Skip to main content

இந்த மிரட்டலையெல்லாம் ஜெ. ஆட்சியிலேயே சந்திச்சிட்டோம்: அண்ணாமலை ஆவேசப் பேட்டி

Published on 28/01/2019 | Edited on 28/01/2019

                                                                           

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 22ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 28ஆம் தேதி மாலைக்குள் பணியில் சேராத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலி பணியிடங்களாக கருதப்பட்டு, தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது.
 

போராட்டம் தொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் சிறப்பு பேட்டி அளித்துள்ளார் அகில இந்திய செயலாளர் (ஐபெட்டோ) வா.அண்ணாமலை.

 

annamalai


 

இந்தப் போராட்டத்தில் அரசியல் பின்னணி இருப்பதாக ஆளும் கட்சியினர் கூறுகிறார்களே?
 

அரசியல் பின்னணி எதுவும் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் இல்லை என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன். 
 

மாணவர்களின் பொதுத்தேர்வு நேரத்தில் உங்களின் போராட்டம் நியாயமானதா?
 

மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார் செய்ய வேண்டியது ஆசிரியர்கள். அந்த பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்து வைத்துவிட்டுத்தான் இந்த போராட்டத்தை ஆசிரியர்கள் நடத்துகிறார்கள். இந்த போராட்ட நிலைமைக்கு தள்ளப்பட்டது அரசுதானே தவிர, ஆசிரியர்கள் அல்ல.

 

jacto geo

                                                                            அரியலூர்

நீதிமன்றம் செல்லலாமே?

 

நீதிமன்றமே, ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகள் குறித்து அரசு அழைத்து பேச வேண்டும் என்று கூறியது. உயர்நீதிமன்றம் பலமுறை வலியுறுத்தியும் கூட அழைத்து பேச முன்வராமல் இந்தப் போராட்டத்தை அலச்சியப்படுத்துவதன் காரணத்தினால்தான் ஒவ்வொரு நாளும் இந்த போராட்டத்தினுடைய வீச்சு அதிகமானது. இன்னொன்று அடக்குமுறையால் எந்த ஒரு போராட்டத்தையும் அடக்கிவிட முடியாது. இன்று மட்டும் வேலைநிறுத்தத்தில் ஐந்து லட்சம் பேர் கலந்து கொண்டனர். 10 லட்சம் பேர் வெளியில்தான் இருக்கிறார்கள். 
 

jacto geo

                                                                        செங்கல்பட்டு
 

அரசு ஊழியர்களிலேயே ஆசிரியர்களுக்குத்தான் ஊதியம் அதிகம். அப்படியிருந்தும் ஏன் பென்சன் கேட்கிறார்கள். விவசாயி உள்பட நாட்டில் எத்தனையோ தொழிலாளிகள் பென்சன் பெறுகிறார்களா? என பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகிறதே? 
 

பொதுமக்களை பொறுத்தவரையில் ஆசிரியர்கள் தனிப்பட்ட நபர்கள் அல்ல. எல்லோருடனும் அன்றாடம் வாழ்ந்து வருபவர்கள். தொப்புள்கொடி உறவு உள்ளவர்கள். அதேபோல் மாணவர்கள் - ஆசிரியர்களுடனான உறவினையும் வேறு யாரும் பங்குபோட முடியாது. வேண்டுமானால் இந்த அரசு நாடகமாக அறிக்கைகள் மூலம் செய்யலாம். 
 

இந்த நாட்டினுடைய முதுகெலும்பு விவசாயிகள். விவசாயிகள் போராடுகிறபோது, இந்த நாடே விவசாயிகள் பின்பு நின்றிருக்க வேண்டும். அப்படி நிற்கவில்லையே யாரும்? விவசாயிகளுக்காக விவசாயிகள்தான் போராடுகிறார்கள். அதேபோல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பென்சனுக்காக எந்த ஆட்சி வந்தாலும் போராட்டம் நடத்தி வருகிறோம். 

 

jacto geo

                                                                            புதுக்கோட்டை


ஊதியத்தைப் பற்றி சொல்ல வேண்டுமானால் மத்திய அரசுக்கு இணையான ஊதிய விகிதம் இன்னும் தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு தரப்படவில்லை. அமைச்சர் ஜெயக்குமாரின் அறிக்கையில், 20 ஆண்டு காலம் பணியாற்றியவர்களுக்கு இருக்கக்கூடிய ஓய்வூதியத்தைத்தான் வெளியிட்டிருக்கிறாரே தவிர, ஒரு நேரடி நியமனமானவர்களுக்கானது இல்லை. நேரடி நியமனமானதில் ஊதியம் குறைவு என்று இடைநிலை ஆசிரியர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு நாள் வித்தியாசத்தில் நியமனம் செய்யப்பட்டவர்களுக்குக் கூட 15 ஆயிரம் ரூபாய் வித்தியாசம் வருகிறது என்று சொல்லுகிறார்கள்.
 

