Skip to main content

அமைச்சரின் அண்ணனிடம் டீலிங்! குடிபோதையில் எகத்தாளம்! -நடவடிக்கை எடுத்த சிறைத்துறை!

Published on 14/09/2019 | Edited on 14/09/2019

 

“மதுரை மத்திய சிறைச்சாலை ரொம்பவே ஸ்ட்ரிக்டாம். யாரோ முன்னாள் கைதியாம். பேரு முத்துகிருஷ்ணனாம். அவரு ஜாமீன்ல வெளிய வந்து மதுரைல இருக்கிற ஹெரிடேஜ் ஸ்டார் ஹோட்டல் பார்ல பார்ட்டி வச்சாராம். முத்துகிருஷ்ணன் ஜெயில்ல இருக்கும்போதே உதவி ஜெயிலர் முனியாண்டி எல்லா வசதியும் பண்ணிக் கொடுத்தாராம். அந்த நட்புல, முனியாண்டியும், முதுநிலை காவலர்களான மணியும் மூர்த்தியும் அந்தப் பார்ட்டியில் குஷியா கலந்துக்கிட்டாங்களாம். இந்தத் தகவல், மதுரை மத்திய சிறை சூப்பிரண்டு ஊர்மிளாவுக்கு தெரிஞ்சு போச்சாம். நேர்மையான அதிகாரியாச்சே! மூணு பேரையும் சும்மா விடுவாங்களா? சஸ்பென்ட் பண்ணிட்டாங்களாம்.”
 

bar



-சிறைத்துறையின் இந்த நடவடிக்கையை கலாய்க்கும் விதத்தில் நம்மிடம் சொன்ன  ‘சிறை பட்சி’  “உண்மையிலேயே நடந்தது என்னன்னா..?” என்று அந்த விவகாரத்தை விவரித்தது. 

 

madurai central jail


தமிழக அமைச்சர் ஒருவரின் அண்ணன் முன்னிலையில்தான், இரண்டு துறைகள் சம்பந்தப்பட்ட ‘டீலிங்’ அனைத்தும் நடந்துவருகிறது. மகன் குறித்த சொந்தக் கவலை ஒருபுறம் இருந்தாலும், தான் குஷியாக இருப்பதற்கு அந்த அண்ணனுக்கு மதுரைதான் வசதியாக இருக்கிறது. அதனால், அடிக்கடி மதுரைக்கு வருவார்.  அப்படி ஒரு விசிட்டாகத்தான், ஸ்டார் ஹோட்டலான ஹெரிடேஜ் மதுரைக்கு அன்று வந்தார். மதுரை மத்திய சிறை,  தனது வழக்கமான கவனிப்பை, முதல்நிலை தலைமைக் காவலரான நாகேந்திரபாண்டியன் மூலம் அவருக்குச் செய்தது. அதற்காகவே ஹெரிடேஜ் ஹோட்டலுக்குப் போனார் நாகேந்திரபாண்டியன். அப்போதுதான், எதிர்பாராதவிதமாக உதவி ஜெயிலர் முனியாண்டியையும், முதுநிலை காவலர்கள் மணியையும் மூர்த்தியையும் ஹெரிடேஜ் பாரில் சந்திக்க நேர்ந்திருக்கிறது.  


 

மத்திய சிறையில் பணி என்றாலும்,  ‘லம்ப்’ ஆக வருவாய் ஈட்டுவதற்கு, வளமான இன்னொரு தொழிலை சிலர் ‘சைடு பிசினஸ்’ ஆகப் பார்த்து வருகிறார்கள்.  அந்த விஷயமாக அமைச்சரின் அண்ணனைச் சந்தித்து ‘டீல்’ நடத்தவே நாங்களும் வந்திருக்கிறோம் என்று அந்தச் சந்திப்பின்போது, நாகேந்திரபாண்டியனிடம், உதவி ஜெயிலர் முனியாண்டி தரப்பு போதையில் தெனாவட்டாகப் பேசியிருக்கிறது.  “நான் மந்திரியின் அண்ணனைப் பார்க்க வந்தேன்..” என்று நாகேந்திரபாண்டியன் அழுத்தமாகச் சொல்ல.. “நாங்க மட்டும் என்னவாம்? அந்த நொண்ணனைப் பார்க்கத்தான் வந்தோம். நாங்களும் மந்திரி வரைக்கும் பணம் கொடுத்துத்தான் எல்லாமும் பண்ணுறோம்.  எங்களுக்கு மந்திரியையும் தெரியும். அவரோட அண்ணனையும் தெரியும்.” என்று உச்சஸ்தாயியில் உளறியிருக்கின்றனர்.  

