Skip to main content

இதுதான் விஜயின் ஒரு விரல் புரட்சி!!!  சர்கார் - விமர்சனம்

Published on 06/11/2018 | Edited on 07/11/2018

'சர்கார்' விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது படம். ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பில் இருந்த இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நாளிலிருந்து சர்ச்சைகளும் ஆரம்பித்தன. விஜய், வாயில் சிகரெட்டுடன் இருந்த போஸ்டரில் ஆரம்பித்த பிரச்சனை பின்பு கதைத் திருட்டு விவகாரம் வரை சென்று ஒரு வழியாக பல சர்ச்சைகளுக்கு நடுவே தீபாவளி அன்று வெளியாகி உள்ளது. விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகிய முதல் இரண்டு படங்களும்  சமூகக் கருத்தை மையமாகக் கொண்டு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவை.அந்த வரிசையில் ஓட்டு அரசியலை மையப்படுத்தி வெளியாகி உள்ளது இந்த சர்கார். ஒவ்வொரு தேர்தலிலும் நமக்குத் தெரியாமல் மறைவாக எத்தனையோ கள்ள ஓட்டுகள் விழுகின்றன. அந்த கள்ள ஓட்டுகள் மூலம் எந்த அளவு நாட்டில் ஊழல் தலைவிரித்து ஆடுகின்றது என்பதையும், ஒவ்வொரு தனி மனிதனுடைய ஓட்டின் முக்கியத்துவத்தையும் பேசியுள்ள சர்காரின் 'ஒரு விரல் புரட்சி' வெற்றி பெற்றதா?

 

vijay sarkar



அமெரிக்காவில்  GL என்ற ஒரு மிகப்பெரிய கார்ப்ரேட் கம்பெனியின் CEO வான விஜய், தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தலில் தன் ஓட்டை பதிவு செய்ய வருகிறார். வந்த இடத்தில் அவருடைய ஓட்டை வேறு ஒருவர் கள்ள ஓட்டு போட்டு விடுகிறார். இதனால் கொதித்தெழுந்த விஜய் தேர்தல் ஆணையம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஜெயித்து விடுகிறார். பின்னர் தன் ஓட்டை மறு வாக்குப் பதிவில் போட அவருக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கிறது. இந்த நேரத்தில் தேர்தலில் வெற்றிபெற்ற பழ.கருப்பையா மற்றும் ராதாரவி ஆகியோர் விஜய் ஓட்டுப் போடுவதை தடுக்கின்றனர். பின் இந்த பிரச்சனை பெரிதாக மாறி விஜய் அரசியலில் இறங்க நேர்கிறது.  விஜய் ஜெயித்தாரா, அவர் ஓட்டை பதிவு செய்தாரா என்பதே படத்தின் மீதிக்கதை.

 

keerthy suresh



விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் இதற்கு முன் வெளியான படங்களில் பொதுவாக ஒரு குறிப்பிட்ட மூன்று அல்லது நான்கு எபிசோடுகள் மிகவும் பிரமிக்கத்தக்க வகையில் இருக்கும். அதுவே படத்தை வெற்றியும் பெற வைக்கும். சர்கார் படத்திலும் இதே போன்ற உத்திகளை பயன்படுத்தி ரசிக்க வைக்க முயற்சி செய்துள்ளார் இயக்குனர் முருகதாஸ். அரசியல் படமான இந்தக் கதையில் வசனங்களின் பங்கு அதிகமாக இருக்கும்.  அருமையான வசன வரிகளை கொடுத்து நன்றாக ரசிக்க வைத்துள்ளார் வசனகர்த்தா ஜெயமோகன். இதுவே படத்திற்கு மிகப்பெரிய பலமாகவும் அமைந்துள்ளது. அதற்கு வசனகர்த்தாவான ஜெயமோகனுக்கு ஒரு மிக பெரிய சபாஷ். என்னதான் நல்ல வீரியமான வசனங்கள் படத்தில் இருந்தாலும் திரைக்கதையில் விறுவிறுப்பு குறைவாக இருப்பதால் ஆங்காங்கே அயர்ச்சியே மேலோங்குகிறது. குறிப்பாக முருகதாஸ் படங்களுக்கே உரித்தான ரசிக்க வைக்கும் வைக்கும்படியான எபிசோடுகள் இதில் இல்லாதது சற்று ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. துப்பாக்கியில் ஒரே நேரத்தில் 12 பேரை சுடுவது, நாயை வைத்து குற்றவாளிகளை கண்டுபிடிப்பது, கத்தியில் சில்லறை வைத்து போடும் சண்டை, கிளைமாக்ஸில் வரும் பிரஸ் மீட் என இவர்கள் கூட்டணியில் நாம் இதற்கு முன் பார்த்து மெய்சிலிர்த்த எபிசோடுகள் இதில் இல்லாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

