Skip to main content

மோடியை மிரள வைக்கும் லேடி டைகர்! - முதல்வரைத் தெரியுமா? #1  

Published on 23/04/2018 | Edited on 30/04/2018
Mudhalvarai theriyuma title

 

'சாமி' பேருக்கே அர்ச்சனை செய்யச் சொல்லும் முதல்வரை நமக்குத் தெரியும். பல சாமிகளை மிரள வைக்கும் முதல்வரைத் தெரியுமா? சாமி கோவிலில் சமூக சமநிலை நிலைநாட்டிய முதல்வரை நமக்குத் தெரியுமா? தன் மாநிலத்துக்கென தனி கொடி கண்ட முதல்வரைத் தெரியுமா? ஒவ்வொருவராகத் தெரிந்துகொள்வோம்...

29 வயது இளம் பெண் இவர். 55 வயதைக் கடந்த பொதுவுடமை கட்சியின் மூத்த தலைவர் அவர், அகில இந்தியாவுக்கும் தெரிந்த தலைவர். அவரை எதிர்த்து இவரை நாடாளுமன்ற தேர்தலில் நிறுத்தியது காங்கிரஸ் கட்சி. சின்னப்பொண்ணு, இது போய் மலையை சாய்க்குமா என சொந்த கட்சியிலேயே ஏளனம் பேசியவர்கள் ஏராளம். இவர் பயந்துவிடவில்லை, மலையை எதிர்க்க தயக்கம் காட்டவில்லை, சூறாவளி பிரச்சாரம்; இடதுசாரிகளை எதிர்த்து அதுவரை யாரும் பேசாத பேச்சுகளைப் பேசினார். நீங்கள் மக்களின் தோழனல்ல என்றார். அவரின் பேச்சு மக்கள் மனதை மெல்ல அசைத்தது. தேர்தல் முடிவு, எதிர்த்துப் போட்டியிட்ட மலையை விட சுமார் 29 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் இளம் வயது எம்.பியாக 1984ல் இவரை அமர்த்தியது. இவர் மம்தா பானர்ஜி. அரசியலுக்கு மிக இளம் பெண்ணான இவரிடம் தோற்ற அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், பிற்காலத்தில் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகராக இருந்தவருமான சோம்நாத் சட்டர்ஜி.
 

young mamta


மலையை மடுவால் அசைக்க முடியும் என இளம் வயதிலேயே நிரூபித்தவர்,அதன் பின் அசைத்ததெல்லாம் குன்றுகளையல்ல, மலைகளைத்தான். வங்காளம் என்றாலே வரலாறுகள்தான். இந்தியாவின் வரலாற்று பக்கங்களை அரசியல், சமூகம், பொருளாதாரம், சமயம், கலை, உணவு என எந்தப் பிரிவுகளில் எழுதுவதாக இருந்தாலும் மேற்குவங்கத்தை தவிர்த்துவிட்டு எழுதவே முடியாது. அரசியல் புரட்சியாளர்களை, சமூக புரட்சியாளர்களை, மதபுரட்சியாளர்களை இந்தியாவுக்குத் தந்த மண் மேற்குவங்கம். அரசியலில் சுபாஷ்சந்திரபோஸ், பிபின்சந்திரபால், சித்தரஞ்சன்தாஸ், சமூக புரட்சி செய்த ராஜாராம் மோகன்ராய், ரவிந்திரநாத்தாகூர், மதத்தலைவர்கள் ராமகிருஷ்ணர், விவேகானந்தர், அரவிந்தர், கலையில் சத்தியஜித்ராய் போன்றவர்களை பெற்ற மாநிலம் மேற்குவங்காளம்.

 

somnath chatterjee

சோம்நாத் சட்டர்ஜி

மேற்குவங்க மக்கள் அமைதியானவர்கள், அடுத்தவர்களுக்கு உதவியென்றால் ஓடி வந்து முன் நிற்பார்கள். மக்களுக்கு எதிரான விவகாரம் என்றால் மக்கள் பொங்கிவிடுவார்கள். அதிரடியைத் தான் அந்த மாநிலம் விரும்பும். அதனால் தான் காந்தியை விட சுபாஷ் சந்திரபோஸைக் கொண்டாடினார்கள். அந்த வரிசையில் தான் மத்தியில் மதவாத, மக்கள் விரோத ஆட்சியை நடத்தும் மோடி ஆட்சியை எதிர்த்து கடும் குரல் கொடுத்து லேடி டைகர் என்கிற பெயரை பெருகிறார் பெங்காலின் முதல்வர் 'தீதி' மம்தாபானர்ஜி.

