Skip to main content

முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் கால துண்டுக் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

Published on 14/04/2022 | Edited on 19/04/2022

 

first Maravarman Sundara Pandyan Inscriptions Discovery

 

சிவகங்கை தொல்நடைக் குழுவைச் சேர்ந்த சரவணன் நாட்டரசன் கோட்டையில் இடிபாடுடைய கோவில் மண்டபம் ஒன்றில் சுவரில் கல்லெழுத்துகள் இருப்பதாக சிவகங்கை தொல்நடைக் குழுவிற்கு தகவல் தெரிவித்தார். அவ்விடத்தில் சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா, செயலாளர்  இரா.நரசிம்மன், உறுப்பினர் கா.சரவணன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

 

இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் கொல்லங்குடி புலவர் கா.காளிராசா செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது, ”சிவகங்கையை அடுத்த நாட்டரசன் கோட்டையில் வீரகண்டான் ஊரணி கரையின் கிழக்குப் பகுதியில் இடிந்த நிலையில் உள்ள உடையவர் கோவில் தெற்கு மற்றும் மேற்கு சுவரில் 9 துண்டுக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

 

உடையவர் கோவில்

வீர கண்டான் ஊரணிக் கரையில் மேற்குப் பகுதியை விடுத்து மற்ற பகுதிகள் அனைத்தும் கோவில்களால் சூழப்பட்டுள்ளன. அதில் உடையவர் கோவில் என அழைக்கப்படும் இடம் இடிபாடுடன் கூடிய முகப்பு மண்டபமும், அதையொட்டிய பின்பகுதியில் கருவறையுடனும் அமைந்துள்ளது. உடையவர் என்பது ராமானுஜரின் 12 திருநாமங்களில் ஒன்றாக அழைக்கப்பெறுகிறது. இக்கோவில் ராமானுஜருக்காக அமைக்கப் பெற்றுள்ளதை முகப்பு மண்டப தூண்களில் உள்ள ராமர் சிலை, ராமானுஜர் சிலையைக் கொண்டு யூகிக்க முடிகிறது, மேலும் இக்கோவில் பெருமாள் கோவிலை ஒட்டிய பகுதியிலேயே அமைந்துள்ளது. கருவறையில் சிலை ஏதுமில்லாமல் இடிந்த கற்கள் விழுந்து கிடக்கின்றன.

 

first Maravarman Sundara Pandyan Inscriptions Discovery

 

கல்வெட்டுகள்

சிறிதும் பெரிதுமாக 9 துண்டுக் கல்வெட்டுகளைக் கருவறை வெளிப்புறச் சுவரில் காணமுடிகிறது, முழுமை பெற்ற கல்வெட்டுக்களாக இருந்த கற்களைக் கட்டு இசைவுக்காக உடைத்து மேலும் கீழும் தலைகீழாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் இவை ஒன்றோடு ஒன்று தொடர்பற்றுள்ளதையும் காண முடிகிறது.

 

கல்வெட்டுச் செய்தி

கல்வெட்டு எழுத்து அமைப்பைக் கொண்டு இவற்றை பதிமூன்றாம் நூற்றாண்டாகக் கருதலாம், தெற்குப் பக்கச் சுவரில் நடுவாக அமைந்துள்ள கல்வெட்டு ஒன்றில், முன்பின் பகுதிகள் தொடர்பில்லாமல் இருந்தாலும் ஒரு சில சொற்கள் முழுமையாக உள்ளன. “ஒன்று 5 அரை மாவும் ஸ்ரீ சோணாடு கொ தேவற்கு ஐஞ்சாவது முதல் கெம எப்பேற்பட்ட இறை தவிந்தமைக்கு கல்லிலே” என வரும் தொடர்களைக் கொண்டு ஸ்ரீ சோணாடு கொண்டருளிய/கொண்ட  என்ற வரிகளாயின் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன்(1216-1238) கல்வெட்டாக இருக்கலாம் எனக் கருத முடிகிறது. மேலும் மற்ற துண்டுக்கல்வெட்டுகளில் முழுமையான தொடர்பற்று சொற்கள் இருந்தாலும் வரி மற்றும் வரி தவிர்ந்தமை தொடர்பான செய்திகளே இடம் பெற்றிருப்பதாகக் கொள்ள முடிகிறது.

 

first Maravarman Sundara Pandyan Inscriptions Discovery

 

சூரக்குளம் ஐயனார் கோவிலில் துண்டு கல்வெட்டு

சூரக்குளத்திலிருந்து வஸ்தாபட்டிக்கு ஊரணி பின்புறத்திலிருந்து காட்டு வழியாக செல்லும் பாதை பிரிவிலிருந்து பஞ்சாட்சரம் ஐயனார் கோவிலுக்குச் செல்ல முடிகிறது. நல்ல அடர்ந்த காட்டிற்குள் அமைந்துள்ள இக்கோவிலில் நுழைவு வாயில் கீழ்ப்பகுதி சுவரின் கட்டுமானத்தில் ஒரு முழுமை இல்லா துண்டுக் கல்வெட்டு காணப்படுகிறது.

 

இக்கல்வெட்டு “செய்தியாவன செக்கிறையும் தட்டன் பாட்டமும் இவ்வாண்டு முதல் பள்ளிச்சந்த இ _ _ இப்படி சந்திராதித்தவற்_ _ _ _ அழகனான அழகிய பாண்_ _ _ பற்றயுடையான திருப்பூவன அரையன் வி” என 13,14ஆம் நூற்றாண்டு எழுத்தமைவில் எழுதப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு பள்ளிச்சந்தமாக பௌத்தம் அல்லது சமணக் கோயிலுக்கு சூரியன் சந்திரன் உள்ளவரை இறையிலியாக வரி வழங்கப் பெற்ற செய்தியை வெளிப்படுத்துவதாகக் கொள்ளலாம். இவ்விரு கோவில்களிலும் இத்துண்டுக் கல்வெட்டுகள் முந்நூறு நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் கற்களோடு வேறு இடத்திலிருந்து கட்டுமானத்திற்காக இங்கு கொண்டுவந்து சிதைக்கப் பெற்று கட்டப்பட்டுள்ளதை அறியமுடிகிறது.