 

varalaxmi



சமகால அரசியலில் நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளை இவ்வளவு தைரியமாகவும், வெளிப்படையாகவும் சொல்லியதற்கு ஏ.ஆர்.முருகதாஸை கண்டிப்பாகப் பாராட்டலாம். தன் முந்தைய படங்களில் ஹீரோயிசத்தை விட கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த முருகதாஸ் இந்த படத்தில் சற்று ஹீரோயிசத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதை தவிர்த்திருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும். லாஜிக் என்பதெல்லாம் பொருட்டாகவே இல்லாமல்தான் இருக்கிறது. பியூஸ் மானுஷ், சபரிமாலா போன்ற செயல்பாட்டாளர்கள், சகாயம் ஐஏஎஸ் போன்ற பாத்திரங்கள், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த தீக்குளிப்பு போன்ற சம்வங்கள் இப்படி சமகால உண்மை விஷயங்களை இணைத்தது நல்ல ஐடியாதான். ஆனால், படத்திற்கு எந்த அளவு பலம் சேர்க்கிறது? நாயகன் பாத்திரத்தின் சின்ன செயற்கைத் தனத்தால் சீரியஸ் விஷயங்கள் அழுத்தம் தராமல் போகின்றன.

படத்தின் நாயகன் விஜய் தனது தோற்றத்திலும், வசன உச்சரிப்பிலும் நடிப்பிலும் மாஸ் காட்டியுள்ளார். குறிப்பாக ஆக்சன் காட்சிகளில் மிகவும் ஸ்டைலாக இருக்கிறார். படத்தின் பெரிய பலமான வசனங்களை இவர் சர்வசாதாரணமாக மக்களிடையே கடத்தும்படியாக உச்சரித்து தியேட்டர்களில் கைதட்டல்களை அள்ளுகிறார். நாயகி கீர்த்தி சுரேஷ் மிகவும் அழகாக உள்ளார். மற்றபடி அவருக்கு படத்தில் அதிக வேலை இல்லை. முருகதாஸ், 'துப்பாக்கி'யிலிருந்தே தன் பட நாயகிகளை ரொம்பவும் பலவீனமாகப் படைக்கிறார். 'அறம்', 'மகளிர் மட்டும்' காலகட்டத்தில் 'ரமணா', 'கஜினி' எடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் இப்படி செய்யலாமா?

 

pala karupaiah



அரசியல்வாதிகளாக வரும் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி ஆகியோர் அரசியல் வில்லத்தனத்தை காட்டி அருமையாக நடித்துள்ளனர். இதில் குறிப்பாக பழ.கருப்பையாவிற்கு மகளாக நடித்திருக்கும் வரலக்ஷ்மி சரத்குமாரின் பாத்திரம் படத்தின் கடைசிப் பகுதியை நன்றாக தூக்கி நிறுத்த முயன்றுள்ளது. இந்த கதாபாத்திரத்தையே படத்தின் ஆரம்பத்தில் இருந்து நன்றாக உபயோகப்படுத்தியிருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

