Skip to main content

சிரியாவைச் சிதைப்பதில் அமெரிக்கா தோற்றுவிட்டதா? 

Published on 03/03/2018 | Edited on 03/03/2018

சிரியாவில் கொப்புளிக்கும் ரத்த ஊற்று! #2

 

மத்திய அமெரிக்கா மற்றும் தென்னமெரிக்காவில் உள்ள நாடுகளில் அமெரிக்கா தனது பொம்மை அரசுகளை அமைத்து, அவற்றின் வளங்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தது.

 

அந்த நாடுகளில் முன்னாள் கம்யூனிஸ்ட்டுகள் தலைமையிலான புதிய அரசியல் கட்சிகள் எழுச்சிபெறத் தொடங்கின. அவற்றின் செல்வாக்கு அதிகரிக்க அதிகரிக்க தங்களைச் சுரண்டும் அமெரிக்க முதலாளிகளுக்கு எதிர்ப்பு வலுத்தது.

 

இந்த நாடுகளுக்கு மானசீக உதாரணமாக கியூபா இருந்தது. கியூபா விதைத்த விதைகள் வெனிசூலாவிலும், பொலிவியாவிலும் மரமாக வளர்ந்தது. குறிப்பாக கியூபா ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோவின் சீடரான சாவேஸ் லத்தீன் அமெரிக்க கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

 

egypt protest

எகிப்து 

 

அதற்கு முன்னோடியாக வெனிசூலாவை உலக வங்கியின் பிடியிலிருந்து முதலில் மீட்டார். அமெரிக்க நிபந்தனைகளுக்கு லத்தீன் அமெரிக்க நாடுகள் கட்டுப்பட வேண்டியதில்லை என்றும், தங்களுக்குள் இருக்கிற வளங்களை பகிர்ந்துகொள்வது என்றும் சாவேஸ் தனது திட்டத்தை முன்மொழிந்தார்.

 

இது அமெரிக்காவை அதிரச் செய்தது. சாவேஸின் இந்த திட்டம் அமலாக்கப்பட்டால், தனது மேலாதிக்கம் தகர்ந்துவிடும் என்று அமெரிக்கா அஞ்சியது.

 

வெனிசூலாவின் எண்ணெய் வளத்தை பெரும்பகுதி நம்பியிருந்த அமெரிக்கா அரபு நாடுகளின் எண்ணெய் வளத்தை குறி வைத்தது. ஆனால், அந்தச் சமயத்தில்தான் எண்ணெய் உற்பத்தி நாடுகள் தங்களுக்குள் கூட்டமைப்பை உருவாக்கி, எண்ணெய் விலையை தாங்களே தீர்மானிக்க முடிவெடுத்தன. குறிப்பாக இராக் அதிபர் சதாம் உசேன், லிபியா அதிபர் கடாபி, ஈரான் அதிபர் முகமது அகமதிநிஜாத் ஆகியோர் எண்ணெய்க்கு பதிலாக அமெரிக்க டாலரை ஏற்க முடியாது என்று மறுத்தனர். தங்கமாக மட்டுமே ஏற்க முடியும் என்று அறிவித்தனர்.

 

libya

லிபியா 



இது அமெரிக்காவை ஆத்திரமடையச் செய்தது. அதன் விளைவாகத்தான் இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. அதன் தொடர்ச்சியாக ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இராக்கிற்கு எதிராக பல்வேறு தடைகளை பிறப்பிக்க காரணமாகியது.

 

சர்வதேச அணுசக்தி கமிஷன் உதவியோடு இராக்கிற்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. இராக்கிடம் எண்ணெய் வாங்குவதை தடுக்க பல்வேறு தடைகளை பிறப்பித்தது. கடைசியில் இராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் எதுவுமில்லை என்பதை உறுதி செய்தபிறகு, நேட்டோ தாக்குதலை வலிந்து திணித்தது.

