Skip to main content

வடக்கத்தி சாமியார்களும் தெற்கத்தி சாமியார்களும்!

Published on 26/04/2018 | Edited on 26/04/2018

நாடு முழுவதும் பாஜகவினர் மீது சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில், மோடிக்கு நெருங்கிய குஜராத் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு சாகும்வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Asaram

ஆசாராம் பாபு


அந்தச் சாமியாரும் 16 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில்தான் தண்டனை பெற்றுள்ளார். குஜராத்தைச் சேர்ந்த அசுமல் சிருமலானி பின்னாளில் தனது பெயரை ஆசாராம் என்று மாற்றிக்கொண்டு சபர்மதி ஆற்றங்கரையில் சிறு குடிசையில் ஆசிரமம் தொடங்கினார். அதன் பிறகு அவருக்கு சீடர்களும் பக்தர்களும் அதிகரித்தனர். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் 400 ஆசிரமங்களை அவர் தொடங்கினார். உத்தரப்பிரதேசம் ஷாஜகான்பூரை சேர்ந்த 16 வயது சிறுமி இவருடைய ஆசிரமத்தில் சேர்ந்தார். மத்தியப்பிரதேசம் மாநிலம் சின்வாரா நகரில் உள்ள ஆசாராம் ஆசிரமத்தில் ஆன்மிக போதனைகளை கற்றுவந்தார்.
 

2013 ஆம் ஆண்டு சாமியார் ஆசாராம் பாபு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் வந்தார். அப்போது அந்த சிறுமியை அங்கு அழைத்துவர ஏற்பாடு செய்தார். அந்த ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்திய விடுதலை நாளன்று சிறுமியை தனது பாலியல் இச்சைக்கு பலியாக்கினார். சிறுமி அலறியடித்து, ஆசிரமத்திலிருந்து வெளியேறி பெற்றோரிடம் சேர்ந்தார். அதைத் தொடர்ந்து சாமியார் ஆசாராம் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு சீடர்கள் 4 பேருடன் கைது செய்யப்பட்டார். அப்போது சிறையில் அடைக்கப்பட்ட சாமியார் 5 ஆண்டுகளில் 12 முறை பல்வேறு நீதிமன்றங்களில் ஜாமீன் கேட்டும் கிடைக்கவில்லை. இந்நிலையில்தான் அவருடைய வழக்கில் புதன்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆயுளுக்கும் அவர் வெளியே வரமுடியாதபடி 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், இந்த கேடுகெட்ட சாமியாருக்கு ஆதரவாக வன்முறை ஏற்படும் என்று கருதியதால், சிறைக்கே சென்று நீதிபதி தீர்ப்பளித்திருக்கிறார். ஆனால், வடக்கே குற்றம் புரிந்த சாமியார்களுக்கு ஆதரவாக நடக்கும் வன்முறைகளைப் போல தமிழ்நாட்டில் நடக்க வாய்ப்பே இல்லை. அந்த அளவுக்கு தந்தை பெரியாரால் இந்த மண் பக்குவப்பட்டிருக்கிறது.

 

premananda

பிரேமானந்தா


தமிழகத்தில் சாமியார்கள் இல்லை என்றோ, மூடநம்பிக்கைகள் இல்லை என்றோ சொல்லிவிட முடியாது. வடக்கத்தி மாநிலங்களில் இருப்பதைப் போல இங்கே கேவலமாக இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். வடக்கில் சுதந்திரமாக திரிவதைப் போல அகோரி அம்மண சாமியார்கள் தமிழ்நாட்டில் நடமாடிவிட முடியாது. கங்கை நீரில் அகோரி சாமியார்கள் பெண்களின் தலையில் கால் வைத்து ஆசி கொடுப்பதைப் போல இங்கே பார்க்கமுடியாது.

ஒரு பிரேமானந்தா கற்பழிப்பு வழக்கில் சிக்கியபோது அவருக்கு ஆதரவாக போராட அவருடைய ஆதரவாளர்கள் யாரும்  முன்வரவில்லை. ஒரு நித்தியானந்தா பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கி சீரழிந்தபோது அவருக்கு ஆதரவாக அவருடயை சீடர்கள் யாரும் போராட முன்வரவில்லை. இந்திய குடியரசுத்தலைவரிலிருந்து, மத்திய அரசாங்கம் வரை தனது அதிகாரத்தை செலுத்திவரும்  காஞ்சி மட  சாமியார்  ஜெயேந்திரனும், விஜயேந்திரனும் பாலியல் மற்றும் கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்டபோது யாரும்  அவர்களுக்காக  பொங்கி எழவில்லை.

