Skip to main content

எத்தனைமுறை ஜெயித்தார் எடப்பாடி?

Published on 23/11/2018 | Edited on 23/11/2018
eps


 

எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளிக்கும்போதும், மேடையில் பேசும்போதும் பலமுறை உளறியிருக்கிறார். டெல்லியில் பிரதமரைச் சந்தித்துவிட்டு அவர் பேட்டியளிக்கும்போது எடப்பாடி தொகுதியில் 9 முறை வெற்றிபெற்றவன் என்று பெருமையாக சொன்னார்.

 

அவருடைய இந்த கூற்று சமூகவலைத்தளங்களில் பலவாறாக கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி இருக்கிறது. அவரை வறுத்தெடுக்கும் வகையில் மீம்ஸ்களும் வெளியாகின்றன.

 

அவர் எடப்பாடி தொகுதியில் 9 முறை போட்டியிடக்கூட வாய்ப்பே இல்லை. 1977ல் அதிமுக வெற்றிபெற்ற முதல் தேர்தலில் இருந்து 2016 ஆம் ஆண்டு நடந்த பேரவைத் தேர்தல்வரை மொத்தமே 10 தேர்தல்கள்தான் நடந்திருக்கின்றன.

 

1989 சட்டமன்றத் தேர்தலில்தான் ஜெயலலிதா அணியில் முதலில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார். 1991 தேர்தலில் ஜெயித்த அவர், 1996ல் பாமக வேட்பாளர் ஐ.கணேசன் என்பவரிடம் தோல்வி அடைந்திருக்கிறார்.

 

eps

 

1998 நாடாளுமன்றத் தேர்தலில் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எடப்பாடி பழனிச்சாமி, 1999ல் மீண்டும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மதிமுக வேட்பாளர் கண்ணப்பனிடம் தோல்வி அடைந்திருக்கிறார்.

 

2001 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக அணியில் இடம்பெற்ற பாமகவைச் சேர்ந்த ஐ.கணேசனுக்கே எடப்பாடி தொகுதி கொடுக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிடவே இல்லை. அடுத்து வந்த 2006 தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமகவுக்கு எடப்பாடி தொகுதி மீண்டும் கொடுக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் வி.காவேரி என்பவரிடம் பழனிச்சாமி தோல்வி அடைந்தார். அதாவது தொடர்ந்து மூன்றுமுறை அந்தத் தொகுதியை இழந்திருக்கிறார்.

 

அடுத்து, 2011 தேர்தலிலும், 2016 தேர்தலிலும் வெற்றிபெற்றிருக்கிறார். ஆக, சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் ஆறுமுறை போட்டியிட்டு 4 முறை வெற்றி பெற்றிருக்கிறார். மக்களவைத் தேர்தலில் அன்றைக்கு எடப்பாடி தொகுதியை உள்ளடக்கிய திருச்செங்கோடு தொகுதியில் இரண்டுமுறை போட்டியிட்டு ஒருமுறை வெற்றி பெற்றிருக்கிறார் என்பதுதான் உண்மை.

 

மக்களிடம் எதையும் சொல்லி நம்பவைத்துவிடலாம் என்று பொய்யைக் கூசாமல் பேசுவது அதிமுகவினருக்கு வழக்கம்தான். இப்படித்தான் 4 முறை மட்டுமே பொதுத்தேர்தலைச் சந்தித்த ஜெயலலிதா ஆறுமுறை முதல்வர் பதவியேற்றவர் என்று ஒரு பொய்த்தோற்றத்தை ஏற்படுத்தினார்கள். அதிலும், கூடுதலாக ஏன் இருமுறை பதவியேற்க வேண்டியிருந்தது என்பதற்கான காரணத்தை சொல்லவே மாட்டார்கள். சிறைக்குப் போனதால் முதல்வர் பதவியை இருமுறை இழந்தார் என்பதை கணக்கில் சேர்க்கவே மாட்டார்கள்.

 

 

 

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.