மேற்குவங்க அரசியல்

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது வங்காளத்தில் மத மோதல்கள் உருவாயின. அப்போது இந்துக்கள் அதிகமிருந்த பகுதி மேற்கு வங்கம் எனவும், இஸ்லாமியர்கள் அதிகமிருந்த பகுதி கிழக்கு வங்கம் என்கிற பெயரிலும் பிரிக்கப்பட்டது. கிழக்கு வங்கம் பாகிஸ்தானோடு இணைந்தபின் அது கிழக்கு பாகிஸ்தான் என பெயர் மாற்றமடைந்தது. பின்னர் கிழக்கு பாகிஸ்தான் தனி நாடாகி வங்கதேசம் என்கிற பெயரில் உள்ளது. மேற்குவங்கத்தின் பெரு நிலக்கிழார்களின் ஆதரவை காங்கிரஸ் பெற்றிருந்தது. விவசாய கூலி மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குடன் இருந்தது கம்யூனிஸ்ட் கட்சி, தொழிலாளர்களிடமும் ஆதிக்கம் செலுத்தியது. இருந்தாலும் பெருநிலக்கிழார்கள் ஆதரவால் 1948ல் இருந்து ஆட்சி பொறுப்பில் இருந்து வந்தது காங்கிரஸ் கட்சி.

 

kolkata



1967ல் மேற்குவங்கத்தில் விவசாயிகளுக்கு மின்சாரம் கிடையாது, அனைத்து தரப்பு மக்களிடம் வரி, வரியென அதிக வரிகள் வசூலிக்கப்பட்டது. உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடியது. மின்சார பற்றாக்குறையால் தொழிற்சாலைகள் இயங்கவில்லை. தொழிலாளர்கள் பராரியாகத் திரிந்தனர், திரும்பிய பக்கமெல்லாம் போராட்டம். இதைத் தடுக்க முடியாமல் காங்கிரஸ் அரசாங்கம் திணறியது. 'ஆண்டைகளே ஆண்டைகளே, எங்களை ஆண்டது போதும்' என குரல்கள் ஓங்கி ஒலித்தன.

 

Charu mazumdar

சாரு மஜும்தர்


மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவராக இருந்தார் சாரு மஜும்தர். வடபகுதியில் இருந்த விவசாயிகள் போராட்டக் களத்துக்கு வந்தனர். இதன் பின்னால் இருந்தது சாருமஜும்தர். போராடிய விவசாயிகளை ஆயுதம் கொண்டு அடக்கியது காங்கிரஸ் அரசாங்கம். நிலச்சீர்த்திருத்தம் வேண்டும் என்றார்கள் விவசாயக் கூலி மக்கள். நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் விவசாய நிலங்களை வைத்திருந்த நில உடமையாளர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய கூலி தொழிலாளர்களை துப்பாக்கி சூடு நடத்தி அடக்க முயன்றது.

 

naksalbari


மேற்குவங்கத்தில் குளிர்பிரதேசமான டார்ஜிலிங் அருகில் உள்ள கிராமம் நக்சல்பாரி. இந்தப் பகுதி முழுவதும் பெருநிலக்கிழார்களிடம் விவசாயத் தொழிலாளர்கள் அடிமையாக இருந்தனர், கொத்தடிமையாக நடத்தப்பட்டனர். உழைக்கும் மக்களுக்கே விவசாய நிலங்கள் சொந்தமென இடதுசாரிகள் போராட்டங்கள் நடத்தினார்கள். பெருநிலக்கிழார்களை எதிர்த்து இங்கு உருவாக்கப்பட்ட இயக்கம் நக்சல்கள் என்கிற பெயரிலேயே அழைக்கப்பட்டு பின்னர் அது பொதுப் பெயரானது. 'அரசாங்கம் ஆயுதம் தூக்கினால் நாமும் நம்மை காத்துக்கொள்ள ஆயுதம் தூக்குவோம். நம்மை காத்துக்கொள்ள, நம் உரிமைகளை பெற ஆயுதமே துணை என்றார் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்து புரட்சிகர இயக்கமான நக்சல் படையை உருவாக்கிய சாருமஜும்தர். அதன்பின் மேற்குவங்க அரசுக்கும் – நக்சல்களுக்கும் இடையே மோதல்கள் உருவாகி வறுமை தேசம், வன்முறை தேசமாக மாறியது.

