Skip to main content

"பாமகவின் இன்றைய நிலை... அதிமுகவின் கோஷ்டி மோதல்.." - சரவெடி பதிலளித்த மருத்துவர் காந்தராஜ்!

Published on 30/11/2021 | Edited on 30/11/2021

 

4545


அதிமுகவில் தலைமைகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும், இது தொடர்ந்தால் வெற்றிவாய்ப்பு என்பது இல்லாமல் போய்விடும் என்று அதிமுக மூத்த உறுப்பினர் அன்வர் ராஜா உள்ளிட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பெரிய அளவிலான கருத்து மோதல்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மூத்த உறுப்பினர்கள் சிலர் எடப்பாடிக்கு ஆதரவாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கடுமையாக திட்டியதாகவும் தகவல் வெளியானது. அதே போன்று பாமக தரப்பிலும் ராமதாஸ் அவர்கள் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில் நிர்வாகிகளிடம் காட்டமாக பேசினார். இந்நிலையில் அதிமுக, பாமகவில் தற்போது நடக்கும் நிகழ்வுகள் குறித்து அரசியல் விமர்சகர் காந்தராஜ் அவர்களிடம் கேள்வி எழுப்பினோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு...

 

"நீ பெரியவனா, நான் பெரியவனா என்ற யுத்தம் அதிமுகவில் நடைபெற்று வருகிறது. எனவே இவர்களால் எந்த முடிவு எடுக்க முடியாது. எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் ஒன்றாக இந்த கட்சியை ஒருபோதும் நடத்திச் செல்ல வாய்ப்பில்லை என்றே அந்த கட்சியில் இருப்பவர்கள் தற்போது உறுதியாக நம்புகிறார்கள். எனவே இவர்கள் நடத்தும் மாவட்ட செயலாளர்கள் கூட்டமானாலும், இல்லை எந்த கூட்டமானாலும் இரண்டு தரப்பாகவே ஆதரவாளர்கள் இருப்பார்கள். எனவே கட்சி ஒற்றுமை பற்றி இவர்கள் சிந்திக்க கூட மாட்டார்கள். நமக்கு என்ன கிடைக்கிறது என்ற எண்ணமே அவர்களுக்கு பிரதானமாக இருக்கும். 

 

அதிமுகவைப் பொறுத்த வரையில் கட்சி கையைவிட்டுப் போவதை பற்றி யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை. வரப் போகின்ற உள்ளாட்சித் தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல, அதிமுகவுக்கு அதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவு. அதிமுகவின் தலைமை மாற்றம் வரும் வரை அதிமுகவுக்கு வளர்ச்சி என்பதே இல்லை.  பாமகவை பொறுத்தவரையில் பெரிய டாக்டர் ஐயா, சின்ன டாக்டர் ஐயா. அவர்கள் இருவரும் கரோனா காரணமாக நீண்ட நாட்களாக வெளியே வராமல் இருந்தனர். அதைப்பற்றி அக்கட்சியை சேர்ந்தவர்கள் கவலைப்பட்டார்களா? தொலைக்காட்சியில் கூட அவர்கள் எந்த விவாதத்திலும் கலந்துகொள்ளாமல் இருந்து வந்தனர். கேமரா வைத்தால் கூட கரோனா வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் யாரும் வெளியே வரவே இல்லையே. தலைவா நான் உன்னை பார்க்காமல் இருக்க முடியவில்லையே என்று எந்த தொண்டனாவது கேட்டானா? யாரும் அதைப்பற்றி பேசவில்லை என்றால் என்ன அர்த்தம். கட்சி அப்பவோ போய் விட்டது. ஊடகங்கள் இருப்பதால்தான் அவர்கள் இருவரும் வெளியே தெரிகிறார்கள்.இல்லை என்றால் அவர்கள் இருப்பதே யாருக்கும் தெரியாமல் போய்விடும். 

 

 

 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.