 

jaggi football

ஜக்கி


நேரடியாக மதத்துடன் தொடர்புடைய சாமியார்கள் தவிர, யோகா, மனவளம் என்ற போர்வையிலும் தமிழகத்தில் ஒரு சாமியார்  வளர்ந்து வருகிறார். ஆடம்பர சாமியார் வரிசையில் வரும் இந்த மாதிரி ஆசாமிகள் பெரிய பணக்காரர்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், நீதிமான்கள் என்று பலமான பின்புலத்தை ஏற்படுத்தி தாங்கள் நடத்தும் மடத்துக்குள் என்ன நடக்கிறது என்பதையே   ரகசியமாக வைத்திருக்க முடிகிறது.
 

பல்வேறு கிரிமினல் பின்னணி இருப்பதாக கருதப்படும் ஜக்கி வாசுதேவ் மீது பல்வேறு தரப்பினரும் புகார் கூறிப் பார்த்தார்கள். வனவிலங்குகள் நடமாடும் காடுகளை அழித்து ஆசிரமம் கட்டியதில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்திருப்பதாக பகிரங்கமாக குற்றச்சாட்டு எழுந்தது. அரசு வனப்பகுதியை ஆக்கிரமித்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஜக்கியுடன் தமிழக  அமைச்சர்களும், முதல்வரும் கைகோர்த்து காட்சி அளிக்கிறார்கள். நீதிபதிகளும் சினிமா நட்சத்திரங்களும் மேடையில் நிற்கிறார்கள்.

 

nithyananda with crown

நித்தியானந்தா


ஒரு பக்கம் வனத்தை அழித்துவிட்டு, மறுபக்கம் நதிகளைக் காப்போம் என்று நாடகம் நடத்தும் ஜக்கியின் ஏமாற்று வேலை  சாதாரணமான நபர்களுக்கே புரிகிறது. ஆனால், அவருக்கு உறுதுணையாக அமைச்சர்களும் முதல்வரும் இருந்தால் என்ன செய்ய முடியும்? ஆனால், தன்னை கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் வடக்கத்தி சாமியார்களின் ஆதரவாளர்கள் நடத்தும்  ரவுடித்தனத்தையும், வியாபாரத் தந்திரத்தையும் அந்த மக்கள் புரிந்துகொள்ள மறுப்பதும், அந்த போலிச் சாமியார்களை அரசியல்  கட்சிகள் தங்களுடைய நலனுக்காக தலையில் தூக்கிச் சுமப்பதும் வேதனையாக இருக்கிறது. மாடுகளுக்காக மனிதர்களைக்  கொல்லும் கூட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கும்போது பகுத்தறியும் அறிவு எங்கே  இருக்கப்போகிறது?
 

ஹரியானா மாநிலம் சிர்ஸாவில் குர்மீத்சிங் என்ற சாமியாரால் 5 மாநிலங்களை கலவர பூமியாக மாற்ற முடிகிறது. இத்தனைக்கும்  கடவுள் என்று சொல்லிக்கொள்ளும் அந்த சாமியார் சினிமாவில் நடிப்பதையும், ஜிகினா டிரெஸ் மாட்டி மேடைகளில் பாட்டுக் கச்சேரி நடத்துவதையும், மகள் வயது பெண்களுடன் சல்லாபம் நடத்துவதையும் பார்த்தால் குமட்டிக்கொண்டுவருகிறது. ஆனால்,  இவ்வளவு கேவலமான அந்தச் சாமியாருக்கு ஆதரவாக அவருடைய ஆதரவாளர்கள் காட்டுமிராண்டிகளைப் போல வன்முறையில்  ஈடுபடுகிறார்கள். ஒரு நாட்டின் நீதித்துறைக்கே சவால் விடும் போக்கு இந்தியாவில் சாமியார்களால் மட்டுமே முடிகிறது.

