Skip to main content

“ஜெயலலிதா மரணம்; விஜயபாஸ்கர் சிக்குவது உறுதி...” - அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர்

Published on 06/09/2022 | Edited on 10/09/2022

 

Bengaluru Pugazhendi about Arumugasamy commission

 

ஜெயலலிதாவின் மரணத்தைப் பற்றிய உண்மைகளை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம், 600 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை தமிழக அரசிடம் ஒப்படைத்துவிட்டது. அந்த அறிக்கையை கடந்த 29-ஆம் தேதி கூடிய தனது அமைச்சரவையில் வைத்து விவாதித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

 

அதனடிப்படையில் சசிகலா, டாக்டர் சிவக்குமார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் ஆகியோர் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் மீது சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கவும், அந்த நடவடிக்கைகள் மேற்கொண்ட பிறகு கொடுக்கப்படும் விபர அறிக்கையுடன் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

 

இதனை தனது அறிக்கையாக தி.மு.க. அரசு வெளியிட்டிருக்கும் நிலையில், சசிகலா தண்டிக்கப்படுவாரா? ஆணையத்தின் பரிந்துரைகளை வல்லுநர் குழு ஏற்குமா? என்றெல்லாம் அ.தி.மு.க.வில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக நாம், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர், விசாரணை ஆணைய வழக்குகளில் அனுபவமுள்ள உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் உள்ளிட்டவர்களிடம் கலந்துரையாடினோம். 

 

அந்த வகையில் ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றவரான வழக்கறிஞர் பெங்களூர் புகழேந்தியிடம் நாம் விவாதித்த போது, "ஆணையத்தின் முன்பு ஆஜராகும்படி வி.கே.சசிகலாவுக்கு, செக்சன் 8 பி-யின்படி சம்மன் அனுப்பினார் ஆறுமுகசாமி. அது ஒரு முக்கியமான நோட்டீஸ். அதன்படி சசிகலா ஆஜராகி, ஆணையம் கேட்கும் கேள்விகளுக்கு அவர் பதிலளித்திருக்க வேண்டும். ஆனால், வழக்கறிஞர்களின் யோசனையைக் கேட்டு அவர் நேரில் ஆஜராகாமல் தனது பதில்களை மனுவாக சமர்ப்பித்தார் சசிகலா. இளவரசி, ஓ.பி.எஸ். எல்லாம் ஆஜராகிய நிலையில், சசிகலா வராமல் போனதுதான் அவருக்கு மைனஸ் பாயிண்ட். ஆணையத்தில் நான் ஆஜராகி, ‘தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்’ என எனக்குத் தெரிந்த உண்மைகளைச் சொன்னேன். நான் கொடுத்த வாக்குமூலத்தை வலிமையானதாக எடுத்துக் கொண்டார் ஆறுமுகசாமி.

 

சுகாதார அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரின் கட்டுப்பாட்டில்தான் அப்பல்லோ மருத்துவமனை இருந்தது. அவர்தான் ஆதிக்கம் செலுத்தியவர். ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள், அப்பல்லோவில் நடந்த ரகசியங்கள் என அனைத்தையும் அறிந்த ஒரே நபர் விஜயபாஸ்கர்தான். காரணம், மருத்துவ சிகிச்சை பற்றி சசிகலாவுக்கு என்ன தெரியும்? அவர் டாக்டர் இல்லையே! அதனால், ஆணையத்தின் பரிந்துரைகள்படி பார்த்தால் விஜய பாஸ்கர் சிக்குவது உறுதியாகிறது.

 

அதேசமயம், இந்த ஆணையத்தின் அறிக்கையை வைத்து, தி.மு.க. அரசுக்கு என்ன மாதிரியான ஆலோசனைகளை சட்ட வல்லுநர்கள் வழங்குவார்கள் என்பதும், அதன் மீது என்ன விசாரணையை மேற்கொள்வார்கள் என்பதும் தெரியவில்லை. காவல்துறை விசாரணையா? சி.பி.சி.ஐ.டி. விசாரணையா? சி.பி.ஐ. விசாரணையா? என்று எந்த கோணத்தில் தி.மு.க. அரசு விசாரிக்கப்போகிறது? அதனால், எதுவாக இருந்தாலும் விரைவான நடவடிக்கையை முதல்வர் ஸ்டாலின் எடுக்க வேண்டும். அரசு எடுக்கப்போகும் அந்த விசாரணை வளையத்தில் நிச்சயம் விஜயபாஸ்கரும் மேலும் சிலரும் தப்பிக்க முடியாது என்றுதான் தெரிகிறது. சசிகலா நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தால் ஒருவேளை அவருக்கு சாதகமாகக் கூட அறிக்கை அமைந்திருக்கும்” என்கிறார் அதிரடியாக.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.