 

அமைதியாக இருந்த இராக்கை சீர்குலைத்து, இன்றுவரை அந்த நாட்டை ரணகளமாக்கி வைத்ததுதான் அமெரிக்காவின் சாதனை. ஆனால், இராக்கின் எண்ணெய் வளத்தை அமெரிக்கா விழுங்கிக் கொண்டிருக்கிறது.

 

இராக்கை விழுங்கி ஏப்பம் விட்ட அமெரிக்கா, அடுத்து ஈரானை குறி வைத்தது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாகவும், வடகொரியா ஆதரவுடன் அணு உலைகளை உருவாக்க திட்டமிடுவதாகவும் குற்றச்சாட்டை சுமத்தியது. அதைத்தொடர்ந்து ஈரான் மீதும் பொருளாதார தடைகளை பிறப்பிக்க காரணமாகியது.

 

libiya man made lake

 

அமெரிக்காவின் சொல்படியெல்லாம் ஐ.நா. ஆடியது. இதன்விளைவாக ஈரான் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால், தனது அணு உலைத் திட்டத்தை கைவிடுவதாக ஜனாதிபதி முகமது அகமதிநிஜா அறிவிக்க வேண்டியதாயிற்று.

 

இந்நிலையில் தனது மூன்றாவது இலக்கை அமெரிக்கா குறிவைத்தது. வடக்கு ஆப்பிரிக்க நாடான லிபியாவை சீர்குலைக்க அது புதிய வழியை கண்டுபிடித்தது. அதிபர் கடாபி தனது நாட்டின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி இருந்தார்.

 

நாட்டின் எண்ணெய் வருமானத்தை மக்கள் அனைவரின் கணக்கிற்கும் பிரித்துக் கொடுத்தார். திருமணமான தம்பதிகளுக்கு தனி வீடு, இலவச மின்சாரம், படிப்புச் செலவு இலவசம், வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்றாலும் உதவி என்று மக்கள் நல அரசாகவே செயல்பட்டது.

 

libiya man made river

 

அதுமட்டுமின்றி, பாலைவன நாட்டில் செயற்கை ஏரியை உருவாக்கி, சகாரா பாலைவனத்தின் அடியில் உள்ள நன்னீர் கடலை உறிஞ்சி மக்களுக்கு குடிநீர் கிடைக்க வழி செய்தார். மொத்தம் அவர் கட்டத் தீர்மானி்த்தது 5 ஏரிகள். திட்டமிட்டபடி கட்டி இருந்தால் பாலைவனத்தை சோலைவனமாக்கி இருப்பார்.

 

உலக வங்கியின் உதவியில்லாமல் இப்படி ஒரு அரசாங்கத்தை நடத்திய கடாபிக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு மக்கள் போராட்டத்தை தூண்டிவிட்டது அமெரிக்கா. ஒரு மைதானத்தில் ஆயிரக்கணக்கான கார்பரேட் இளைஞர்களை திரட்டி, தொடர்ந்து சில நாட்கள் முழக்கமிட செய்வது. அந்த போராட்டத்தை 24 மணிநேரமும் மீடியாக்களில் ஒளிபரப்பி அரசுக்கு பயங்கரமான எதிர்ப்பு இருப்பதைப் போல பில்டப் செய்வது என்ற பாணியை அறிமுகப்படுத்தியது.

 

ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் மத்தியில் கடாபி எதிர்ப்பாளர்கள் புகுந்தனர். கலவரத்தை உருவாக்கினர். கலவரக்காரர்களுக்கு அமெரிக்காவின் ஆயுத உதவியும், விமானப்படை உதவியும் கிடைத்தது. முந்தாநாள் வரை லிபியா மக்களின் தந்தையாக கருதப்பட்ட கடாபியை கலவரக்காரர்கள் படுகேவலமாக கொன்றனர்.

