Skip to main content

எடப்பாடியின் சொந்த மாவட்டத்தில் நடக்கும் கொடுமை... கொந்தளிப்பில் மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 11/11/2019 | Edited on 11/11/2019

முதல்வரின் மாவட்டத்திலிருந்து இன்னொரு குமுறல் இது. சேலம், நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்களுக்கு நம்பிக்கை முகமாக விளங்கும் சேலம் ஆவின் நிர்வாகம், ஏரியா மக்களின் பலத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கிறது. சேலத்தை அடுத்த தளவாய்ப் பட்டியில், 1984-ஆம் ஆண்டு முதல் ஆவின் பால் பண்ணை இயங்கி வருகிறது. இது 54 ஏக்கர் பரப்பளவு கொண்டது நாளொன்றுக்கு 5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வருகிறது. ஆண்டுக்கு 600 கோடி ரூபாய் வணிகம் செய்யும் நிறுவனமாகவும் இது வளர்ந்திருக்கிறது. எனினும் பால் பண்ணைக்கு நிலம் கொடுத்த தளவாய்ப்பட்டி கிராம மக்களை அது வஞ்சிப்பதாக அம்மக்கள் புகார் வாசிக்கின்றனர். 

 

admk



இது குறித்து சூழலியல் ஆர்வலர் சிவராமன் நம்மிடம் விரிவாகப் பேசினார்.’"ஆவினில் பால் பதனிடுதல், பால் பொருள்கள் தயாரித்தல், பால் கேன்கள், டேங்கர் லாரிகளை சுத்தம் செய்தல், பாய்லர் கிளீனிங் என தினமும் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு பயன்படுத்தப்பட்ட தண்ணீரை, பண்ணைக்குள்ளேயே திறந்த வெளியில் தேக்கி வைக்கின்றனர். இது சுற்றுச்சுவரை உடைத்துக்கொண்டு கழிவு நீராக வெளியேறுகிறது. இதன் பாதிப்பால் தளவாய்ப்பட்டி ரொட்டிக்காரன் வட்டம் என்ற கிராமத்தில் நிலத்தடி நீரில் அது கலந்துவிட்டது. அதனால் அங்கே எங்கே தோண்டினாலும் கழிவு நீர் ஊற்று நீர் போல் வந்துவிடும். அங்கே சண்முகம் என்பவர் வீட்டுக்குள் சிமெண்ட் தரையை உடைத்துக்கொண்டு 24 மணி நேரமும் நீரூற்றாக வெளியேறுகிறது. இதனால் கடந்த 35 ஆண்டுகளாக கழிவுநீரோடு போராடிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு காலத்தில், இந்த ஆவின் கூட்டுறவு நிறுவனத்தில்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இயக்குநராக தன் அரசியல் வாழ்வின் பொறுப்பைத் தொடங்கினார். ஆனால் முதல்வர் தனிப்பிரிவு, கலெக்டர், ஆவின் நிர்வாகம் என பலரிடமும் புகார் அளித்தும் இதுவரை எங்கள் பிரச்சினை தீர்ந்தபாடில்லை'' என்றார் வருத்தமாக.

 

village



ரொட்டிக்காரன் வட்டத்தில் சண்முகம் (40) என்பவரின் வீட்டை நேரில் பார்த்தோம். சுமார் 500 சதுரஅடி பரப்பு கொண்ட அந்த வீடு முழுக்கவே தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. எந்நேரமும் தண்ணீரில் நடந்து நடந்து சண்முகம், அவருடைய பெற்றோர் ஆகியோரின் கால் பாதங்கள், விரல்கள் சேற்றுப் புண்ணால் அழுகிப்போகும் நிலையில் இருந்தன. அவரின் தந்தையோ சமையல் அறைக்குள் தேங்கிய ஊற்றுநீரை பிளாஸ்டிக் முறத்தில் அள்ளி அள்ளி வெளியே ஊற்றிக் கொண்டிருந்தார்.

"கடந்த 35 ஆண்டுகளாக இந்த நரக வாழ்க்கையைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்''’என்றார் சண்முகம் கலக்கமாக. இங்குள்ள 14 பேரின் வீடுகளிலும் இந்த கழிவு நீர் நீரூற்று பெருகி ஓடிக்கொண்டிருந்தது.


