Skip to main content

’’அறுவடையும் செய்ய முடியல;விற்கவும் முடியல’’ -புலம்பித்தவிக்கும் காய்கறி விவசாயிகள்

Published on 26/03/2020 | Edited on 26/03/2020


 

t

 

அரியலூர் மாவட்டம் வண்ணம் புத்தூர் கிராமத்தில் காய்கறிகள் பயிர்சாகுபடிக்கு பெயர் பெற்றகிராமம் .இந்த கிராமத்தில் இருந்து காய்கறிகளை மொத்தமாக தஞ்சை மாவட்டம் திருவையாறு சந்தைக்கு கொண்டு விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் கொரோனா காரணமாக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இதன் காரணமாக விவசாயிகள் காய்கறிகளை உற்பத்திசெய்து அனை அறுவடை செய்யமுடியாமல் தவிக்கின்றனர்.

 

 ’’மக்கள் பீதியில் வேலைக்கு வரமாட்டேங்கிறாங்க.  5 பேருக்கு மேல் ஒன்றாக கூட கூடாது என சொல்றாங்க. அரசு நடவடிக்கை சரி தான். ஆனா விவசாயிகள் நாங்க கஷ்டப்பட்டு  உற்பத்தி செய்ததை அறுவடையும் செய்ய முடியல. விற்கவும் முடியல. என்ன தான் செய்வோம்’’ என புலம்புகின்றனர்.  எனவே பல்வேறு இடர்ப்பாடுகளை தாண்டி விவசாயிகள் சந்தையில் கொண்டு போய் காய்கறிகளை விற்காமல் அருகில் உள்ள கிராம மக்களிடையே நேரடியாக விற்பனை செய்து வருகிறார்கள். அதில் அரியலூர் மாவட்டம் வண்ணம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது வயலில் விளைந்த தக்காளியை ரூ.20 க்கு விற்பனை செய்தார். 

 

அவர்,  ‘’எல்லைகள் மூடப்பட்டு உள்ளது. சந்தைகள் வழக்கம் போல் செயல்பட்டாலும் எல்லை தாண்டி தஞ்சை மாவட்டம் திருவையாறு மார்க்கெட்டில் காய்கறிகளை கொண்டு செல்வோம். விற்பனை முடிந்து மொத்த வியாபாரிகள் உடனடியாக காசு கொடுத்து விடுவார்கள். மேலும் விற்பனை எளிதாக இருந்தது. இப்போது நடைமுறைச் சிக்கல்கள் ஆட்கள் வரமாட்டேங்கிறாங்க. எனவே கொஞ்சம் கொஞ்சமாக விளைந்த காய்கறிகளை நாங்களே பறித்து விற்பனைக்கு அருகில் உள்ள குந்தபுரம், கீழக்காவட்டாங்குறிச்சி, தட்டாஞ்சாவடி, மேலக்காவட்டாங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் விற்பனை செய்வதாகவும் கூறினார். மேலும் பொதுமக்களிடையே முன்பெல்லாம் விற்பனைக்கு போனால் ஒரு சில மணி நேரங்களிலேயே விற்பனை செய்ய முடிந்தது.

 

tt

 

தற்போது கூலித்தொழிலாளிகள் பலரிடமும் பணப்புழக்கம் இல்லாததால 3 மணி நேரம் ஆகியும் 50 கிலோ தக்காளிய விற்க முடியல’’ என வருத்தத்துடன் தனது கருத்தை பதிவிட்டார். 

 

அனைத்து தொழில்களிலும் இது போன்ற சிரமங்கள் கஷ்டங்கள் நஷ்டங்கள் இருக்கவே செய்யும். எந்த இழப்பையும் காலப்போக்கில் சரிசெய்துவிடலாம்.  ஆனால், மனித இழப்புகளை எப்படி சரி செய்ய முடியும். எனவே இதுபோன்று விவசாயிகள் உற்பத்தி செய்த காய்கறிகளை அரசு அதிகாரிகள் அவர்களே சில தன்னார்வ குழுக்கள் மூலம் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன்  காய்கறிகளை கொள்முதல் செய்து தேவைப்படும் குடும்பத்தினர்களுக்கு  அனுப்பி வைக்கலாம்.   கொள்முதல் செய்யவும்  அதை விற்பனை செய்யவும் செல்போன் எண்கள் மூலம் தெரியப் படுத்தினால் தேவைப்படும் குடும்பத்தினர் தொடர்பு கொள்வார்கள்.  இதற்காக தன்னார்வலர்கள் பல மாவட்டங்களில் செயல்படுகின்றனர்.

 

 அரியலூர் மாவட்டத்திலும் இதுபோன்று தன்னார்வலர்கள்  முன்வரவேண்டும்.  அரசு அதிகாரிகள் அனுமதியோடு காய்கறிகள் வீணாவதை தடுக்கலாம்.  மக்களுக்கும் 21 நாட்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருப்பவர்களுக்கு காய்கறிகள் அத்தியாவசிய தேவை.  இதை அவர்களிடம் கொண்டு சேர்க்கலாம்.  அதிகாரிகள் இதற்கு ஒரு தீர்வு காண முன் வர வேண்டும்.