 

libya oil pipeline

 
 

இப்போது அந்த நாடும் கலவரபூமியாக மாறியிருக்கிறது. பொறுப்பான அரசு எதுவும் இல்லை. மிகப்பெரிய பைப்லைன்களில் செயற்கை ஆறு உருவாக்கி, பாலைவனத்தின் அடியிலிருந்து உறிஞ்சப்பட்ட தண்ணீர் ஒரு இடத்தில் உடைப்பெடுத்தது. அதைச் சரிசெய்ய முடியாமல் அமெரிக்கா ஆதரவு பொம்மை அரசு திணறியது.

 

லிபியாவில் அமெரிக்காவின் சீர்குலைவு வேலை முடிந்ததும், எகிப்தை குறிவைத்தது. அங்கு அதிபர் ஹோஸ்னி முபாரக் தலைமையிலான நிம்மதியான அரசாங்கத்துக்கு எதிராக லிபியா பாணி போராட்டத்தையே அமெரிக்கா தூண்டிவிட்டது. அதன் முடிவில் ராணுவமே எகிப்து அரசாங்கத்தை கைப்பற்றியது. ஆனால், ராணுவம் அமெரிக்க ஆதரவு நிலைப்பாடு எடுக்கத் தவறியதால் அங்கு கலவரங்கள் தொடர்ந்தன. ராணுவத்தின் பொறுப்பில் நடைபெற்ற தேர்தலில் மோர்சி அதிபரானார். ஆனால், அவரையும் ஏற்க மறுத்து கலவரம் தொடர்ந்தது. 2011 ஆம் ஆண்டு தொடங்கிய கலவரம் 2014 ஆம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் மேற்பார்வையில் நடைபெற்ற தேர்தலைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது.

 

இப்படிப்பட்ட நிலையில்தான் அதே 2011 ஆம் ஆண்டு லிபியா, எகிப்து ஆகிய நாடுகளைத் தொடர்ந்து சிரியாவிலும் அரசு எதிர்ப்பு போராட்டம் என்ற பேரில் சிரியா ஜனாதிபதி பஷர் அல் ஆஸாத்திற்கு எதிராக போராட்டத்தை அமெரிக்கா தூண்டிவிட்டது. ஆனால், 8 ஆண்டுகளாக அந்தப் போராட்டம் பல்வேறு திருப்பங்களுடன் லட்சக்கணக்கானோர் உயிர்ப்பலியுடன் தொடர்கிறது. சிரியா முழுக்க யுத்தக்களமாக மாறியிருக்கிறது. இதுவரை சுமார் 1 கோடிப் பேர் அகதிகளாக வெளியேற்றப்பட்டு பக்கத்து அரபு நாடுகளிலும் ஐரோப்பாவின் பல நாடுகளிலும் தஞ்சம் புகுந்துள்ளனர்…

 

அமெரிக்காவால் தூண்டிவிடப்பட்ட இந்த கலவரத்தில் இதுவரை நடந்தது என்ன என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…  
 

 

Next Story

“என்னை அதிபராக தேர்ந்தெடுக்காவிட்டால்...” - எச்சரிக்கும் டொனால்ட் டிரம்ப்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
warns Donald Trump If I'm not elected president

குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட்  ட்ரம்ப், அமெரிக்க அதிபராக கடந்த 2016 ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து நடந்த 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் கொண்ட அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. 

இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவார் எனக் கடந்த சில தினங்களுக்கு முன் கூறப்பட்டு வந்தது. இதற்கான ஆதரவுகளையும் டிரம்ப் தீவிரமாகத் திரட்டி வருகிறார்.

இதற்கிடையே, குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக நிற்கப்போவது யார் என்பதற்கான தேர்தல், அந்த கட்சி சார்பில் நடத்தப்பட்டது. அதில், ஒவ்வொரு மாகாணத்திலும் தேர்தல் நடத்தப்பட்டு அதில் அதிக வாக்கு செல்வாக்கு பெரும் நபர் தான், அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. அந்த வகையில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து, அந்த கட்சியைச் சேர்ந்தவரான நிக்கி ஹாலே போட்டியிட்டார். இவர்கள் இருவருக்கும் கடும் போட்டி நிலவி வந்தது. 

