Skip to main content

கரோனாவால் உயிரிழந்த மருத்துவர்... மின்மயானத்தில் எரிக்க பொதுமக்கள் எதிர்ப்பு... பீலா ராஜேஷ் பதில் 

Published on 14/04/2020 | Edited on 14/04/2020

 

கரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த மருத்துவரின் உடலை மின்மயானத்தில் எரிக்க எதிர்ப்பு தெரிவித்தால் சென்னை அருகே பரபரப்பு ஏற்பட்டது. சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அந்த மருத்துவரின் உடல் மீண்டும் மருத்துவமனையின் பிணவறையிலேயே வைக்கப்பட்டது.

 

sss



ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அந்த மருத்துவருக்கு வயது 60. நெல்லூரைச் சேர்ந்த அவர் தனியாக கிளினிக் வைத்து நடத்தி வந்தார். அவருக்கும், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள், அவரிடம் பணிபுரியும் டிரைவர் ஆகியோருக்கும் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் மருத்துவருக்கு மட்டும் உடல்நிலை மோசமாக ஆனநிலையில் கடந்த 4-ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அவர் உயிரிழந்தார். 

 

aaaa



மருத்துவர் உயிரிழந்தது குறித்து அவரது உறவினர்களுக்கு இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டதாகவும், அவர்கள் மருத்துவரின் உடலை சென்னையிலேயே தகனம் செய்துவிடும்படி கூறியதாகவும் தெரிகிறது. இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவரின் உடலை தகனம் செய்ய அம்பத்தூரில் உள்ள மின்மயானத்திற்கு கொண்டு சென்றனர்.
 

http://onelink.to/nknapp


மருத்துவமனை ஊழியர்கள் மின்மயானத்தில் உள்ளவர்களிடம் பேசினார்கள். அப்போது மின்மயானத்தில் உள்ளவர்கள், தங்களுக்குப் போதுமான கரோனா பாதுகாப்பு கவச உடைகள் இல்லை என்பதால், மருத்துவர்களின் உடலை எரிக்க மறுத்துள்ளனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள், கரோனா பாதுகாப்பு கவசங்கள் அணிந்து கொண்டு வந்தவர்களைப் பார்த்து, இந்த மின்மயானத்தில் உடலைத் தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவரின் உடலை அங்கேயே வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். 
 

aaa



தகவல் அறிந்து அம்பத்தூர் காவல்நிலைய போலீசார் அங்குச் சென்றனர். பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் பொதுமக்கள் மருத்துவரின் உடலைத் தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மருத்துவரின் உடலை அங்கேயே வைத்துச் சென்றது குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். மருத்துவமனை நிர்வாகத்திற்கும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவரின் உடலை மீண்டும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டுவந்து பிணவறையிலேயே வைக்கப்பட்டது.
 

இந்தநிலையில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் திங்கள்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பின்போது, அம்பத்தூரின் மருத்துவரின் உடலை எரிக்க பொதுமக்கள் எதிர்பு தெரிவித்தது குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலைத் தகனம் செய்வது பற்றி அரசு ஊழியர்களுக்கு எல்லாமே தெரியும். அதேபோல தனியார் மருத்துவமனைகளுக்கும் அந்த வழிமுறைகள் கொடுத்திருக்கிறோம். அரசாங்கத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் வந்தது இல்லை. இன்று தனியார் மருத்துவமனையில் அவசரமாகப் போயுள்ளனர். தலைமைச் செயலாளர் அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும், கலெக்டர்களுக்கும் ஏற்கனவே இதுபோன்று வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். மீண்டும் சொல்லியிருக்கிறார். இனி அதுபோல் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 


 

Next Story

செஸ் வீரர் குகேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Chief Minister MK Stalin praises chess player Gukesh

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து செஸ் வீரர் குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். 17 வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில்  இன்று (28.4.2024) பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர். 

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.