படங்களில் எந்த அளவிற்கு ஹீரோவின் கதாபாத்திரம் வலிமையாக உள்ளதோ அதே அளவு வில்லன் கதாபாத்திரமும் வலிமையாக இருக்க வேண்டும் அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த படம் கண்டிப்பாக ஒரு பிளாக் பஸ்டர் வெற்றி படமாக அமைய பிரகாசமான வாய்ப்புள்ளது. ஆனால் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை வலிமையாக படைக்காதது படத்திற்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கட்டத்தில் கதையையே வில்லனாக மாற்றியுள்ள சாமர்த்தியம் பாராட்டத்தக்கதென்றாலும் அது வலிமையாக இல்லாமல் போனது படத்தின் சுவாரசியத்தை வெகுவாக குறைத்துள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் 'ஒரு விரல் புரட்சி' பாடல் மட்டும் சிலிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மற்ற பாடல்கள் வைக்கப்பட்ட இடங்கள் பாடல்களை ரசிக்கவிடவில்லை. பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது, கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு படத்திற்கு பிரம்மாண்டத்தை கூட்டியுள்ளது. சிறிய சிறிய இடங்களில் கூட இவரது கேமரா அழகாக விளையாடி உள்ளது, படத்திற்கு வலு சேர்த்துள்ளது.

சர்கார் -  அரசியல் பேசுகிறது, நமது வாக்களிக்கும் உரிமையின் முக்கியத்துவத்தை கூறியுள்ளது, விஜய் ஸ்டைலாக ஆக்டிவ்வாக இருக்கிறார். ஆனால், இவை மட்டும்  படத்திற்குப் போதுமா?விஜய்யின் இந்த ஒரு விரல் புரட்சி பேச்சு வடிவில் இருக்கும் முழுமை செயல் வடிவில் இல்லை.                                                                                                                                                                                                                

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாந்தியும் சமாதானமும் உண்டானதா? - ‘லால் சலாம்’ விமர்சனம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
lal salaam review

வள்ளி படத்தில் ஆரம்பித்து குசேலன் படம் வரை சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற பிறகு ரஜினிகாந்த் பெரும்பாலும் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் படங்களில் போதிய வரவேற்பைப் பெற்றதில்லை. அந்த நீண்ட நாள் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கௌரவ தோற்றத்தில் நடித்து வெளியாகியிருக்கும் லால் சலாம் திரைப்படம் வென்றதா இல்லையா?

தன் அரசியல் லாபத்திற்காக ஜாதி, மத பேதம் இன்றி சகோதரர்களாக பழகி ஒன்றாக இருக்கும் கிராமத்தை மதக் கலவரம் மூலம் போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் இரண்டாகப் பிரித்து விடுகின்றனர். இதனால் அந்த ஊரில் மிகப் பெரிய கலவரம் வெடித்து ரத்த பூமியாக மாறுகிறது. இந்த பிரச்சனையை அந்த ஊரில் மத நல்லிணக்கத்தோடு சகோதரத்துவம் நிறைந்த பெரிய மனிதராக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மொய்தீன் பாய் (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) எப்படி தன் புத்தி கூர்மையை உபயோகப்படுத்தி மக்களிடம் பாசம், நேசம் காட்டி அதேசமயம் எதிரிகளிடம் அதிரடியாக மோதி, சில தந்திரங்கள் செய்து சரி செய்கிறார்? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

