Skip to main content

"சீனர்கள் நம்மை அழிப்பதற்கு ஆங்கிலத்தை உயிரைக் கொடுத்து கற்றுவருகிறார்கள்..." - கோபிநாத்

Published on 09/01/2019 | Edited on 09/01/2019

சமீபத்தில் நடந்த, சமூக வலைத்தளத்தில் தமிழ் வளர்ப்பது எப்படி எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 'நீயா நானா' கோபிநாத் தமிழ் மொழி வளர யாரெல்லாம் பொறுப்பு, ஒரு மொழி எப்போது வளரும், சென்ற தலைமுறையினர் இந்த தலைமுறையினரின் மீது வைத்துள்ள பார்வை சரியானதா போன்ற விஷயங்களை பற்றியெல்லாம் பேசினார். அவர் பேசியதிலிருந்து.  

 

gg

 

இப்போது இருக்கும் தலைமுறையினர் சரியாக தமிழை பயன்படுத்துவதில்லை, அவர்களுக்கு தமிழ் மீது பற்றில்லை என்கிற பொதுப்புத்தி தவறு என்பது என் அபிப்ராயம். உண்மையில் இன்று 40 முதல் 50 வயதுக்குள் இருப்பவர்களுக்கு இருந்த ஆங்கில மோகத்தைவிட இன்றிருக்கும் தலைமுறையினருக்கு ஆங்கில மோகம் என்பது மிகவும் குறைவானதுதான். நமக்குள் எப்போதும் ஒரு சிக்கல் இருக்கிறது, நம்மை குற்றவாளியாக்கி பார்க்கும் பார்வை நமக்கு இருக்கிறது. அதில் இருந்து வெளியேவர வேண்டும்.

 


உண்மையில் சமூக வலைதளத்தில் நல்ல தமிழ் நிறைய இருக்கிறது. அதேசமயம் நிறைய குறைபாடுகளும் இருக்கிறது, அதனையும் நான் மறுக்கவில்லை. சமூக வலைதளத்தின் மூலமாக தமிழ் வளர்த்தெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது என்பதை உணரமுடிகிறது. சமூக வலைதளத்தில் கொண்டுவரக்கூடிய வார்த்தைகள் என்பது வடிவேலின் வார்த்தைக்கு சமமானது. வடிவேலுவின் வார்த்தைகள் இல்லாமல் இன்று பேசவே முடியாது என்பதுதான் எதார்த்தம். அவரின் ‘ஆஹான்...’ எனும் வார்த்தை இவ்வளவு பெரிய வார்த்தையா என்று இருக்கிறது. நான் கடைசியாக எழுதிய புத்தகத்தின் பெயர்  ‘மண்ட பத்தரம்’ இதனை ஆங்கில மொழிபெயர்ப்பில் சொல்ல வேண்டும் என்றால் (Be aware) இதை ஆங்கிலத்தில் சொல்லினால் மதிப்பு கூடும். அதுபோல்தான் அவர் பயன்படுத்திய வார்த்தைகள் அனைத்தும். ஆனால், இதை எல்லாம் மார்க் ஸுக்கர் பர்க் போன்றவர்கள் சொன்னால்தான் நம்மிடம் மதிப்பு கூடும். வடிவேலும் சமூக வலைதளமூம் ஒன்று. காரணம், இரண்டும் ஏற்படுத்தும் தாக்கம் அபாரமானது. ‘வச்சி செஞ்சிருவேன்’ எனும் வார்த்தை சமூக வலைதளத்தில் இருந்து வந்ததுதான். இது போன்று பல வார்த்தைகள் சமூக வலைதளங்கள் கொண்டுவருகிறது. இது எல்லாமே சமூகத்தின் பிரதிபலிப்பாகத்தான் நான் பார்க்கிறேன். காரணம், அவர்கள் கல்லூரியில் பேசக்கூடிய வார்த்தைகளை இங்கு கொண்டுவருகிறார்கள். 