 

police



ஸ்டார் ஹோட்டல் பாரில், பலர் முன்னிலையில் மந்திரியின் பெயர் நாறிவிட,  இந்த விவகாரம், சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. ஆபாஷ்குமார் வரை போனது.  அதன்பிறகுதான், மற்ற விஷயங்களை வசதியாக மறைத்துவிட்டு,  ஜாமினில் வெளிவந்த கைதியுடன் மது அருந்தினார்கள் என்பது பெரிதுபடுத்தப்பட்டு, மூவரையும் சஸ்பென்ட் செய்து உத்தரவு பிறப்பித்துவிட்டார் மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா. 

 

police



இது சம்பந்தமாக அந்தத் தொழில் நடத்தும் ஒருவரிடம் பேசினோம்.  “அமைச்சர் அண்ணனுடன் சந்திப்பா?” என்று கேட்டுவிட்டு,   “முன்பு இந்தத் தொழிலில் கொடி கட்டிப்பறந்த ஒருவர் ஜெயலலிதாவிடமே நேரில் பேசும் அளவுக்கு செல்வாக்காக இருந்தார். அப்புறம் இன்னொருவரிடமிருந்தும்  அந்தத் தொழில் பறிக்கப்பட்டது. தற்போது, தமிழகம் முழுவதும் அந்தத் தொழிலில்  உச்சத்தில் இருப்பவர்கள் புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த இருவர்தான்.  திண்டுக்கல்காரரின்  அக்கா மகன்கள் இருவரைக்  ‘கம்பெனி’ என்று அழைக்கிறார்கள்.  இவர்களிடம் கப்பம் கட்டிவிட்டால் போதும். அந்தந்த மாவட்டங்களில் வருவாய்த்துறையிலிருந்து காவல்துறை வரை எந்தத் தொந்தரவும் வராமல் பார்த்துக்கொள்வார்கள்.   ஃபைல் க்ளியர் பண்ணுவது போன்ற  தொடக்க வேலைகளை  அமைச்சரின் அண்ணன் பார்த்துக்கொள்கிறார். அவரிடம் டீலிங் நடத்துவது இங்கே பலருக்கும் பிடித்தமானது. விரும்பியே அள்ளிக்கொடுப்பார்கள். அவருடைய கைக்குப் பணம் போய்விட்டால் கொடுத்தவர்களின் தேவை பூர்த்தியாகிவிடும். அப்படி ஒரு நல்ல பெயர் அவருக்கு உண்டு.” என்றனர்.  


 

நாம் அமைச்சரின் அண்ணனைத் தொடர்பு கொண்டோம். “சொல்லுங்க..” என்றவர்,  ‘மதுரை மத்திய சிறைச்சாலையில் மூவர் சஸ்பென்ட் ஆனது குறித்து..’ என்று சொல்ல ஆரம்பித்ததுமே வேகமாக லைனைத் துண்டித்தார். அடுத்து நம் லைனுக்கு வரவேயில்லை. 
 

ஆளும் கட்சியினர் ஆசியுடன் தமிழகமே சுரண்டப்படும்போது, மத்திய சிறையில் மூவர் பணியிடை நீக்கம் என்பதை,   வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகவே கருத வேண்டியிருக்கிறது. 


 

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

முன்னாள் பிரதமரின் பேரன் மீது பாலியல் புகார்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
complaint against the grandson of the former prime minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமைய தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கத்தில், “பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஹாசன் மாவட்டத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகள் பரவி வருகின்றன. இந்நிலையில், எஸ்ஐடி விசாரணை நடத்துமாறு அரசுக்கு மகளிர் ஆணையத் தலைவர் கடிதம் எழுதியிருந்தார். எனவே இந்தக் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா மீண்டும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.