 

உடைந்த நிலையில் சிவ மூர்த்த சிலை

வீர கண்டான் ஊரணியின் மேற்குப் பகுதியில் நீர்வரத்து மதகடிப்பகுதியில் இடுப்புக்கு மேல் பகுதி மட்டும் உள்ள பிளவுண்ட சிலை ஒன்று காணப்படுகிறது விரிசடையும் ஒரு கையில் உடுக்கையுடன் காணப்படும் இச்சிலையானது பைரவர் அல்லது வீரபத்திரர் சிலை அமைப்போடு உள்ளதாகக் கொள்ளலாம். இது சிவமூர்த்த சிலைகளில் ஒன்றாக இருக்கலாம்.

 

நாட்டரசன் கோட்டை கரிகாற்சோழிசுவரர் கோவில் மற்றும் பெருமாள் கோவிலில் உள்ள கல்வெட்டுகள் முன்பே பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இடிபாடுடைய மண்டபத்தில் 13ஆம் நூற்றாண்டு, 10 துண்டுக்கல்வெட்டுகள்  காணக்கிடைப்பதில் சிவகங்கை தொல்நடைக்குழு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது” என்று தெரிவித்தார்.

 

 

Next Story

பாஜக தேர்தல் அறிக்கை; ப.சிதம்பரம் சரமாரி கேள்வி!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 BJP Election Manifesto; P. Chidambaram barrage of questions

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கும் வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி வரை நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. பின்பு பதிவான வாக்குகள் ஜூன் 4 எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படவுள்ளது. ஆட்சியைத் தக்க வைக்கும் வகையில் பாஜகவும், இழந்த ஆட்சியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இத்தகைய சூழலில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி நேற்று (14.04.2024) வெளியிட்டார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு உருவாக்கிய இந்த தேர்தல் அறிக்கை டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெளியிட்டப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பாஜக தேர்தல் அறிக்கை குறித்துப் பேசுகையில், “எல்லா ஊர்களுக்கும் குழாய் மூலம் தண்ணீரே சென்று சேராத நிலையில், குழாய் மூலம் எரிவாயு எப்படிக் கொண்டு செல்ல முடியும். அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்வதாக பாஜக அளித்துள்ள வாக்குறுதி மிகப்பெரிய வேடிக்கையான செயல் ஆகும். பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடி வீடுகளை கட்டிக்கொடுத்துவிட்டதாக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது பொய்க் கணக்கு ஆகும். அதாவது 4 கோடி வீடுகளை கட்டி இருந்தால் 52 ஆயிரம் வீடுகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டி இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் பாஜக அரசு கட்டிக்கொடுத்த 52 ஆயிரம் வீடுகளைக் காட்ட முடியுமா?. 

 BJP Election Manifesto; P. Chidambaram barrage of questions

நாடாளுமன்றத்தில் 33 சதவித மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றி இருந்தாலும் அந்த சட்டம் இப்போதைக்கு அமலுக்கு வராது. பெண்களுக்கான 33 சதவித இட ஒதுக்கீட்டை வேண்டுமென்றே பாஜக ஒத்திப் போட்டுள்ளது. அனைத்து ஊர்களுக்கும் புல்லட் ரயில் இயக்கப்படும் என்ற பாஜக வாக்குறுதி வேடிக்கையானது. ஒரு புல்லட் ரயிலுக்கு ரூ. 1.1 லட்சம் கோடி செலவு செய்யத் தயாராக உள்ள பாஜக அரசு, போதிய ரயில் விபத்து தடுப்புக் கருவிகளைப் பொருத்தாதது ஏன்?.

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்பது ஏற்கெனவே உள்ள ஒன்றுதான். பழைய பல்லவிகளைப் பாடுவது புதிய சிந்தனை அல்ல. பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை. நாட்டில் 5% பேர் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள் என்பதை ஏற்க முடியாது. பாஜக தேர்தல் அறிக்கையில் மக்களை ஏமாற்றும் தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன” எனத் தெரிவித்தார். 

Next Story

காரைக்குடியில் அமித்ஷாவின் ரோடு ஷோ திடீர் ரத்து!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Amit Shah's road show suddenly canceled in Karaikudi

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை (12.04.2024) தமிழகம் வருகிறார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அமித்ஷாவின் பயணத்திட்டத்தின் படி நாளை சிவகங்கை மற்றும் மதுரையில் வாகனப் பேரணி மூலம் வாக்கு சேகரிக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் (13.04.2024) கன்னியாகுமரியில் பரப்புரையில் ஈடுபடுகிறார். இதனையடுத்து அன்று மாலை நாகப்பட்டினத்தில் நடைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். மேலும் தென்காசியில் நடைபெறும் வாகனப் பேரணியில் கலந்துகொள்கிறார். அதே சமயம் நாளை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்கிறார்.

இதன்படி சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து காரைக்குடியில் அமித்ஷா நாளை ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்த உள்ளார் என பயணத்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக தேவநாதன் ரூ. 525 கோடி மோசடி செய்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டதும், சென்னையில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் நடத்திய ரோடு ஷோவுக்கு போதிய வரவேற்பு இல்லை என்ற விமர்சனமும் மக்கள் மத்தியில் எழுந்தது கவனிக்கத்தக்கது.