இதனையடுத்து, கடந்த 3 ஆம் தேதியும் 5 ஆம் தேதியும் வேட்பாளர் தேர்தல் நடைபெற்றது. ஆனால், தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே, நிக்கி ஹாலே போட்டியில் இருந்து விலகினார். இதன் மூலம் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் நியமிக்கப்பட்டார். அதேபோல், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன் அதிபர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இருவரும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவின் ஓஹியோவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய டொனால்ட் டிரம்ப், “என்னை அதிபராக தேர்வு செய்யாவிட்டால் அமெரிக்கா மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படும். மெக்சிகோவில் கார்களை உருவாக்கி அமெரிக்கர்களுக்கு விற்கும் சீன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நான் அதிபரானால், கார்களை அமெரிக்காவில் விற்க முடியாது. இந்த முறை நான் அதிபராக தேர்ந்தெடுக்காவிட்டால், ஜோ பைடனால் நாட்டில் வன்முறை வெடிக்கும். இதனால், மக்கள் என்னை ஆதரிக்க வேண்டும்” என்று கூறினார். 

Next Story

‘புரிதல் இல்லாதவர்கள் பேசாமல் இருப்பது நல்லது’ - அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
India's response to America for CAA

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று முன்தினம் முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. 

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தங்கள் மாநிலத்தில் சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என்று கூறி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில், சி.ஏ.ஏ சட்டத்தை ரத்து செய்வதில் சாத்தியம் இல்லை எனவும், அந்த சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறியிருந்தார். 
 

India's response to America for CAA

இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் சி.ஏ.ஏ சட்டத்திற்கு கவலை தெரிவிப்பதாக அமெரிக்கா கூறியது. இது குறித்து அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அறிவிப்பு குறித்து விவரங்களை கடந்த 11 ஆம்  தேதி இந்தியா வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு எங்களுக்கு கவலையளிக்கிறது. இந்த சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மத சுதந்திரத்திற்கான மரியாதை அளித்தல் மற்றும் அனைத்து சமூகங்களையும் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படுவது தான் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்த விமர்சனத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இந்தியாவின் உள்விவகாரம். சி.ஏ.ஏ என்பது குடியுரிமை வழங்குவது; குடியுரிமையைப் பறிப்பது அல்ல. எனவே இது அடிக்கோடிட்டுக் காட்டப்பட வேண்டும். இந்த சட்டம் நாடற்ற தன்மையின் பிரச்சினையைக் குறிக்கிறது. மனித கண்ணியத்தை வழங்குகிறது மற்றும் மனித உரிமைகளை ஆதரிக்கிறது. சி.ஏ.ஏ சட்டம் குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறையின் கருத்துக்கள் தவறானவை மற்றும் தேவையற்றவை என்று நாங்கள் கருதுகிறோம். டிசம்பர் 31, 2014 அன்று அல்லது அதற்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த இந்து, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு இந்த சட்டம் பாதுகாப்பான புகலிடத்தை வழங்குகிறது.

India's response to America for CAA

துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவும் ஒரு பாராட்டத்தக்க முயற்சியை வாக்கு வங்கி அரசியல் நோக்கில் மட்டும் பார்க்கக் கூடாது. இந்தியாவின் பன்மைத்துவ மரபுகள் மற்றும் பிராந்தியத்தின் பிரிவினைக்குப் பிந்தைய வரலாறு ஆகியவை குறித்து சரியான புரிதல் இல்லாதவர்கள் பேசாமல் இருப்பது நல்லது. இந்தியாவின் நலம் விரும்பிகள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நோக்கத்தை வரவேற்க வேண்டும்” என்று தெரிவித்தார்.