Skip to main content

“ஒரே ஒரு ரூபாய் கூட தமிழக முதல்வரால் வாங்கிக்கொடுக்க முடியவில்லை” -கே.பாலகிருஷ்ணன்

Published on 01/12/2020 | Edited on 01/12/2020
K.Balakrishnan-MLA

 

மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி, கடந்த ஆறு நாட்களாக, பஞ்சாப் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. 

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நக்கீரன் இணையதளத்திடம் கருத்தினை பகிர்ந்து கொண்டார்.

 

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு உதவுகின்றன என்றும் விவசாயிகளின் பெயரை குறிப்பிட்டு பயனடைந்துள்ளனர் என்றும் மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியிருக்கிறாரே? 

 

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடும் குளிரில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் பிரதமர் விவசாயிகளுக்கு புதிய வாழ்வு, புதிய உரிமை கிடைக்கிறது என்று பேசுகிறார். நீங்கள் போட்ட சட்டம் புதிய வாழ்வு, புதிய உரிமை கிடைக்கிறது என்று விவசாயிகள்தானே சொல்ல வேண்டும். இந்த சட்டம் பயன் அளிக்குமா? பயன் அளிக்காதா? என்பதை அனுபவத்தில் விவசாயிகள்தானே சொல்ல முடியும். 

 

அப்படியென்றால் விவசாயிகள் விவரம் தெரியாமல் போராடுகிறார்களா? புதிய வாழ்வு, புதிய உரிமை கிடைக்கிறது என்றால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏன் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார். விவசாயிகள் இந்த அளவுக்கு கொதித்தெழுந்து போராட வந்திருக்கிறார்கள், அதனை புரிந்து கொள்ள முடியாத ஜனநாயக பண்பு இல்லாமல் மத்திய பாஜக அரசு செயல்படுகிறது. 

 

ddd

 

விவசாயிகள் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளார்களே?

 

விவசாயிகளுக்கு பாதிப்பு வரும்போது அவர்களுக்காக போராடாத கட்சி நாட்டில் இருந்து என்ன பிரயோஜனம். அரசியல் கட்சி எதற்காக வைத்திருக்கிறார்கள். மக்களுக்கு பாதிப்பு வரும்போது, அவர்களுக்கு பிரச்சனை வரும்போது அதனை தட்டிக் கேட்பது, அதற்காக போராடுவதுதான் அரசியல் கட்சிகளின் நோக்கம். 

 

விவசாயிகளுக்கு பாதிப்பான அந்த சட்டத்தை எதிர்த்து அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள்
போராடுவதில் என்ன தவறு. இன்னொன்று விவசாயிகள் ஆதரவு இல்லாமல் அரசியல் கட்சிகள் மட்டும் போராடிட முடியுமா? 

 

இவர்கள் கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் தாங்களாகவே முன்வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கட்சி தூண்டிவிடுகிறது என்றால் கட்சியினர் மட்டும்தானே வருவார்கள். பொதுவான விவசாயிகள் எப்படி வருவார்கள். டெல்லி எல்லைகள் ஸ்தம்பிக்கும் வகையில் அவர்கள் கூடியுள்ளனர். 

 

dd

 

 

ஒப்பந்தம் போட்டப்படியே விவசாயிகளின் பொருளுக்கான விலையை கொடுப்பார்கள் என்று கூறுகிறார்களே?

மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனத்திடம் அரை ஏக்கர், ஒரு ஏக்கர் வைத்துள்ள ஒரு சாதாரண விவசாயி எப்படி விலை பேச முடியும். ஒப்பந்தம் போட்ட நிறுவனம்தான் கடன், இடுபொருள்கள் கொடுக்கப்போகிறது. கடன் கொடுக்கிறவர்கள் சொல்கிற விலையை மீறி நீங்கள் சொல்லும் புது விலையை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? நீங்கள் சொல்லும் விலையை ஒப்பந்தத்தில் போடுவார்களா? அப்படியே போட்டாலும் அந்த விவசாய பொருள் கொடுக்கும் நேரத்தில் அதன் தரம் குறைவாக இருப்பதாக கூறி அந்த விலையை குறைப்பார்கள். ஒப்பந்ததில் சொன்னப்படி பணம் கொடுக்கவில்லை என்றால் யாரிடம் முறையிடுவது.