சொல்லுகின்ற கருத்துக்களைவிட்டுவிட்டு மானாவாரியாக அறிக்கைகளை விடுகிறார் அமைச்சர் ஜெயக்குமார். கல்வி அமைச்சர் ஒன்று சொல்கிறார், முதல் அமைச்சர் ஒன்று சொல்கிறார். இப்படி ஒவ்வொருத்தரும் தங்களின் வார்த்தை ஜாலத்தை காட்டுவதால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 12 லட்சம் பேரின் விரோதத்தை சம்பாதித்துக்கொள்கிறார்கள். 7 லட்சம் ஓய்வூதியதாரர்கள் குமுறிக்கொண்டிருக்கிறார்கள். 

 

jacto geo


                                                                      திருநெல்வேலி


ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஏறத்தாழ 20 லட்சம் பேர் இந்த அரசு வகுக்கின்ற அத்தனை திட்டங்களையும் மக்கள் மத்தியில் சேர்க்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக இவர்கள் செயல்படுகிறார்கள். ஒரு வீட்டிற்கு 10 வாக்குகள் என்று வைத்துக்கொண்டால்கூட 2 கோடி வாக்காளர்கள்.  அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டு இவர்களுடைய பிடிவாதத்தால் இந்த அரசுக்கு எதிராக எந்த தேர்தல் நடந்தாலும் அவர்கள் நிச்சயமாக வெறுப்புணர்வின் உச்சக்கட்டத்திற்கு தள்ளப்படுகிறார்கள் என்றுதான் எங்களால் இதன் மூலமாக இந்த அரசுக்கு உணர்த்த முடியும்.
 

அரசு வருமானத்தில் 70 சதவீதம் அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கு செல்கிறது. மீதி உள்ள 24 சதவீதம் அரசு வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுகிறோம். மீதி உள்ள 6 சதவீதம் தான் ஏழை எளிய மக்களுக்கு உதவக் கூடியதாக இருக்கிறது என்கிறதே ஆளும் தரப்பு? 
 

நாட்டை வழிநடத்துபவர்கள், நாட்டின் நலப்பணித்திட்டங்களை செயல்படுத்தக்கூடிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுடைய ஊதியம் அது. இதில் அமைச்சர்கள் ஊதியம், எம்எல்ஏக்கள் ஊதியம், ஐஏஎஸ் அதிகாரிகளின் ஊதியமும் உள்ளது. நாட்டை நடத்துகிற தலைமைச் செயலாளர் ஊதியமும் இருக்கிறது. இதில் பெறுகிற ஊதியம் மூலதனம்போலத்தான். 36 சதவீதம்தான். இந்த 36 சதவீதமும் தவிர்க்க முடியாத ஒன்று. முதலமைச்சர் ஊதியமும் இதில் அடங்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். தவறான புள்ளிவிவரத்தை கொடுத்து மக்கள் மத்தியில் ஏமாற்ற வேண்டாம். 
 

எம்எல்ஏக்களுக்கு இரண்டு மடங்கு ஊதியத்தை உயர்த்தியிருப்பதை, அவர்களுக்கு பென்சன் இருப்பதை ஏன் முதல் அமைச்சர் சொல்லவில்லை. ஐந்தே கால் லட்சம் பேர் புதிய ஓய்வூதியத்திட்டத்தின்படி பணிக்கு சேர்ந்தவர்களிடம் மாதம் 10 சதவீதம் பிடித்தம் செய்கிறார்கள். அவர்கள் 10 சதவீதம் போடுகிறார்கள். இந்தத் தொகை 15 ஆயிரம் கோடி ரூபாய் எங்கு இருக்கிறது என்று இதுவரை தெரியவில்லை. இந்த நலத்திட்டங்களுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்து செலவிடுகிறார்கள் என்று நாங்கள் சொல்லுகிறோம். எந்த பதிலும் இல்லையே? ஓய்வூதிய அமைப்பிற்கு தமிழக அரசின் தொகை இன்னும் வந்து சேரவில்லை என்கிறது மத்திய அரசு. இப்படி
இருந்தால் எங்கள் நிலைமை என்ன? காடு வரையிலான உறவு பென்சன் உறவுதான். 
 

