Skip to main content

"கலைஞரின் சாய்ஸ் கால் கிலோ பட்டாணி, பொறிகடலை" - குசேல நண்பர் சொல்லும் நட்பு ரகசியம்

Published on 12/08/2018 | Edited on 03/06/2021

திருவாரூர் மாவட்டம் திருக்குவளை அருகே உள்ளது பைங்காநாடு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். விறகு வியாபாரம் செய்யும் இவரது குடும்பத்தினர் கடந்த காலத்தில், அதாவது கலைஞரின் அப்பா காலத்தில் அவர்கள் வீட்டுக்கு விறகு விற்று வந்துள்ளனர். அப்போது ராமலிங்கம் மகன் ஜெயகுமார் சிறுவன். தனது அப்பாவோடு விறகு விற்க போகும்போது கலைஞர் குடும்பத்துடன் அறிமுகம். காலம் உருண்டது, பிழைப்புக்காக உளுந்தூர்ப்பேட்டைக்கு வந்த ராமலிங்கம் இங்கே பொரிகடலை கடை வைத்தார். வியாபாரம் சூடுபிடித்தவுடன் விறகு வியாபாரத்தை விட்டுவிட்டு உளுந்தூர்ப்பேட்டையிலேயே குடும்பத்தோடு தங்கினார்.


 

kalaingar


 

முத்துவேலர் மகனான கலைஞர் அரசியலில் வளர்ச்சியடைந்து வந்த நேரம். பொதுக்கூட்டங்களுக்கு சென்னையில் இருந்து வெளியூர் செல்லும்போது உளுந்தூர்பேட்டை கடந்துதானே போக வேண்டும்... அப்படி கலைஞர் போகும்போது ராமலிங்கத்தை தற்செயலாக சந்தித்தார். 'என்ன தொழில், எங்கே இருக்கீங்க?' என்று நலம் விசாரித்தார். உளுந்தூர்ப்பேட்டை பேருந்து நிலையம் அருகே பட்டாணிக் கடை வைத்துள்ளதைச் சொல்ல, அப்படியே 'உன் கடைப் பட்டாணியைக் கொடு' என்று கேட்டார் கலைஞர். ஓடிப்போய் பட்டாணிப் பொட்டலம் எடுத்து வந்து கொடுத்தார். அதை ஆசையோடு சாப்பிட்ட கலைஞர், 'ரொம்ப ருசியாக இருக்கே... இதே சுவையோடு தயாரித்து விற்பனை செய்யுங்க, வியாபாரம் செழிக்கும்' என்று கூறிவிட்டுச் சென்றாராம்.

 

 


அப்போது முதல் சென்னையில் இருந்து தென்தமிழகத்துக்குப் போகும்போது தென்பகுதியில் இருந்து சென்னைக்குத்  திரும்பும்போதும் அவரது கார் ராமலிங்கம் பட்டாணிக்கடை முன்பு நிற்கும், பட்டாணிப் பொட்டலத்தோடு ஓடோடி வருவார் ராமலிங்கம். நலம் விசாரிப்புக்குப் பிறகு பட்டாணி பொட்டலத்தை வாங்கிக்கொண்டு கலைஞர் புறப்படுவார். ராமலிங்கம் காலமான பிறகு அவரது மகன் ஜெயக்குமார் கலைஞருக்குப் பட்டாணி பொட்டலம் கொடுப்பது தொடர்ந்து, கலைஞர் பேச்சாளராக, அமைச்சராக, முதல்வராக எத்தனை உயரமான பதவிகளின் படிகளில் ஏறியபோதும் பட்டாணிக் கடைக்காரரிடம்  நட்புடன் பட்டாணி வாங்கி செல்வது நீடித்தது.

 

 