 

mamta roaring



நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிலச்சீர்த்திருத்தம் கொண்டு வருவோம் என வாக்குறுதி தந்தனர் மேற்குவங்க இடதுசாரிகள். இது விவசாய கூலி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. 1977 பொதுத் தேர்தல் வந்தது. காங்கிரஸ் கட்சியை எதிர்த்து இடதுசாரி முன்னணி என்கிற பெயரில் கம்யூனிஸ்ட்கள் தேர்தலில் நின்றனர். அதுவரை மேற்குவங்கத்தில் ஆதிக்கம் செலுத்தி ஆட்சிப் பொறுப்பில் இருந்து வந்த காங்கிரஸ் கட்சியை தூக்கி எறிந்தனர் மக்கள். முதலமைச்சராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்தார்த் சங்கர் ராய் உட்பட பலரும் படுதோல்வி. 1948 முதல் 1977 வரை 28 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது. இடதுசாரிகள் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தனர். முதலமைச்சராக ஜோதிபாசு பதவிக்கு வந்தார். அடுத்த 22 ஆண்டுகள் இவரது ஆட்சியின் கீழ் இருந்தது மேற்குவங்கம்.


சித்தார்த் சங்கர் ராய், அதன்பின் அரசியல் செய்தாலும் படிப்படியாக ஓய்வு நிலைக்கு சென்றார். அவரால் வளர்க்கப்பட்ட மம்தா பானர்ஜி மேற்குவங்க காங்கிரஸில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவாகினார்.


இளம் பெண் அரசியல்வாதி வங்கப் புலியென அழைக்கப்படுமளவு உயர்ந்த கதையை வெள்ளிக்கிழமை (27-04-18) அடுத்த பகுதியில் காண்போம்...  
 

Next Story

“தேர்தல் வந்துவிட்டால் பிரதமர் மோடிக்கு மக்கள் மீது அன்பு வந்துவிடும்” முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
When the election comes PM Modi will love the people CM MK Stalin

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் தென்காசி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார், விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஆகியோரை ஆதரித்து ஸ்ரீவில்லிப்புத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “இதுவரை 10 மக்களவைத் தொகுதிகள் தேர்தல் பரப்புரை செய்துள்ளேன். நான் போகிற இடமெல்லாம் தி.மு.க. கூட்டணிக்கு அலை அலையாக மக்கள் ஆதரவு இருக்கிறது. மக்களின் மனநிலையைப் பார்த்தால் தி.மு.க. கூட்டணிக்கு 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி உறுதியாகிவிட்டது.

தாய் மற்றும் தந்தை போல் அரவணைப்போடு தமிழ்நாடு அரசு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசின் ஏதாவது ஒரு திட்டத்தில் ஒவ்வொரு குடும்பமும் பயன் பெறுகின்றனர். மாநிலம் முழுவதும் சுமார் 16 லட்சம் பள்ளிக் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் பசியாறுகிறார்கள். தாய்வீட்டுச் சீர் போல எங்கள் அண்ணன் ஸ்டாலின் மாதம் ரூ. 1000 தருகிறார் என 1.06 கோடி பெண்கள் கூறுகின்றனர். புதுமைப்பெண் திட்டம் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரு. 1000 வழங்கப்படுகிறது. அவர்கள் படித்து வேலைக்குச் சென்றால் அவர்கள் தங்க தோழி விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால்தான் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக வாக்கு கேட்டு வந்துள்ளேன். மக்களின் பெரும் ஆதரவே திராவிட மாடல் சாதனையின் அடையாளம். மக்களிடம் மாபெரும் எழுச்சியைப் பார்க்கிறேன். திராவிட இயக்கம் உருவானதே சமூக உரிமைக்காகத்தான். தி.மு.க.வின் அடிப்படைக் கொள்கையே சமூக நீதிதான். 100 ஆண்டுகளுக்கு முன் வகுப்புவாரி உரிமை சட்டம் வரக்காரணம் நீதிக்கட்சி தான். ஆனால் தமிழ்நாட்டின் உரிமைகளை பா.ஜ.க. அரசு தட்டி பறிக்கிறது. இட ஒதுக்கீடு, சமூக நீதிக்கு எதிரான திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது.

