Skip to main content

இதற்குத்தான் இத்தனை உயிர்களை பறித்தாரா மோடி? 

Published on 29/08/2018 | Edited on 29/08/2018
modi


 

2016 நவம்பர் மாதம்  8 ஆம் தேதி நள்ளிரவோடு இந்திய மக்கள் சிறுகச் சிறுக சேமித்து வைத்திருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்தார்.
 

 

 

அடுத்தநாள் முதல் லட்சக்கணக்கில் பணம் போட்டவர்கள்கூட வெறும் 2 ஆயிரம் ரூபாய்க்காக வங்கிகளின் வாசலிலும், ஏடிஎம் வாசல்களிலும் நீண்ட வரிசையில் கொளுத்தும் வெயிலில் காத்திருந்த கொடுமையைக் காணநேர்ந்தது.
 

வேலைக்கே போகமால் பணம் எடுப்பதும் பணத்தை மாற்றுவதுமே வேலையாகிப் போனது. அதிர்ச்சியிலும், வெயிலிலும் பலர் உயிரிழந்தனர். 6 மாதங்களில் கருப்புப்பணம் மீண்டுவிடும். அப்படி மீட்காவிட்டால் என்னை நடுரோட்டில் தீ வைத்து கொளுத்துங்கள் என்று மோடி சவால் விட்டார்.
 

மக்கள் படும் அவஸ்தைகளைப் பேசினால், எல்லையில் ராணுவ வீரர்கள் செய்யும் தியாகத்தை பாஜகவினர் பேசினார்கள். வெளிநாட்டில் இந்தியர்கள் பதுக்கிய கருப்புப்பணத்தை கைப்பற்றி இந்தியர்களின் கணக்கில் நபர் ஒருவருக்கு 15 லட்சம் ரூபாய் வங்கிக்கணக்கில் ஏற்றுவேன் என்ற மோடி, உள்நாட்டு மக்களின் சேமிப்புகளை நாசம் செய்தார். சிறு தொழில்கள் செய்தவர்கள் முடங்கினார்கள். புதிய ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விடுவதற்கு முன்னரே கோடீஸ்வரர்களின் வீடுகளுக்கு கட்டுக்கட்டாக அனுப்பி வைத்தார்கள்.

 

 


ஏராளமான திருமணங்கள் பணமின்றி நடத்த முடியாமல் தடைப்பட்டன. வர்த்தகம் நாசமானது. சொந்தப் பணத்தை வங்கிகளில் இருந்து எடுக்க முடியாமல் மக்கள் அல்லாடினார்கள்.


வளர்ச்சிக்காக இந்தக் கஷ்டங்களைத் தாங்கும்படி மோடி கேட்டார். ஆனால், கருப்புப்பணம் பிடிபட்டதா என்றால் திரும்பிய பணத்தை கணக்கிட்டபிறகுதான் சொல்ல முடியும் என்றார்கள்.


இதோ கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி மோடியின் உருப்படாத முகத்தை அம்பலப்படுத்தி இருக்கிறது. மோடி செல்லாது என்று அறிவித்த நாளின் கணக்குப்படி புழக்கத்திலிருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 15 ஆயிரத்து 417.93 லட்சம் கோடி ரூபாய் திருப்பி வந்த நோட்டுகளின் மதிப்பு 15 ஆயிரத்து 310.73 லட்சம் கோடி ரூபாய்.  ஆக, வங்கிகளுக்கு திரும்ப வராதது 9 ஆயிரத்து 720 கோடி ரூபாய் மட்டும்தான். பணமதிப்பிழப்பு மூலம் 3 லட்சம் கோடி ரூபாய் கருப்புப்பணம் ஒழியும் என்ற மோடி இப்போது என்ன பதில் சொல்லப் போகிறார்?


அவர் என்றைக்கு பதில் சொன்னார்? எதையாவது அள்ளிவிட்டுவிட்டு போயிருவாரு. அவர் செய்ற ஒவ்வொரு வேலையும் அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும்தான் லாபம் தரும். மக்களுக்கு கஷ்டத்தை மட்டுமே கொடுக்கும் என்பதே இதுவரை நிஜமாக இருக்கிறது. இந்த லட்சணத்தில் வளர்ச்சியை நோக்கி என்ற ஒற்றைக் கோஷத்தை நாலேகால் ஆண்டுகளாக முழக்கி வருகிறார்கள்.

 

 


விரைவில் ஜிஎஸ்டி விதிப்பால் பலனடைந்தோர் யார் என்பதும், நாட்டுக்கு எவ்வளவு இழப்பு என்பதும் வெளிவரும் என்று எதிர்பார்க்கிறார்கள் மக்கள்...
 

 

 

Next Story

மும்முரமாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு; பிரதமர் வைத்த வேண்டுக்கோள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
PM Modi asks everyone to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது!  21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை  பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“2019ல் நம்பிக்கையோடு வந்தேன், 2024ல்...” - பிரதமர் மோடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 PM Modi campaign and says he came with confidence in 2019 at assam

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 14 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தலானது வரும் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலானது ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தலானது மே 7ஆம் தேதியும் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள சில தொகுதிகளில் நடைபெறும் முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் (19-04-24) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும், வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று(17-04-24) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், “இன்று நாடு முழுவதும் மோடியின் உத்தரவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மோடியின் உத்தரவாதத்திற்கு வடகிழக்கு பகுதியே சாட்சி.

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை வசதிகள் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தேன். அவர்களின் சிகிச்சையை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் பார்த்துக்கொள்வேன். பி.எம். கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் இங்குள்ள விவசாயிகள் ரூ.1000க்கு மேல் பெற்றுள்ளனர். இப்போது, ​​பாஜக இந்தத் திட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளது, இதன் மூலம் அசாமின் விவசாயிகளுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் உதவி மற்றும் அதிகாரம் அளிக்கிறது.

2014ஆம் ஆண்டில் எதிர்பார்ப்புடன் மக்களைச் சந்திக்க வந்தேன். 2019ஆம் ஆண்டில் நம்பிக்கையோடு வந்தேன். தற்போது 2024ல் உத்தரவாதத்தோடு வந்திருக்கிறோம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அணுகி அவர்களுக்குத் தகுதியான வசதிகளை வழங்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு மேலும் 3 கோடி புதிய வீடுகள் கட்டித் தரப்படும். பாகுபாடின்றி அனைவருக்கும் அவை கிடைக்கும்” என்று கூறினார்.