 

அரசு அதிகாரி ஆர்.டி.ஓ.விடம் முறையிடலாம் என்று சொல்கிறார்களே?  

தனியார் கரும்பு ஆலையிடம் விவசாயிகள் தங்கள் கரும்பை கொடுப்பதாக ஒப்பந்தம் போடுகிறார்கள். இதற்கான விலையை மாநில அரசு அறிவிக்கிறது. மாநில அரசு அறிவிக்கிற விலையை தனியார் கரும்பு ஆலைகள் கொடுக்கணுமா வேண்டாமா? மாநில அரசு அறிவிக்கிற விலையை கொடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் சொல்லியிருக்கிறது. 

 

ஆனால் இந்தியா முழுவதும் தனியார் கரும்பு ஆலைகள் அந்த விலையை விவசாயிகளுக்கு கொடுக்கவில்லை. தமிழகம் உள்பட இந்தியா முழுக்க 50 ஆயிரம் கோடி, 60 ஆயிரம் கோடி பாக்கி வைத்துள்ளது. தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கி 6 ஆயிரம் கோடி இருப்பதாக சொல்கிறார்கள். பலமுறை பேச்சுவார்த்தை நடந்து முடிந்துவிட்டது. இதுவரை ஒரே ஒரு ரூபாய் கூட தமிழக முதலமைச்சரால் வாங்கிக்கொடுக்க முடியவில்லை. 

 

நீதிமன்றமே சொன்ன பிறகு என்னால் கொடுக்க முடியாது என்று தனியார் ஆலை முதலாளிகள் சொல்கிறார்கள். இதனால் எந்த முதலாளியை கைது செய்தார்கள். எந்த முதலாளி சொத்துகளை பறிமுதல் செய்தார்கள். இத்தனைக்கும் இது விவசாயியும் தனியார் ஆலையும் போட்ட ஒப்பந்தம் இல்லை. இருவருக்கும் பொதுவாக மாநில அரசு நிர்ணயித்த விலை. அதையே வாங்க முடியவில்லை. 

 

இந்த மத்திய, மாநில அரசுகள் முதலில் பல வருடங்களாக பாக்கி உள்ள கரும்பு விவசாயிகளுக்கான பாக்கித் தொகையை தனியார் ஆலை உரிமையாளர்களிடம் இருந்து வாங்கிக் கொடுக்கட்டும். இதையே வாங்கிக் கொடுக்க முடியாதவர்கள், இன்னும் பல மடங்கு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தம் போடப்பட்ட விலையை வாங்கிக்கொடுப்போம் என்பதை எப்படி நம்புவது?

 

புதிய வேளாண் திருத்த சட்டம் தேவையற்றது மட்டுமல்ல பாழ்படுத்தும் சட்டம். விவசாயிகளை நாசப்படுத்தும் திட்டம் என்றார் அழுத்தமாக.

 

 

Next Story

டெல்லி மேயர் தேர்தல் ரத்து; பா.ஜ.க.வுக்கு எதிராக ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Aam Aadmi struggle for Canceled Delhi Mayoral Election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், டெல்லி மேயர் மற்றும் துணை மேயரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (26-04-24) நடைபெற இருந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி மாநிலத்தில் மொத்தம் 250 கவுன்சிலர்கள் உள்ளனர். டெல்லியில் உள்ள மேயரைத் தேர்ந்தெடுக்க 10 எம்.பி.க்கள், 14 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 250 கவுன்சிலர்கள் 274 வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். இதில் மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு அதிகபட்சமாக 138 வாக்குகள் தேவை. அந்த வகையில், ஆம் ஆத்மி கட்சிக்கு, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் உட்பட 151க்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைக்கப்பெற இருந்தது. இதனால், டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது.