 

இதில் என் வேண்டுகோள்கள் என்னவென்றால், சமூக வலைதளத்தில் சரியாக தமிழ் பயன்படுத்துவதில்லை என்பதை ஒரு குற்றமாக முன்வைக்காதீர்கள். ராஜ்மோகன், விக்கி போன்றவர்களின் பக்கங்களை எல்லாம் பாருங்கள் அவர்களின் மொழி நடை எல்லாம் அற்புதமாக இருக்கும். இருவர் சந்திக்கும்போது தமிழில்தான் பேச வேண்டும் என்பதில்லை, அது அவசியமும் இல்லை. இருவர் சந்திக்கும்போது தமிழில்தான் பேச வேண்டும் என்பதில்லை. ஆனால், தமிழை பற்றி பேச வேண்டிய தேதி என்று வருகிறதோ அன்று தமிழ் குறித்து பேசினால் தமிழுக்கு நல்லது, அவ்வளவுதான். மேலும் நாம் தமிழை வளர்க்க முடியாது. தமிழ்தான் நம்மை வளர்க்கும். 

 


தன்னைத்தானே காத்துக்கொள்ளக்கூடிய தகவமைப்பை கொண்டிருக்கும் மொழி தமிழ். அதனால்தான் தமிழ் செவ்வியல் மொழியாக இருக்கிறது. உலகத்தில் இருக்கும் அநேக மொழிகளின் கலப்பிற்கு பிறகும் தமிழ் இன்னும் அதன் இலக்கணத்தினாலும், அறிவாலும், செழுமையாலும் அது அதனை காப்பாற்றிக்கொள்கிறது. இன்று தமிழை சாதாரணமாக பேசக்கூடிய பசங்களைத்தான் பெண்களுக்கும் பிடிக்கிறது. என் கோரிக்கை என்னவென்றால் சமூக வலைதளங்களில் சில நல்ல வார்த்தைகளை இந்த சமூகத்திற்கு அறிமுகம் செய்யுங்கள். நான், ‘Social values’ எனும் வார்த்தைக்கு தமிழில் என்ன என்று தேடினினேன். அந்த சமயத்தில் யாராவது பேசினால் படக்கென்று அதனை பிடித்துவிடுவேன். அப்போது ஒருவர் ‘Social values’ எனும் சொல்லுக்கு சமூக விழுமியங்கள் என்று சொன்னார். அதன் பின் அதனை மேடைகளிலும், நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டேன். நமது கருவூலங்களில் அதிகமான தமிழ் வார்த்தைகளை உருவாக்கவேண்டிய தேவை இருக்கிறது. அதனால் சமூக வலைதளத்தில் கொஞ்சம் பிரபலமாக இருக்கக்கூடியவர்கள் நல்ல தமிழ் சொற்களை சமூகத்திற்கு அறிமுகம் செய்யுங்கள். தமிழ் வளர்ப்பது என்பது இவர்களின் வேலை மட்டும் அல்ல, அது சமூக வலைதளங்களை பயன்படுத்தக்கூடிய ஒவ்வொருவரின் வேலை. இன்று சமூக ஊடங்களின் மூலம் ஒரு தனிநபர், ஒரு பெரிய அதிகாரத்தை எதிர்க்கமுடியும். உதாரணத்திற்கு மோடி விமானத்தில்போகும் படத்தைக் காட்டி ‘நீ என்ன ஊர் ஊரா சுத்துற’ என்று போட்டுவிடமுடியும். ஆக ஒவ்வொருவரின் கைகளிலும் ஒரு ஊடகம் இருக்கிறது. அதனால் சமூக வலைதளத்தில் தமிழ் வளர்ப்பது என்பது ஒரு தனிநபர் சார்ந்த விஷயம் அல்ல, அது எல்லோரின் பொறுப்பும் சார்ந்தது.   

 


கரடுமுரடான வார்த்தைகளை பேசினால்தான் நல்ல தமிழ் என்று குழப்பிக்கொள்ளாதீர்கள். எவ்வளவுக்கு எவ்வளவு ஒரு மொழி எளிமையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அந்த மொழி வளரும்.  ‘மொக்க’ எனும் வார்த்தையை பயன்படுத்தும்போது நீங்கள் கோவப் படுகிறீர்கள். உண்மையில் மொன்னை எனும் வார்த்தை மறுவி மொக்கை என்றானது அவ்வளவுதான். அன்பு, காதல், காமம், பாசம், குரோதம், வன்மம், ஆத்திரம் என எல்லா குணமூம் நல்ல குணம்தான். எங்கு தேவையோ அங்கு அது வேண்டும். அநீதிக்கு எதிராக குரோதம் கொள்ளவேண்டும். அதுபோல் எல்லா வார்த்தையும் நல்ல வார்த்தைதான்