jacto geo

                                                                                ஈரோடு
 

ஓராண்டு எம்எல்ஏவாக இருந்தாலே முழு ஓய்வூதியம் என்கிறபோது, 2003ல் வேலைக்கு வந்து 2019 வரை 16 ஆண்டுகாலமாக ஓய்வூதியமே இல்லாமல் இருக்கிறார்களே. இதையெல்லாம் கேட்கத்தானே சங்கம் இருக்கிறது. 15 ஆயிரம் கோடி ரூபாய் எங்கள் பணம் எங்கே போனது? அதற்கு பதில் சொல்ல வேண்டும். இறந்துபோனவர்களுக்கு உடனே பணம் கொடுக்கப்படவில்லை. ஓய்வு பெற்றவர்களுக்கு உடனே பணம் செட்டில்மெண்ட் பண்ணவில்லையே. 
 

2016 தேர்தல் நேரத்தில் புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வு திட்டத்தை அமுல்படுத்துவதாக ஜெயலலிதா எங்களிடம் சத்தியம் செய்தார். அம்மா அரசு அம்மா அரசு என்று சொல்கிறீர்களே. ஏன் அம்மா சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. 

 

jacto geo

                                                                            சென்னை
 

 நீங்கள் கொடுக்கும் அறிக்கைப்போல நாங்களும் கேட்க ஆரம்பிப்போம். எங்களுக்கும் அந்த உரிமை இருக்கிறது. ஒவ்வொரு அமைச்சருக்கும் என்ன சொத்து விவரம்? அன்றைக்கு எப்படி இருந்தார்கள். இன்றைக்கு எப்படி இருக்கிறார்கள். கடந்த கால வரலாறு என்ன? அனைத்து துறைகளிலும் ஒவ்வொரு இடமாற்றத்திற்கும் லட்சக்கணக்கில் லஞ்சம் பெறவில்லை என்று சொல்ல முடியுமா? உயர்கல்வித்துறையில் இல்லாத ஊழல் இருக்கிறதா? நாங்கள் அறிக்கையை எடுத்து வீச ஆரம்பித்தோம் என்றால் உங்கள் எதிரிகளைவிட அதிகமாக சொல்லமுடியும். போதுமான ஆதாரங்கள் எங்களிம் இருக்கிறது. அதையெல்லாம் வீதிக்கு கொண்டு வருவோம். 
 

எல்.கே.ஜி. வகுப்புகளை தொடங்குகிறார்கள். அதற்கான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அதில் ஏன் தொடக்கப்பள்ளி, இடைநிலை ஆசிரியர்களை போட வேண்டும். இந்த துறை வேறு. அந்த துறை வேறு. எங்கள் விருப்பத்தை கேட்காமலேயே ஏன் செய்ய வேண்டும். எங்கள் விருப்பத்தை கேட்காமலேயே செய்வதற்கு விதிகளில் இடமிருக்கிறதா? ஏன் உத்திரப்பிரதேசம், குஜராத் அரசை பின்பற்றுகிறீர்கள். அந்த கல்விமுறை நமக்கு தேவையில்லை. தமிழ்நாடு தமிழ்நாடாக இருக்கட்டுமே.
 

காமராஜர் ஆட்சியில் பள்ளிக்கூடங்களை திறந்தார்கள். இப்போது பள்ளிகளை மூடுகிறார்கள். இணைப்பதும், மூடுவதும் ஒன்றுதான். 25 சதவீதம் இலவச கட்டாய கல்வியில் எந்த தனியார் பள்ளியில் வேண்டுமானாலும் சேரலாம் என்கிறார்கள். அதனால் அரசு பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் இலவச கல்வி கிடைக்கிறது என்று போய் சேருகிறார்களே.

 

jacto geo


 

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிக்கூடங்களில் சேர்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே?
 

எங்களைப்போன்ற தலைவர்கள் எங்கள் பிள்ளைகளை முற்றிலும் அரசுப் பள்ளியில்தான் படிக்க வைத்தோம். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அரசுப் பள்ளியில் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறோம். ஆசிரியர்களை மட்டுமே ஏன் சொல்ல வேண்டும். அதேபோல் கலெக்டர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உயர் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும். 
 