இந்த நிலையில், டெல்லி மேயர் தேர்தலை ஆளுநர் அலுவலகம் ரத்து செய்யப்படவுள்ளதாக டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து தெரிவிக்கையில், ‘தலைமை அதிகாரி நியமிக்கப்படாததால் டெல்லி மேயர் தேர்தல் தள்ளி வைக்கப்படுகிறது; எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்து மேயர் சபையில் போராட்டம் நடத்தி வருகின்றது.

இது குறித்து ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கூறுகையில், “ பட்டியலின சமூகத்தைத் தடுக்க இவர்கள் சதி செய்கிறார்கள். இந்த முறை, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்தான் டெல்லி எம்சிடியின் மேயராக வர இருந்தது. ஆனால் தேர்தலை ரத்து செய்ததன் மூலம், அவர் தனது பட்டியலின விரோத மனநிலை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை சிதைத்ததற்கு மற்றொரு சான்றைக் கொடுத்துள்ளனர்” எனப் பேசினார். தற்போது மேயர் ஷெல்லி ஓபராயின் பதவிக்காலம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் பதவியில் நீடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. 

Next Story

“இதை செய்ய சொன்னால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்” - வாட்ஸ் அப் எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 WhatsApp warning May have to leave India

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் செயலி தான் வாட்ஸ் அப். இந்த செயலி மூலம், தகவல்களை பரிமாறவும், இணைய சேவை மூலம் எந்தவித கட்டணமுமின்றி வீடியோ கால், ஆடியோ கால் போன்றவற்றை பயன்படுத்தவும் முடியும். மேலும், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் என அனைத்து விதமான பரிமாற்றங்களையும் இந்த செயலி மூலம் அனுப்பக்கூடிய வசதிகள் உண்டு. இந்த செயலியை உபயோகிக்காத மக்கள் மிகவும் சொற்பமாக தான் இருக்க முடியும் என்றுதான் கூற வேண்டும். 

இதற்கிடையில் வாட்ஸ் அப் பயனர்களின் வசதிகளுக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த செயலி மூலம் பயனர் ஒருவருக்கு அனுப்பும் செய்திகளை மூன்றாம் நபர்கள் பார்க்க முடியாதவாறு எண்டு டு எண்டு என்கிரிப்ஷன் ( End to End Encryption) முறையை கொண்டு வந்தது. இதனைப் பயன்படுத்தி பயனர்கள், தாங்கள் அனுப்பும் செய்திகளை பாதுகாத்து கொள்ளலாம். இதனால், தனிப்பட்ட ஒருவரின் செய்திகள் பாதுகாக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் மத்திய அரசு புதிய மாற்றத்தை கொண்டு வந்தது. மத்திய அரசு கொண்டு வந்த அந்த சட்டத்தில் கூறியதாவது, போலி செய்திகளையும், நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தவறான செய்தி பகிர்வுகளை கண்டறிய வேண்டும். இதனால், வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற செய்தி பகிர்வு செயலி வாயிலாக பகிரப்படும் அனைத்து செய்திகளும் சேமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

இதனை எதிர்த்து வாட்ஸ் அப், பேஸ் புக் ஆகிய நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று (25-04-24) டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ‘வாட்ஸ் அப் எண்டு டு எண்ட் என்கிரிப்ஷன் காரணமாக போலி செய்திகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், இது போலி செய்திகளால் நாட்டில் நிலவும் அமைதி மற்றும் ஒற்றுமையை சீர்குலைத்துவிடும்’ என வாதிட்டார். 

இதனையடுத்து, வாட்ஸ் அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேஜஸ் காரியா, “இந்த சட்டத்தை அமல்படுத்துவதால் நாங்கள் ஒரு முழுமையான சங்கிலியை வைத்திருக்க வேண்டும். மேலும், மில்லியன் கணக்கான செய்திகளை பல ஆண்டுகளாக சேமிக்க வேண்டும் நிலை உருவாகும். உலகில் எந்த நாட்டிலும் இது போன்ற சட்டங்கள் இல்லை.  இது போன்ற சட்டங்களை கொண்டு வந்து  என்கிரிப்ஷனை எடுக்க சொன்னால் வாட்ஸ்அப் இந்தியாவை விட்டு செல்ல வேண்டி இருக்கும்” எனத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பான வழக்கை ஒத்திவைத்தனர்.