 


கம்போடியாவில் இருந்து வந்தவர் ‘சமீபத்தில் நீங்கள் நடத்திய நிகழ்ச்சி ரொம்ப நல்ல நிகழ்ச்சி, தமிழ் நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு தமிழ் பேசத் தெரியவில்லை. வேற்று மாநிலத்தவர் தமிழ் நல்லா பேசுறாங்க’ நிகழ்ச்சி நன்றாக இருந்தது என்று சொன்னார். நானும் சமூக வலைதளத்தில் பார்த்தேன் தமிழ் பேசத் தெரியாதவர்களை திட்டியிருந்தார்கள். அவர்களை திட்டுவதற்கு என்ன உரிமை இருக்கிறது. அவர்களை அந்த இடத்திற்கு கொண்டுவந்து வைத்தது, இன்று 40 - 50-ல் இருக்கும் தலைமுறையினர்தான். நீங்கள்தான் ஆங்கில வழி கல்வியில் சேர்த்துவிட்டீர்கள், மம்மீ, டாடி என்று ஆனந்த பெரு  வெள்ளத்தில் அலைந்தது நீங்கள்தான். ஆங்கிலத்தின் மீது தீரா காதலும், பெரும் மோகமும் கொண்டது நீங்கள்தான். நாங்கள் இன்று வளர்ந்த சமூகம், தமிழை தேடி எடுக்கிறோம். நல்ல தமிழ் பேசுபவர்கள் விரைவாக பிரபலமாவது தற்போதுதான் நடக்கிறது. ஒரு மொழியை தொடர்ந்து புனிதப்படுத்திக்கொண்டே போகும்போது அந்த மொழி சுருங்கிக்கொண்டேபோகும். எதை நாம் விசாலத்துடன் அணுகுகிறோமோ அது விரிந்துகொண்டேபோகும் அதுதான் இயல்பு. விமர்சிப்பதற்காக மட்டும்தான் சமூக வலைதளங்கள் இருக்கிறது எனும் நோக்கத்துடன் அதனை எடுத்து செல்லாதீர்கள். ஒருவனின் சிறு தவறை சொல்லி, சொல்லி அவனின் படைப்பாற்றலை தடுக்காதீர்கள். கமல்ஹாசனே தவறாக அடிக்கிறார். அதன் பின் அவரே என்னுடை இந்த பதிவு தவறாகிவிட்டது என்று ஒத்துக்கொண்டு திருத்திக்கொள்கிறார். 

 


ஒருவன் அருமையான கருத்தை பதிவிடுகிறான். அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பகிரலாம் என்று பார்த்தால். அதன் கீழ் கருத்து பதிந்திருப்பவர் எல்லாம் மிக மோசமாக அவன் அம்மாவை பற்றியெல்லாம் தவறான வார்த்தையில் கருத்துக்களை பதிந்திருக்கிறான். இது எந்தவிதத்தில் நியாயம். யாராவது தவறு செய்தால், பக்குவமாக எடுத்து சொல்லுங்கள் அதை விட்டுவிட்டு திட்டாதீர்கள். நீங்கள் திட்டுவதால் அவனின் கருத்து வெளிப்படுதும் தன்மை தடைபடும்.   


மொழியை மொழி சார்ந்த விஷயங்கள் மூலமாக மட்டும் வளர்க்க முடியாது. மொழியை வளர்க்க அறிவியலும், உற்பத்தியும், வணிகமும் தேவைப்படுகிறது. ஆங்கிலம் மிகவும் சாதாரண மொழி, அது எப்படி உலகம் முழுக்க பரவியது என்றால் ஆங்கிலத்திற்கு பின்னால் அறிவியலும், கண்டுபிடிப்புகளும் இருக்கிறது. ஒரு பொருளை எவன் கண்டுபிடிக்கிறானோ அவன், அவனின் மொழியில் பெயர் வைத்துகொள்கிறான். சோனி, ஹிட்டாச்சி, சாம்சங் போன்ற பெயர்களை சொல்லவில்லையா அதுபோல்தான் நாம் கண்டுபிடித்தால் அதற்கு நம் பெயர்தான். அப்படித்தான் ஒரு மொழி வளரும். திருக்குறள் உலகத்தின் எந்த மொழியிலும் திருக்குறள்தான். அதை எவனாலும் மாற்றமுடியாது. அதுபோல் திருவள்ளுவர்தான். பாரதி சொன்ன கருத்து பாரதியுடையதுதான். 