 

Gurmeet singh

குர்மீத்சிங்


ஆம். வெறும் நம்பிக்கை என்ற வார்த்தையை பயன்படுத்தி தமிழகம்மட்டுமின்றி தென்னிந்தியாவே செழித்து முன்னேற  வழிவகுக்கும் சேதுசமுத்திர திட்டத்தையே காலி செய்ய நமது நீதித்துறை துணையாக இருக்கும். அந்த வகையில் கற்பழிப்பு  சாமியார் குர்மீத் சிங்கிற்கு இரண்டு கற்பழிப்பு வழக்குகளிலும் மொத்தம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து  தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த சாமியாரைப் போலவே இதே ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹிஸார் என்ற இடத்தில் ஆசிரமம் கட்டி கூட்டம் சேர்த்தவர் சத்குரு ராம்பால்ஜி மகராஜ். இவர் 2006ஆம் ஆண்டு ஆர்ய சமாஜ் அமைப்பினரை கடுமையாக விமர்சித்தார். அதையடு்தது இரு பிரிவினருக்கும் இடையே பயங்கர மோதல் உருவானது. உடனே சாமியார் ராம்பால் ஆர்ய சமாஜத்தினரை சுடும்படி தனது  ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டார். அவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 56 பேர் காயமடைந்தனர். இந்த  சம்பவம் தொடர்பாக ராம்பால் கைது செய்யப்பட்டு 22 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 


 

rampal ji

சத்குரு ராம்பால்ஜி மகராஜ்


பின்னர் ராம்பாலுக்கு ஜாமீன் கிடைத்தது. அதன்பிறகு இவரை விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன்கள் அனுப்பப்பட்டன. சுமார் 40 முறை  சம்மன்கள் அனுப்பப்பட்ட நிலையிலும் அவரை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், சாமியார் ஆசிரமத்துக்குள் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கூடி அவரை கைது செய்ய விடாமல் தடுத்தனர். அவர்களை  மனிதக் கேடயமாக்கி சாமியார் தப்ப முயன்றார். மக்களை வெளியேற்றி சாமியாரை போலீஸார் கைது செய்தனர். இதில் 6 பேர்  உயிரிழந்தனர். பின்னர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சாமியார் மீது தேசவிரோத குற்றச்சாட்டும், அரசு ஊழியர்களை பணியைச் செய்யவிடாமல் தடுத்து கலவரத்தை தூண்டிய குற்றச்சாட்டும்  சுமத்தப்பட்டன. அந்த வழக்குகளில் இவருக்கு தண்டனை கிடைப்பது உறுதி என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

baba ramdev

பாபா ராம்தேவ்

 

இவர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடுகிறார் சாமியார் பாபா ராம்தேவ். இவர்மீது இன்னும் கொலை, கற்பழிப்பு புகார்கள்  வரவில்லையே தவிர, இவருடைய ஆயுர்வேத மருந்துக் கம்பெனியில் மனித எலும்பு, மாட்டு சாணம், மாட்டு சிறுநீர் ஆகியவை பயன்படு்ததப்படுவதாக சோதனையில் நிரூபிக்கப்பட்டன. மதத்துவேசம், ஒரு சார்பு அரசியல் என்று தனது பாதையை திட்டமிட்டு  வகுத்துக் கொண்டவர். யோகா என்ற பேரில் அரசியல் ரீதியாக இவர் அடைந்த பலன்கள் கொஞ்சமல்ல. மோடியை புரமோட் செய்வதற்காக அன்னா ஹஸாரே நடத்திய ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு வகித்தார். பாரத் மாதா கீ ஜெய் என்ற  கோஷத்தை ஏற்க மறுப்பவர்களின் தலையை வெட்ட வேண்டும் என்று பேசி கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியவர்.
 

பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு வழங்கப்படும் இஸட் பிளஸ் பாதுகாப்பு இவருக்கு  வழங்கப்பட்டிருக்கிறது. பிரதமருக்கு  ரொம்ப வேண்டியவராக இருப்பதால் இன்னும் இவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படாமல் இருக்கின்றன. அரசியல் நிலவரம் மாறினால் இவரால் பாதிக்கப்பட்டவர்கள் அப்போது வெளியே வருவார்கள். இவரும் உள்ளே போவார் என்று  உறுதியாக நம்பலாம்.      