இந்த சுகாதாரத்துறை அமைச்சரும், சுகாதாரத்துறை செயலாளரும் அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் இருக்கிறது என்று சொல்லும்போது அதிகாரிகளும், மந்திரிகளும் தங்களுக்கு ஏதேனும் வந்தால் அரசு மருத்துவமனைக்குத்தானே போக வேண்டும். ஏன் தனியார் மருத்துவமனைக்கு செல்கிறீர்கள். தங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் ஏன் அரசு மருத்துவமனையை மந்திரிகள் நம்பி செல்வதில்லை. அப்போ ஆளுக்கொரு நீதியா? அரசுப் பள்ளியைமுதலில் கலெக்டர், எம்எல்ஏக்கள், மந்திரிகள் நம்புங்கள். அதேபோல் அரசு மருத்துவமனையை நம்புங்கள். 
 

இன்னொன்று தனியார் பள்ளிகளை நடவத்துவது அரசியல்வாதிகள்தான். மறைமுகமாக அரசு பள்ளிகளை தேயவைத்து தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கத்தான் இந்த ரகசிய திட்டங்களை செய்துகொண்டிருக்கிறார்கள். புத்தகம் கொடுத்தார்கள். நோட்டு கொடுக்கவில்லை. இலவசம் என முலாம் பூசப்பட்ட இவர்கள் கொடுத்த சைக்கிள்களை ஓட்ட முடியுதா? பள்ளிக்கு தரக்கூடிய பொருள்கள் ஒவ்வொன்றும் தரமானதாக தருகிறார்களா? அடிப்படை கல்வியை கொடுப்பதற்கான வசதியை அரசு ஏற்படுத்தி தரவில்லை. 

 

jacto geo


தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தொடங்கிவிட்டார்களே?
 

இது எங்களை மிரட்டுவதற்காக செய்வது. பணமே இல்லை என்கிறார்கள். பிறகு எப்படி தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் தருவார்கள். ஏமாற்று வேலை. இந்த மிரட்டலையெல்லாம் 2003ல் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலேயே சந்தித்தோம். ஒன்றே முக்கால் லட்சம் பேரை நிரந்தர பணிநீக்கம் செய்தார்கள். அத்தனைப் பேரையும் வேலையில் உட்கார வைத்து அந்த போராட்டக்காலத்திற்கும் ஊதியம் பெற்றுத்தந்த அமைப்புத்தான் ஜாக்டோ ஜியோ. 
 

ஒரு ஜனநாயக அரசு செய்யக்கூடிய வேலையா இது. எம்.ஜி.ஆர். அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். கலைஞர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். ஜெயலலிதா அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். ஆசிரியர்கள், பணியாளர்கள், அரசு ஊழியர்கள், இந்த நாட்டில் உள்ள அத்தனை பங்களிப்புகளிலும் பணியாற்றக்கூடியவர்களை முதல் அமைச்சர் அழைத்து பேச வேண்டும். பிரச்சனையை கேட்க வேண்டும். 19 லட்சம் பேர் போராட்டத்தில் உள்ளார்கள். அவர்களை அழைத்து இந்த முதல் அமைச்சர் பேசவில்லை என்றால் இந்த ஆட்சியை, அரசை அலட்சியப்படுத்துகிறார்களா? எந்த காலத்திலேயும் சங்கங்கள் நிலைத்து நிற்கும். ஆனால் ஆட்சியில் நிரந்தரமாக இருந்தவர்கள் என்ற வரலாறு எவருக்கும் இல்லை. 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Next Story

“என்ன தேர்தல் நடக்கிறது என்று கூட அவருக்கு தெரியவில்லை” - தி.மு.க வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
DMK candidate CN Annadurai crictized edappadi pazhaniswamy for lok sabha election

மக்களவைத் தேர்தல், முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தொடங்கப்படும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நக்கீரன் சார்பாக அவரைப் பேட்டி கண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு சி.என்.அண்ணாதுரை அளித்த பேட்டி பின்வருமாறு...

2014 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தீர்கள். அதனைத் தொடர்ந்து மீண்டும் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தீர்கள். அப்போது கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் என்ன? இதுவரை தொகுதிக்கு செய்தது என்ன?

“ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக என்னென்ன வாக்குறுதிகளை கொடுத்தேனோ அதை ஒரு ஆளுங்கட்சி எம்.பி செய்வதை விட அதிகமாக நான் செய்திருக்கிறேன். 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி இருக்கிறோம். அதேபோல், கொரோனா காலத்தில் ஏழை எளிய மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அதை சரிப்படுத்தும் விதமாக பி.எஸ்.என்.எல் டவர் இரண்டு கட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த டவர்கள் எல்லாம் பயன்பாட்டுக்கு வரும். அதிகபட்சமான கிராம சாலைகள், மூன்று ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதே போல் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தியுள்ளோம்”

இந்த 2024 மக்களவைத் தேர்தலில் என்ன வாக்குறுதி கொடுத்திருக்கிறீர்கள்?