அதே ஊரைச் சேர்ந்த விவசாயிகள் தங்கராஜ், நாராயணன், மாரியம்மாள் ஆகியோர், ''எங்கள் வயல்களில் பயிர்கள் மூழ்கிக் கிடக்கின்றன. கால்நடைகளுக்கு சோளத்தட்டு பயிரிட்டும் கூட, அதை அறுவடை செய்ய முடியாத நிலையில், காசுக்கு வாங்கி வந்து போடும் நிலையில் இருக்கிறோம். முதல்வர் எடப்பாடி ஒருமுறையாவது இங்கு வந்து எங்கள் நிலையைப் பார்க்கவேண்டும்,'' என்றார்கள் பரிதாபமாக.

 

Seshan



இதற்கிடையே ஆவினின் கழிவுநீரை, தளவாய்ப்பட்டி ஏரிக்குக் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை ஆவின் மேற்கொண்டது. ஆனால் விவசாயிகள் சிலர், ஏரியில் கழிவுநீரை தேக்கினால் அந்தப் பகுதியிலும் நிலத்தடி நீர் மாசுபடும் என்று போர்க்கொடி தூக்கினர்.

இப்பகுதி மக்களின் குமுறல்களை விளக்கி, இப்பகுதியில் இருக்கும் 33 குடும்பங்களுக்கும் பட்டா வழங்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என ஆவின் பொது மேலாளர் விஜய்பாபுவிடம் கோரிக்கையை நாம் வைத்தோம். எல்லாவற்றையும் நிதானமாக கேட்டுக் கொண்டார் விஜய்பாபு.

உடனே அவர் ரொட்டிக் காரன் வட்டம் முழுவதும் நேரில் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து நம்மிடம் பேசிய விஜய் பாபு... "ஆவினில் தேக்கி வைக்கப்படுவது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்தான். அது கழிவு நீர் அல்ல. ஆவினுக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு பட்டா வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான செலவையும் ஆவின் நிர்வாகமே ஏற்றுக்கொள்ள ஆனதைச் செய்கிறோம். பசுமை வீடுகள் கட்டித்தரப்படும், தளவாய்ப்பட்டி மக்களை அழைத்து விரைவில் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்படும்'' என்றார்.


இது தொடர்பாக நாம் தனியார் நில அமைப்பியல் வல்லுநர் ஒருவரை சந்தித்து விளக்கம் கேட்டோம். அவரோ, ""பொதுவாகவே எந்த ஓரிடத்திலும் நீண்ட காலத்திற்கு தண்ணீரை தேக்கி வைத்தால், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விடும். அதுவும் ஆவின் கழிவுநீர் மழைநீருடன் சேர்ந்து வெளி யேறும்போது நேரடியாக புவியின் மேற்பரப்பில் உள்ள நீரையும், போர்வெல் நீரையும் கண்டிப்பாக அது மாசுபடுத்தும். பூமிக்கடியில் நீரால் சூழப்பட்ட பகுதியை "அக்யூஃபர்' எனக் கூறுவோம். அந்தப் பகுதியில் ஆவின் கழிவுநீர் கலந்துவிட்டால் அதன் பாதிப்பு ஒரு கி.மீ., தூரத்திற்குக் கூட இருக்கும். ஆயிரம் அடி ஆழத்திற்கு அப்பாலும் நீரை மாசுபடுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. சேலம் ஆவினில் கழிவுநீர் முறையாக சுத்திகரிக்கப்படுகிறதா என்பதை மாதந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும்,'' என்றார் அக்கறையோடு. தனது மாவட்டத்திலேயே இப்படிப்பட்ட பாதுகாப்பற்ற தீவுகள் இருப்பதை முதல்வர் எடப்பாடி அறிவாரா? அங்கு வசிக்கும் அப்பாவி மக்களை துயரங்களில் இருந்து அவர் மீட்பாரா?

 

Ayodhya




 

 

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

“கேட்கும் நிதியை மத்திய அரசு எப்போதும் கொடுப்பதில்லை” - இ.பி.எஸ் குற்றச்சாட்டு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 EPS alleges Centre government never gives the requested funds

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிக வெப்பம் காரணமாக அதிமுக சார்பில் மாவட்டந்தோறும் பல இடங்களில் நீர் மோர் பந்தலை வைக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் 4 இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து செய்தியாளர்களைச் சந்தித்துp பேசினார்.

அப்போது அவர், “தமிழ்நாடு அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை. அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியை விட குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்ட போதிலும் நிதியைக் குறைத்து தான் வழங்கினார்கள். திமுக மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோதே கூட கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை. குடிமராமத்து திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலிருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6,000 தூர்வாரப்பட்டன. தமிழகத்தில் போதைப்பொருளால் சமுதாயம் மிக மோசமான அழிவுக்குச் சென்று கொண்டிருக்கிறது ” எனத் தெரிவித்துள்ளார்.