 

 

சீனர்கள் நம்மை அழிப்பதற்கு ஆங்கிலத்தை உயிரைக் கொடுத்து கற்றுவருகிறார்கள். ஆனால் அவனால் அவ்வளவு எளிதில் ஆங்கிலத்தை கற்றுக்கொள்ள முடியாது. கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் ஆங்கிலத்தின்மீது நம்மைப்போல் காமுற்றோர்கள் யாருமே கிடையாது. ஆனால், நம்மக்கே இன்னும் ஆங்கிலம் சரியாக வரவில்லை. ஆனால், எல்லா மொழியுமே சிறப்பானதுதான், அனைத்து மொழியையும் கற்றுக்கொள்வதில் தவறில்லை. இந்த தலைமுறையினரை நெருக்குதலில் இருந்து கொஞ்சம் சுதந்திரமாக விடுங்கள். அவன் சிந்தனைய வெளிபடுத்த மொழியை ஒரு கருவியாகத்தான் பார்க்கிறான். அதனால் சிறு தவறுகளை மன்னியுங்கள், சிறு தவறுகளை மன்னிக்கும் போது படைப்பாற்றல் அதிகரிக்கும், படைப்பாற்றல் அதிகமாகும்போது அவனுக்குள்  பொறுப்பு அதிகமாகும், பொறுப்புகள் அதிகமாகும் போது, தவறாக எழுதக்கூடாது என்று அவனுக்கே தோன்றும். இளம் தலைமுறையின் படைப்பாற்றலை மொழி எனும் அடிப்படையில் நாம் மட்டுப்படுத்த பார்த்தால், நிச்சயமாக அடுத்த தலைமுறையிக்கு தன் மொழியை அகலமான பார்வைக்கு அது எடுத்து செல்லாது. இந்த சமூகம் வெற்றிபெற்றுவிட்டது நம்புங்கள், இந்த தமிழ் சமூக உலகம் முழுக்க வெற்றி பெற்றுள்ளது நம்புங்கள், வெற்றி பெற்றவனின் பிள்ளை தனது மொழியை பேசும் நம்புங்கள். 

 

 

 

Next Story

"உண்மையை மட்டுமே வைத்து எடுக்க வேண்டுமென்றால்" - சூரரைப் போற்று விமர்சனங்களுக்கு கேப்டன் கோபிநாத் பதில்...

Published on 20/11/2020 | Edited on 20/11/2020

 

suriya

 

சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள படம் 'சூரரைப் போற்று'. தீபாவளி விருந்தாக வெளியான இப்படம், ஏர் டெக்கான் என்ற, விமான நிறுவனத்தை ஆரம்பித்த கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. 'சூரரைப் போற்று' படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிற அதே நேரத்தில், இப்படம் கோபிநாத்தின் உண்மையான கதையை அப்படியே கூறாமல், கற்பனை கலந்து கூறுவதாக விமர்சனம் எழுந்தது. இந்தநிலையில், இதுபோன்ற விமர்சனங்களுக்கு கேப்டன் கோபிநாத் பதிலளித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில், உண்மையை மட்டுமே வைத்துப் படமாக எடுத்தால், அது டாக்குமென்டரியாகிவிடும் எனக் கூறியுள்ளார். 

 

கேப்டன் கோபிநாத் பதிவிட்டுள்ள ட்விட் வருமாறு:-
       

"என்னுடைய சில பள்ளிகால நண்பர்களும், இராணுவத் தோழர்களும், ஏர் டெக்கானில் சில சகாக்களும், சூரரைப் போற்று படம், என்னுடைய 'சிம்ப்ளி ஃப்ளை' புத்தகத்தில் கூறப்பட்ட உண்மைகளுக்கு மாறாக உள்ளது அல்லது அப்புத்தகம் சித்தரித்த வாழ்க்கைக்கு மாறாக உள்ளது என வருத்தப்படுகின்றனர். அவர்களிடம் நான், இப்படத்தில், சினிமாவுக்காகக் கற்பனை சேர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த சினிமாவிற்கான மசாலாவை தாண்டி, படத்தில் நல்ல விருந்து உள்ளது எனக் கூறி வருகிறேன்.