“எதிர்க்கட்சி வரிசையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது மோடி அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தோம். ஆனால், பாஜக தமிழ்நாட்டைத் திட்டமிட்டு புறக்கணித்தார்கள். அதையும் தாண்டி, போராடி சில திட்டங்களை அதிகாரிகளின் துணையுடன் செய்திருக்கிறோம். அந்த வகையில் தொகுதி மக்களுக்காவும், தொகுதி பிரச்சினைக்காகவும் நாடாளுமன்றத்தில் 507 கேள்விகள் கேட்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் இருந்து அதிகமாக கேள்வி எழுப்பியதில் இது இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது

மோடி அரசாங்கத்துக்கோ, மோடி அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களுக்கோ தமிழ்நாட்டிற்கு செய்ய வேண்டும் என்று ஒரு துளி கூட அக்கறை இல்லை. திட்டமிட்டு அவர்கள் புறக்கணித்தார்கள். எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் போது இவ்வளவு திட்டங்கள் கொண்டு வந்திருக்குறோம் என்றால்  ஆளுங்கட்சி வரிசையில் அனைத்து ஒன்றிய அரசு திட்டங்களையும் கண்டிப்பாக இந்த திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி கொண்டு வந்து இந்த பகுதி வளர்ச்சிக்கும் மக்களுடைய வளர்ச்சிக்கும் கண்டிப்பாக நான் துணையாக இருப்பேன்”.

திமுக தேர்தல் அறிக்கையும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையும் ஒரே மாதிரியாக இருக்கிறதே?

“இந்த இரண்டு கட்சிகளும் ஒத்த கருத்து உடையது தானே. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக பாடுபட்டார். ஆனால் இந்த தேர்தலுக்குப் பிறகு, இந்தியாவுடைய வளர்ச்சிக்கு ராகுல் காந்தியோடு துணையாக இருந்து செயல்படுவார்”.

காங்கிரஸ் அறிவித்த மகாலட்சுமி திட்டத்தின் மூலம் ஏழைப் பெண்களுக்கு ஒரு லட்சம் கொடுப்பது எப்படி சாத்தியம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறார்களே?

“எத்தனையோ கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், அம்பானிக்கும், அதானிக்கும் பல லட்சம் கோடி தள்ளுபடி செய்யும் போது, ஏழை மக்களுக்கு கொடுக்கும்போது மட்டும் அது சாத்தியமாகாதா?. இந்த திட்டம் கண்டிப்பாக சாத்தியப்படும். அதனால், தேர்தல் அறிக்கையில் கொடுத்திருக்கிறோம்”.

இந்தியா கூட்டணி வாரிசு கூட்டணி என்றும் ஊழல் குற்றம் இல்லை என்றும் விமர்சனம் செய்து வருகிறார்களே?

“உலக வரலாற்றிலேயே பா.ஜ.க ஆட்சியில் நடந்த மாதிரி ஊழல் எங்கும் இருந்ததில்லை. அவர்கள் அறிவித்த தேர்தல் பத்திரம் திட்டம் கூட ஊழல் செய்வதற்காக கொண்டு வந்தார்கள்”.

திமுக கூட்டணியில் இருக்கும் வேட்பாளர்கள் தான் பொருளாதார பின்னடைவு உள்ள வேட்பாளர்கள். ஆனால், அதிமுக வேட்பாளர்கள் எளிமையான வேட்பாளர்கள் தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறாரே?

“போன வாரம் அவர் பிரச்சாரம் செய்யும் போது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசி வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலை சட்டமன்றத் தேர்தல் என்று சொல்கிறார். என்ன தேர்தல் நடக்கிறது என்று கூட அவருக்கு தெரியவில்லை. அவருக்கு என்ன தெரியும்?. கடந்த தேர்தலில் நான் வேட்பாளராக நிற்கும் போது என்ன சொத்து மதிப்பு இருந்தது, இப்பொழுது என்ன சொத்து மதிப்பு இருக்கிறது என்பதை நீங்களே பாருங்கள். ஏற்கெனவே இருந்த சொத்தை எல்லாம் மக்களுக்காக செலவு செய்திருக்கிறோம். ஏனென்றால், மோடி அரசு நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை எல்லாம் கொரோனாவை காரணம் காட்டி இரண்டு வருடம் நிறுத்திவிட்டார்கள். அந்த சமயத்தில் கூட மக்களுக்கான உதவி செய்திருக்கிறோம். நாங்களும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்” எனக் கூறினார்.

 

பேட்டி தொடரும்...