  
    

Next Story

‘பதஞ்சலியின் மன்னிப்பை லென்ஸ் வைத்து தேட வேண்டியுள்ளது’ - உச்சநீதிமன்றம் கண்டனம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Supreme Court condemns on Patanjali's apology needs to be looked at with a lens

ஆங்கில மருத்துவம் தொடர்பாக தவறான தகவல்களை விளம்பரம் செய்ததற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது ராம்தேவும், பாலகிருஷ்ணாவும் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி இருப்பதாகவும் வழக்கறிஞர் கூறினார். இவ்வாறு தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 16ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோர் பதஞ்சலி ஆயுர்வேதத்தின் தவறான விளம்பரங்கள் தொடர்பான விசாரணையில் கலந்து கொள்ள உச்ச நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது ராம்தேவ் பகிரங்க மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி தெரிவித்தார்.

இதனையடுத்து பாபா ராம்தேவ் உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை மீறி விளம்பரம் செய்ததற்காக நேரில் ஆஜாராகி மன்னிப்பு கேட்டார். அப்போது, “தவறாக கொடுத்த விளம்பரத்தை நியாயப்படுத்தவில்லை. உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை எதிர்காலத்தில் மீற மாட்டேன். பொது மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்” என ராம்தேவ் உறுதியளித்தார். இதனையடுத்து மனுதாரர்கள் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று (23-04-24) நடைபெற்றது. அப்போது. ராம்தேவ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ‘பதஞ்சலி நிறுவனம் 61 நாளேடுகளில் பகிரங்க மன்னிப்பு கோரி விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதாக’  தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், ‘பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட விளம்பரத்துக்கு இணையாக, அதே அளவில் மன்னிப்பு இருந்ததா?. பதஞ்சலி நிறுவனம் மன்னிப்பு கோரும் விளம்பரங்களை லென்ஸ் வைத்து தேடும் அளவுக்கு சிறிதாக உள்ளது.

பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்களை இது போல் சிறிய அளவில் தான் செய்வீர்களா?. பொருளை விளம்பரப்படுத்துவது போல், மன்னிப்பும் பெரிய அளவில் வரும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் விளம்பரங்களை வெளியிட வேண்டும்’ என்று கண்டனம் தெரிவித்து இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். மேலும், தவறான விளம்பரத்தை வெளியிட்ட பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத மத்திய அரசின் செயல் அதிருப்தியாக உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

Next Story

பெண்கள் ஆடை குறித்த ராம்தேவின் பேச்சிற்கு வலுக்கும் கண்டனங்கள்

Published on 27/11/2022 | Edited on 27/11/2022

 

Ramdev's speech on women's clothing is strongly condemned

 

பாபா ராம்தேவ் பெண்களைப் பற்றிக் கூறிய கருத்துக்கு நாடெங்கும் கண்டனங்கள் வலுத்து வருகிறது. மேலும் பாபா ராம்தேவின் இக்கருத்திற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் கூறியுள்ளார்.

 

நேற்று முன் தினம் புனேவில் நடந்த நிகழ்வில் பாபா ராம்தேவ், துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய ராம்தேவ், “பெண்கள் புடவையிலும், சல்வாரிலும் அழகாக இருப்பார்கள். ஆடைகள் எதுவும் அணியாவிட்டாலும் அழகாக இருப்பார்கள்” எனக் கூறினார்.

 

இதற்கு டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் ‘பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த பாபா ராம்தேவ் அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

 

மராட்டிய மகளிர் ஆணையர் ரூபாலி சகாங்கர் அனுப்பிய நோட்டீசில் ‘பெண்களின் கவுரவத்தையும் கண்ணியத்தையும் கெடுக்கும் வகையிலான உங்கள் பேச்சிற்கு எதிராக ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாபா ராம்தேவ் தனது கருத்து குறித்த விளக்கத்தை மூன்று நாட்களுக்குள் கமிஷன் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு ஆணையம் அறிவுறுத்துகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

 

மேலும் மேடையிலிருந்த துணை முதல்வரின் மனைவி மற்றும் அங்கிருந்த பெண்கள் அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும் என்றும் இணையத்தில் கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.