ஒரு அரசியல்வாதி தன்னுடைய அரசியல் லாபத்திற்காக மதவாத அரசியலை பயன்படுத்தி மக்களிடையே எப்படி பிரிவினையை உண்டாக்கி அதில் லாபம் பார்க்கிறார் என்பதை கதையின் மையக் கருவாக வைத்து அதன் மூலம் குடும்பம், பாசம், விளையாட்டு, ஆக்‌ஷன் என அத்தனை ஜனரஞ்சகமான விஷயங்களையும் வைத்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக லால் சலாமை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஒரு ஸ்ட்ராங்கான கதையை எடுத்துக்கொண்டு அதற்குத் தன் பாணியில் திரைக்கதை அமைத்து அதன் மூலம் அழுத்தமான காட்சிகளை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏனோ மாஸ் காட்சிகளில் சற்றே தடுமாறி இருக்கிறார். அதேபோல் இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் வரும் ரஜினிகாந்தை தவிர்த்துவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு மூத்த நடிகர் நடித்திருந்தால் இன்னும் கூட இப்படம் சிறப்பாக இருந்திருக்குமோ என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது.

அந்த அளவிற்கு பாய் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது படத்தின் தன்மையை ஓவர் ஷேடோ செய்திருக்கிறது. மற்றபடி சொல்ல வந்த விஷயத்தையும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. அதேபோல் படத்தின் வசனமும் கதையின் நோக்கமும் சிறப்பாக அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மேக்கிங்கிலும் தனிக் கவனம் செலுத்தி சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பதும் நன்றாக இருக்கிறது. கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை சற்று திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் இன்னமும் லால் சலாம் சிறப்பாக அமைந்திருக்கும்.

படத்தில் இரண்டு நாயகர்கள், ஒருவர் விஷ்ணு விஷால் இன்னொருவர் விக்ராந்த். இதில் விக்ராந்தை காட்டிலும் விஷ்ணு விஷாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார். இவருக்கும் அவர் அம்மா ஜீவிதாவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அழுத்தமான காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகிக்கு வழக்கம்போல் அதிக வேலை இல்லை. புதுமுக நடிகை என்பதால் அவ்வப்போது முகத்தை காட்டிவிட்டு மறைந்து விடுகிறார். இன்னொரு நாயகன் விக்ராந்த் அவருக்கான ஸ்பேசில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கும் ரஜினிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா படம் முழுவதிலும் தன் அனுபவ நடிப்பு மூலமாக பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில், இந்தப் படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக தன் அனுபவ நடிப்பின் மூலம் அதற்கு உயிர் கொடுத்து கதைக்கும் வலு சேர்த்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் லிவிங்ஸ்டன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியாக வரும் நிரோஷா தனக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார். விஷ்ணு விஷாலின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் அவருடன் வரும் டைகர் கார்டன் தங்கதுரை அவருக்கான வேலையை செய்திருக்கிறார்கள். போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் பல இடங்களில் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கின்றனர். குறிப்பாக விவேக் பிரசன்னா எரிச்சல் ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றிருக்கிறார். இன்னொரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கே.எஸ். ரவிக்குமாரும், கபில்தேவும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

முக்கியமாக கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படத்திற்கு மிகப்பெரிய தூணாக இருந்து படத்தை தூக்கி நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். வழக்கம்போல் இவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மிக சிறப்பாக அமைந்து அவர் வரும் காட்சிகள் எல்லாம் மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறது. இருந்தும் இவ்வளவு பெரிய நடிகரை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்திருப்பது இந்த படத்திற்கு அவசியமா? என்ற கேள்வியை மனதில் எழச் செய்திருக்கிறது. ஏனென்றால் இவரின் கதாபாத்திரம் படத்திற்கு பிரதான கதாபாத்திரமாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும்படியான பிம்பத்தை ஏற்படுத்தி இருப்பது இந்த படத்தின் முக்கியமான நோக்கத்தை அது ஓவர் ஷேடோ செய்வது போல் இருக்கிறது. மற்றபடி இவருக்கான மாஸ் காட்சிகள், பஞ்ச் வசன காட்சிகள், நெகிழ வைக்கும் காட்சிகள் என இந்த கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை ரஜினி தன் தோள்மேல் சுமந்து சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். 