When the election comes PM Modi will love the people CM MK Stalin

சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் நலனுக்கு மத்திய பா.ஜ.க. அரசு என்ன செய்தது?. சீனப்பட்டாசுகளை இந்தியாவில் இறக்குமதி செய்வதை முழுமையாக தடை செய்வோம் என கூறினார்கள். ஆனால் இன்று வரை சட்ட விரோதமாக சீனப்பட்டாசுகள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லி மற்றும் மும்பையில் கோடிக்கணக்கான சீனப் பட்டாசுகள் கைப்பற்றபட்டன. இதனால் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் ரூ. 1000 கோடி அளவுக்கு சரிவை சந்தித்தது. இப்படி தொழில் நலிவடைந்துள்ள நேரத்தில், ஆடம்பரப் பட்டியலில் பட்டாசை சேர்ந்து 28 சதவிதம் ஜி.எஸ்.டி. வரி விதித்த கட்சிதான் பாஜக. கொரோனாவிற்கு பின் பட்டாசு தொழில் நலிவடைந்த போது மத்திய பா.ஜ.க. அரசு எதுவும் செய்யவில்லை.

When the election comes PM Modi will love the people CM MK Stalin

பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என நாடகம் போடுகிறார் அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி. ஆனால் பா.ஜ.க. கூட்டணியில் இருந்த போது தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி. ஆளுநர் தனக்கு பிரச்சனை தராததால் அவரை எதிர்க்க வேண்டியதில்லை என எடப்பாடி பழனிசாமி அறிவுக்கொழுந்தாக பேசியுள்ளார். ஆளுநருக்கும் மு.க. ஸ்டாலினுக்கும் என்ன தனிப்பட்ட பிரச்னை இருக்கிறதா?. தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக ஆளுநர் இருக்கிறார். அதனால், அவரை எதிர்க்கிறோம். எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கவில்லை என்றால் அவருக்கு சொரணை இல்லை என்று தான் பொருள்.

When the election comes PM Modi will love the people CM MK Stalin

தேர்தல் வந்துவிட்டால் பிரதமர் மோடிக்கு மக்கள் மீது அன்பு வந்துவிடும் கேஸ் சிலிண்டர், டீசல் மற்றும் பெட்ரோல் விலையைக் குறைத்துவிடுவார். ஆனால் இதன் விலையை உயர்த்தியது யார்?. மகளிர் தினத்தன்று கேஸ் சிலிண்டர் விலையைக் குறைத்தார். எல்லாம் வருடமும்தான் மகளிர் தினம் வருகிறது, அப்போதெல்லாம் விலையைக் குறைத்ததில்லை. தேர்தல் வரும்போது தான் பிரதமர் மோடிக்கு கருனை வந்துவிடுகிறது. தேர்தலுக்குத் தேர்தல் மட்டும் கருணை சுரக்கும் வித்தியாசமான குணம் அவருக்கு உள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி நடத்தும் நாடகம் ஆகும்.

சொன்னதை செஞ்சிட்டுதான் உங்கள் முன் தெம்போடு நிற்கிறேன். பேசுகிறேன். ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்கல்வி படிக்கக் கூடாது என பா.ஜ.க. கூறுகிறது. சிறுபான்மையினருக்கு மட்டும் அல்ல பெரும்பான்மைக்கும் எதிரானது தான் பா.ஜ.க. அரசு. சமூக நீதியை நிலைநாட்ட இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். பிரதமர் மோடி உறுதியளிக்கும் வாக்குறுதிக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி செய்தது என்ன. கடந்த 10 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சி இந்தியாவை படுகுழியில் தள்ளியது. இந்தியாவை மீட்க வேண்டும் அதனால்தான் இந்தியா கூட்டணியை உருவாக்கினோம்” எனப் பேசினார். 

Next Story

“பிரதமர் மோடி விஸ்வகுருவா? அல்லது மெளனகுருவா?” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Is Prime Minister Modi Vishwaguru or Melanaguru CM MK Stalin

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மக்களவை தொகுதிகளுக்கான தி.மு.க. மற்றும் அதன் கூட்டணியின் வேட்பாளார்களை ஆதரித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டையபுரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை இன்று (26.12.2024) மேற்கொண்டார்.

இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர்  மு.க. ஸ்டாலின் பேசுகையில், “வரும் மக்களவைத் தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்றுகின்ற அறப்போராட்டம். சர்வாதிகாரத்தில் இருந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டிய தேர்தல் இது. மதத்தின் பெயரில் அரசியல் செய்யும் பா.ஜ.க.வுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் வைக்கப்பட்ட கரும்புள்ளி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் ஆகும். அன்று கேட்ட மரண ஓலம் இன்றும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. செய்திகள் மூலம் தான் தூப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி தெரிந்து கொண்டேன் என்று அப்போதைய முதலமைச்சர் பழனிசாமி சொன்னது பொய். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தூத்துக்குடியில் துப்பாக்கிசூடு நடத்தி 13 பேர் கொலை செய்யப்பட்டனர். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்து தான் துப்பாக்கி சூடு நடந்துள்ளது என நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமே தெரிவித்துள்ளது.

Is Prime Minister Modi Vishwaguru or Melanaguru CM MK Stalin

தூத்துக்குடி கலவரத்தில் ஈடுபடாதவர்கள் மீது அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்பட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்பதற்கு உச்சநீதிமன்றத்தில் வலுவான வாதத்தை தமிழ்நாடு அரசு முன் வைத்துள்ளது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் கட்சத்தீவு மீட்கப்படும் என்று கூறினீர்களே. அது நடந்ததா?. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை மீட்டு ரூ.15 லட்சம் தருவோம் என்று சொன்னீர்களே. அதனை செய்தார்களா. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்து ஆடுகிறது. விவசாயிகளை எதிரி போல் நடத்துவது தான் பா.ஜ.க.வின் அரசின் மாடலா. தி.மு.க. அரசின் கொள்கை எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே ஆகும். பேரு மட்டும் பிரதமர் வீடு கட்டும் திட்டம். ஆனால் அதில், 60% நிதி மாநில அரசுதான் தருகிறது. இப்படி ஸ்டிக்கர் ஒட்டி கேவலமாக பிரசாரம் செய்கின்றனர்.

Is Prime Minister Modi Vishwaguru or Melanaguru CM MK Stalin

பழனிசாமி யார்?. நேற்று யாரோடு இருந்தார்?. இன்று யாரோடு இருக்கிறார்? நாளை யாருடன் இருப்பார்?. நேரத்திற்கு ஏற்றார் போல் மாறுவார் என்பதை மக்கள் எடை போட்டு தீர்ப்பளிப்பார்கள். பழனிசாமி அவர்களே உங்களுக்கு முன்னாள், இன்னாள் கிடையாது என்னாளும் பா.ஜ.க.தான் எஜமானரா?. மோடியை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாத பாதம்தாங்கி பழனிசாமிதான் தமிழ்நாட்டை காப்பாற்றப் போகிறாரா?. பழனிசாமி அவர்களே! மாநில உரிமைகளை அடகு வைத்ததே நீங்கள்தான். மோடி பற்றி பாசாங்கிற்குகூட பத்து வார்த்தை பேசாத பழனிசாமி, மாநில உரிமைகளை மீட்கப் போகிறாராம். பச்சைப் பொய் பழனிசாமினு மக்கள் சும்மாவா சொன்னாங்க. தி.மு.க. - அ.தி.மு.க. இடையே தான் போட்டி என எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்காரு. அந்த அளவிற்காவது அவருக்கு புரிதல் இருக்கே என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. பழனிசாமி அவர்களே களத்தில் மோதுவோம் மக்கள் தீர்ப்பளிக்கட்டும்.

Is Prime Minister Modi Vishwaguru or Melanaguru CM MK Stalin

தமிழக மீனவர்கள் கைது, அபராதம் விதிப்பு, படகுகள் பறிமுதல் என மோடி ஆட்சியில் இலங்கை அரசு அறிவிக்கப்படாத போரை நடத்திக் கொண்டிருக்கிறது. மீனவர்கள் விவகாரத்தில் வாய் திறக்காத பிரதமர் மோடி விஸ்வகுருவா? அல்லது மௌனகுருவா?. கச்சத்தீவு மீட்கப்படும் என்று சுஷ்மா ஸ்வராஜ் சொன்னார். ஆனால் இன்று வரை பா.ஜ.க. அரசு அதை செய்துள்ளதா. தமிழக மீனவர்களை காக்கத்தவறிய மோடி எந்த முகத்தை வைத்து வாக்கு கேட்க வருகிறார்” எனத் தெரிவித்தார்.