 

உண்மைகளை வைத்து மட்டுமே படமெடுக்க வேண்டுமென்றால், அது டாக்குமென்டரியாகிவிடும். அதற்கு மதிப்பு இருந்தாலும், அது வேறுவகையான படமாக இருக்கும். ஒரு 'ஹீரோ' (வெற்றியாளர்) வலிமையானவனாகத் தெரியலாம். ஆனாலும் அவன் பாதிக்கப்படக் கூடியவன்தான். இப்படம், 'ஹீரோக்கள்' வெற்றி பெற, மனைவி மற்றும் குடும்பத்தின் உணர்வுப்பூர்வமான ஆதரவு தேவை என்பதையும், ஹீரோக்களை விட அவர்களது  குழுவினர் அதிகம் தியாகம் செய்யவேண்டுமென்பதையும் காட்டுகிறது. 

 

மனைவியாக இருக்கும் ஒருவர், தனது கனவுகளை தியாகம் செய்யாமல், ஹீரோவின் (கணவனின்) கனவுகளைப் பகிர்ந்துகொள்ள முடியும். ஒரு மனைவி, தன்னை இரண்டாம் நிலைக்குத் தள்ளிக் கொள்ளாமல், தன்னுடைய அடையாளத்தையும், சுயமரியாதையையும் இழக்காமல், ஆணுக்கு ஆதரவாக இருக்க முடியும். அதே நேரத்தில், அவர் தனது கணவன் சோர்ந்து போகும்போது, அவனது நம்பிக்கையை அதிகப்படுத்த முடியும். இதனை (இயக்குனர்) சுதா, அபர்ணா மூலம் மிகத் திறமையாக சித்தரித்துள்ளார். 

 

ஒருவன் விழ விழ எழுகிறான் என்பது, இப்படத்தின் முக்கிய அம்சமாக இருக்கிறது. நான் தோல்வியடைந்தேன். ஆனால், முற்றிலுமாகத் தோற்றுப்போனவன் கிடையாது. நானாக (முயற்சியை) நிறுத்தும் போதுதான் முற்றிலும் தோற்றுப் போனவனாகிறேன். நான் விழ விழ எழுவேன், என ஒருவன் தனக்குள்ளேயே சொல்லிக்கொள்ள வேண்டுமென்பதும், விடாப்பிடியாக ஒன்றைச் செய்து கொண்டிருப்பது மட்டுமல்லாமல், நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள், சூரியன் கண்டிப்பாக உதிக்கும், நமக்கான கதவு திறக்கும் என நம்பவேண்டுமென்பதுதான் இப்படம் கூறும் உண்மையான கருத்து. இக்கருத்தினை சூர்யா, அழுத்தமாகவும், ஏற்றுக் கொள்ளும்படியும் அனைவருக்கும் கடத்தியிருக்கிறார்".

 

இவ்வாறு கேப்டன்  கோபிநாத் , தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். 

 

 

 

Next Story

இங்க வந்தும் இதைத்தான் பாக்குறீங்களா? கூகுள் நிறுவனத்தை அதிர வைத்த தமிழர்கள்

Published on 11/07/2019 | Edited on 11/07/2019

யூ-ட்யூப், அறிமுகமானது 2005ஆம் ஆண்டில் என்றாலும் இந்தியாவில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது ஜியோவின் வருகைக்குபிறகுதான். தொடங்கப்பட்ட ஒரு ஆண்டிலேயே யூ-ட்யூப் நிறுவனம் கூகுள் நிறுவனத்தால் வாங்கப்பட்டது. 2010க்குப் பிறகு இந்தியாவில் மெல்ல பரவத்தொடங்கிய யூ-ட்யூப், 2016இல் ஜியோவின் வருகைக்குப் பிறகு காட்டுத்தீ போல பரவியது. அதுவரை எழுத்து வடிவில் படித்த வந்த அனைத்தையும் வீடியோ வடிவில் பார்க்கத்தொடங்கினர் இந்தியர்கள். யூ-ட்யூப் சேனல் நடத்துவது என்பது ஒரு தொழில் வாய்ப்பாகவும் உருவானது.