ராமலிங்கம் மகன் ஜெயக்குமார் இதையெல்லாம் பெரிதாக வெளியே சொல்லி அலட்டிக் கொள்வதில்லை. அதேபோல் சென்னை செல்லும்போது குடும்பத்தினருடன் சென்றாலும் தனியாகச் சென்றாலும் கலைஞர் வீட்டில் எந்தத் தடையும் இல்லாமல் நேரே சென்று சந்தித்துவிட்டுப் புறப்படுவார். அந்த அளவிற்கு கலைஞர் உதவியாளர், மனைவி, மகன் ஸ்டாலின் உட்பட அனைவருக்கும் தெரிந்த நட்பு இது. கலைஞருக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டாலும் போதும் ஜெயக்குமார் சென்னை சென்று கலைஞரை பார்த்துவிட்டு வருவார். எப்போது போனாலும், 'என்ன கொண்டு வந்தாய்' என்று கேட்க பட்டாணி பொட்டலத்தை நீட்டுவாராம் ஜெயக்குமார். பேச்சாற்றல் குறைவதற்கு சில நாட்களுக்கு முன்பு போய் கலைஞரை பார்க்க, என்ன கொண்டு வந்தாய் என்று கேட்டார். பட்டாணி, பொறி, வறுகடலை ஆகியவை கால், கால் கிலோ (எப்போதும் கால்கிலோதான் அளவாம்) எடுத்துக் கொடுக்க ஆசையோடு வாங்கினாராம் கலைஞர். அதன் பிறகு இதுபோன்று உணவு சாப்பிடும் நிலையிலேயே இல்லை. இன்று கலைஞர் இல்லை என்பதை நினைக்கும்போது தாங்கமுடியவில்லை" என்கிறார் ஜெயக்குமார்.

 

 

kalaingar

 


கலைஞர் ஜெயக்குமாரிடம் காட்டும் அன்பைப் பார்த்து நெகிழ்ந்த ஸ்டாலினும் ஜெயக்குமார் எப்போது போனாலும் அன்பாகப்  பேசி உபசரிப்பாராம். அப்பாவிடம் அழைத்துப்போய் விடுவாராம். அதே போல் இப்பகுதிக்கு வரும்போது தூரத்தில் ஜெயக்குமார் தலை தெரிந்தாலும் கூட கிட்டே அழைத்து நலம் விசாரிக்காமல் செல்வது இல்லை. கடைசியாக கலைஞரைப் பார்க்கச் சென்றபோது ஸ்டாலின் வீட்டுக்குப் போயுள்ளார். ஸ்டாலின், உதயநிதியிடம் ஜெயக்குமார் - கலைஞர் நட்பைப் பற்றி சொல்ல நெகிழ்ந்துபோன உதயநிதி, 'தாத்தா, தாத்தா' என்று அன்பாகப் பேசி கவனித்துக் கொண்டாராம். 'கலைஞர் குடும்பத்தின் மூன்று தலைமுறையினரும் எங்களுக்குக் கொடுக்கும் மரியாதை, அன்பு, உபசரிப்பு எங்களுக்கு கிடைத்த வரம்; என்கிறார் ஜெயக்குமார்.

 

 


'இந்த நட்பின் மூலம் எந்தவிதமான உதவிகளையும் கேட்டது இல்லை, கேட்கப்போவதும் இல்லை. அவர்களது நட்பே எங்களுக்குப் போதும்' என்கிறார். 70 வயது ஜெயக்குமாருக்கு கேட்கும் திறன் குறைவாக உள்ளது. அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள். பட்டாணி வியாபாரத்தின் மூலம் வாழ்ந்தாலும் கலைஞர் பேச்சை எடுத்தால் அவரது முகம் சூரியனைப்போல பிரகாசமாகிறது. கலைஞரின் குசேலன் ஜெயக்குமார்.

 

 

 

 

Next Story

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுமி பலியான வழக்கு; வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Shocking information that came out on A case where a girl was incident on her birthday

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி மான்வி., கடந்த மார்ச் 24ஆம் தேதி மான்வி தனது 10 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்காக, மான்வியின் தந்தை பாட்டியாலாவில் உள்ள பேக்கரியில் ஆன்லைன் மூலம் கேக் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

அதன்படி, விநியோகிக்கப்பட்ட கேக்கை, மான்வி தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கேக்கை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, சிறுமி மான்விக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிறுமி மான்வி சிகிச்சை பலனின்றி, தன் பிறந்த நாளிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, சிறுமி மான்வி பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர், கேக் ஆர்டர் செய்த பேக்கரி மீது போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், ஆர்டர் செய்யப்பட்ட கேக்கின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையின் முடிவானது தற்போது வெளியாகியுள்ளது. அதில், சிறுமி மான்வி சாப்பிட்ட கேக்கில் அளவுக்கு அதிகமான சாக்கரின் எனப்படும் இனிப்புச்சுவை பயன்படுத்தப்பட்டிருந்ததால், மான்வி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பேக்கரி கடை உரிமையாளரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.