/10/2018 | Edited on 05/10/2018

யாரை எதிர்த்து தர்மயுத்தம் தொடங்கினாரோ அதே ஆட்களோடு சேர்ந்து எடப்பாடி அரசை கவிழ்க்க ஒபிஎஸ் திட்டமிட்டார் என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட ஒரு வாரத்திலேயே, அவருடைய சமாதியின் ஈரம் காய்வதற்கு முன்னரே அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டது. அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை முன்மொழிந்து சின்னம்மாவாக காலில் விழுந்து அடுத்த ஜெயலலிதாவாக அறிமுகம் செய்தவர் ஒபிஎஸ். முதல்வர் பதவியை சசிகலா பறி்த்ததும், சசிகலா குடும்பத்துக்கு எதிராக 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி தர்மயுத்தம் தொடங்கினார்.

 

ops dharmayudham



சசிகலா சிறைக்கு சென்ற நிலையில், எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கிவிட்டு சென்றார். அதன்பிறகு தினகரன் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆனார். அதையும் கடுமையாக விமர்சித்தவர் ஒபிஎஸ். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சமயத்தில் மத்திய அரசு உதவியோடு தினகரனுக்கு எதிராக பல நெருக்கடிகள் கொடுக்கப்பட்டது. தினகரனுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்த அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது. தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அப்போதே, சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை ஏற்றுக்கொண்டது. ஒபிஎஸ் அணி எடப்பாடி அணியுடன் 2017 ஆம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி இணைந்தது. அதைத்தொடர்ந்து ஒபிஎஸ்சுக்கு துணை முதல்வர் பதவியும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியும் கொடுத்து இரட்டை இலைச் சின்னத்தையும் பெற்றார்கள். ஆனால், அதற்கு முன்னதாக இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்ததாக தினகரன் சிறைக்கு சென்றார்.

 

sasikala ttv



ஆனால், அந்த இணைப்புக்கு 40 நாட்கள் முன்னரே, எந்தக் குடும்பத்தினரை எதிர்த்து ஒபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினாரோ, அதே தினகரனை 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் தேதி ஒபிஎஸ்சும் அவருடைய மகனும் சந்தித்து எடப்பாடி அரசை கவிழ்த்துவிட்டு, தன்னை முதல்வராக்கினால் தினகரனுக்கு விசுவாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்.

இந்தத் தகவலை ஒரு விவாத நிகழ்ச்சியில் தினகரன் ஆதரவாளரான தங்கத் தமிழ்ச்செல்வன் கூறினார். அதைத்தொடர்ந்து, இந்த தகவலை மறுக்காத ஒபிஎஸ், அதெல்லாம் பழைய கதை என்று சொல்லியிருக்கிறார். இந்நிலையில் ஒபிஎஸ்சும் அவருடைய மகனும் தன்னை சந்தித்தது உண்மைதான். அதை அவரால் மறுக்க முடியாது. அதில் சில அரசியல் ரகசியம் இருக்கிறது. அதனால்தான் நான் அதை வெளியில் சொல்லவில்லை. தினகரன் முதல்வர் பதவிக்காக அலைகிறார். இப்போதும்கூட ஒபிஎஸ்சும் இபிஎஸ்சும் ஆளுக்கொரு கத்தியை மறைத்துக்கொண்டே அரசியல் செய்கிறார்கள் என்று தினகரன் பேட்டியளித்தார்.

 

eps and ops



ஒபிஎஸ்சின் தர்மயுத்தம் நாடகம் கடந்த சில மாதங்களாகவே சிரிப்பாய் சிரிக்கிற நிலைக்கு போய்விட்டது. மத்திய அரசில் ஒபிஎஸ்சுக்கு இருந்த மரியாதை சுத்தமாக போய்விட்டது. தொடக்கத்தில் ஒபிஎஸ்சையும், இபிஎஸ்சையும் அடிக்கடி சந்தித்த மோடி, இப்போதெல்லாம் தனது ஏஜெண்டான ஆளுநரைப் பார்த்தால் போதும் என்று கூறிவிட்டதாக தெரிகிறது.

தலைமைச் செயலாளராக இருக்கும் கிரிஜா வைத்தியநாதன் மாநில நிர்வாகத்தை பாஜகவின் இஷ்டத்துக்கு ஆட்டிப் படைப்பதாக கூறுகிறார்கள். இந்நிலையில்தான், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஒபிஎஸ்சின் தர்மயுத்தம் நாடகத்தின் மர்ம காட்சி அம்பலம் ஆகியிருக்கிறது.  

 

 

 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.