 

nayagi



தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்த சினிமாவையும் தொலைக்காட்சி சேனல்களையும் நம்பி, துரத்தி, வாய்ப்புக்காகக் காத்திருந்த லட்சக்கணக்கான இளைஞர்கள், யூ-ட்யூபில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி லட்சக்கணக்கான ரசிகர்களை சென்றடைந்தனர். அதன் மூலம் நல்ல வருமானத்தையும் ஈட்டினர். இந்த நிலவரத்தை உணர்ந்த திரைப்படத்துறையும் யூ-ட்யூப் பக்கம் வந்தது. பாடல்கள், ட்ரெயிலர்கள் யூ-ட்யூபில் வெளியிடப்பட்டன. இன்று அது, திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் வருமானத்தைத் தரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

திரைப்படங்களுக்கு போட்டியாக 90களில் பெரிய ஊடகமாக உருவெடுத்தது தொலைக்காட்சி. முதலில் வாரத் தொடர்களாக வந்தவை மக்களின் வரவேற்பைப் பார்த்து மெகா சீரியல்களாக தினமும் ஒளிபரப்பாகின. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிய தமிழ் மெகா சீரியல்களுக்கு அச்சுறுத்தலாக டப்பிங் சீரியல்கள் இடையில் வந்தன. சிறிது இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் தமிழ் சீரியல்கள் வெற்றிநடை போடுகின்றன. மெகா சீரியல்களை வெறித்தனமாகப் பார்ப்போரை கிண்டல் செய்வதும் தமிழகத்தில் உண்டு. தொலைக்காட்சித்துறையும் மெதுவாக யூ-ட்யூபை முக்கியமாகக் கருதத் தொடங்கியது. மெகா சீரியல்கள் யூ-ட்யூபிலும் வரத் தொடங்கின. ஒவ்வொரு தொலைக்காட்சி சேனலும் தங்களுக்கென தனி யூ-ட்யூப் சேனல் தொடங்கி அதிலும் சீரியல்கள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினர். இன்று யூ-ட்யூப் மற்றும் பிற ஆன்லைன் வீடியோ ஒளிபரப்பு தளங்கள் தொலைக்காட்சி சேனல்களுக்கு பெரிய போட்டியாக உருவெடுத்துள்ளன.

 

 

gopi



கூகுள் நிறுவனத்தின் சார்பில் அதன் முக்கிய பங்களிப்பாளர்களுடனான சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. கூகுள் நிறுவனத்தின் இந்திய, தென்னிந்திய அளவிலான முக்கிய அதிகாரிகள் பங்கேற்ற அந்த சந்திப்பில் அவர்கள் பல தகவல்களையும் பகிர்ந்துகொண்டனர். அந்தத் தகவலின்படி தமிழ் யூ-ட்யூப் பயனாளர்கள் அதிகம் பார்க்கும் நிகழ்ச்சிகளில் மெகா சீரியல்கள் முன்னிலையில் உள்ளன. அவர்கள் பகிர்ந்த வரிசைப்படி சன் டிவியில் ஒளிபரப்பாகும் விகடனின் நாயகி சீரியல் முதலிடத்தில் உள்ளது. ரோஜா, அழகு, பிரியமானவள், கல்யாண வீடு ஆகிய சீரியல்களும் முன்னணியில் உள்ளன. பல ஆண்டுகளாக யூ-ட்யூப் நிகழ்ச்சிகள் உருவாக்கி புகழ் பெற்ற பல சேனல்களை எளிதில் முந்தியிருக்கின்றன இந்த சீரியல்கள். உலகமெங்கும் சீரியல்கள் விரும்பிப்பார்க்கப்பட்டாலும் தமிழின் இந்த சீரியல் விருப்பம் அவர்களையே ஆச்சரியப்பட வைத்துள்ளது.

தொலைக்காட்சி தொடர்கள் போக சமையல் நிகழ்ச்சிகளும் திரைப்பட விமர்சனங்களும் அரசியல் நிகழ்வுகளை கேலி செய்யும் காமெடி நிகழ்ச்சிகளும் தமிழர்களால் விரும்பிப் பார்க்கப்படுவதாக அவர்கள் பகிர்ந்தனர்.