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தேர் திருவிழா, ஜலாலி பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசையில் எந்தெந்த காட்சிக்கு எவ்வளவு இசை வேண்டுமோ அதை நிறைவாக கொடுத்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் அதை இன்னும் கூட சிறப்பாக கொடுத்திருக்கலாம். இப்படியான ஒரு இசையை ரஹ்மானிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு சற்று ஒரு புள்ளி குறைவாகவே இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் பிரம்மாண்டத்தை இவரது ஒளிப்பதிவு நன்றாக என்ஹான்ஸ் செய்திருக்கிறது. வெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்காக இந்த படத்திற்கு வருபவர்களுக்கும், பொது ரசிகராக வருபவர்களுக்கும் பெரிதும் ஏமாற்றம் அளிக்காமல் நல்ல மத நல்லிணக்கங்களை மக்களுக்கு தெரிவித்து குடும்பத்துடன் சென்று ஒருமுறை ரசிக்கும்படியான படமாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்த லால் சலாம் திரைப்படம்.


லால் சலாம் - மத நல்லிணக்கம்!

Next Story

டைமிங் காமெடி கைகொடுத்ததா? - 'வடக்குப்பட்டி ராமசாமி' விமர்சனம்!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
vadakkupatti ramasamy movie review

டிக்கிலோனா படம் தந்த வெற்றியின் உற்சாகத்தில் அதே டீம் உடன் இணைந்து மீண்டும் ஒரு நகைச்சுவை படத்தை கொடுத்திருக்கிறார் நடிகர் சந்தானம். இந்தப் படம் இந்த டீமின் முந்தைய படத்தை போல் வரவேற்பை பெற்றதா, இல்லையா?

1970களில் வடக்குப்பட்டி என்னும் கிராமத்தில் கடவுள் நம்பிக்கை இல்லாத ராமசாமி என்ற சந்தானம் அந்த கிராமத்தில் இருக்கும் மக்களை தன் சொந்த இடத்தில் கட்டிய கோயில் மூலம் மக்களின் கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தி கல்லா கட்டுகிறார். இதைக் கண்ட கிராமத்தின் தாசில்தார் 'ஜெய் பீம்' புகழ் தமிழ் இவர்கள் அடிக்கின்ற கொள்ளையில் தனக்கும் பங்கு வேண்டும் என கேட்கிறார். இதனால் சந்தானத்திற்கும் தமிழுக்கும் மோதல் ஏற்படுகிறது. இவர்களுக்குள் இருக்கும் ஈகோ மோதலால் அந்த கோயில் அரசாங்கத்தால் மூடி சீல் வைக்கப்படுகிறது. சந்தானத்துடன் இணைந்து அந்த ஊர் மக்கள் ஒற்றுமையாக இருந்து சண்டையிட்டுக் கொள்ளாமல் இருந்தால் கோயிலை திறந்து விடுவோம் என அரசாங்கம் முடிவு எடுக்கிறது. இதையடுத்து மீண்டும் அந்த கோவிலை திறக்க சந்தானம் அண்ட் கோ என்னவெல்லாம் செய்கிறது? அதை தடுக்க முயற்சிக்கும் தமிழ் அண்ட் கோ வின் நிலை என்ன ஆனது? என்பதை இப்படத்தின் மீதி கதை.

டிக்கிலோனா படம் பெற்ற வரவேற்பை அப்படியே கண்டினியூ செய்து இந்தப் படத்திலும் அதே வரவேற்பை பெரும்படி ஒரு நிறைவான நகைச்சுவை படத்தைக் கொடுத்து கைதட்டல் பெற்று இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் யோகி. கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருத்தன் அந்த கடவுளை வைத்துக் கொண்டு எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறான் என்ற ஒற்றை வரி கதையை வைத்துக் கொண்டு மிகச் சிறப்பான நகைச்சுவையை திரைக்கதை மூலம் பார்ப்பவர்களுக்கு கிச்சுகிச்சு மூட்டி படத்தையும் கரை சேர்த்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் யோகி. முதல் பாதி சற்றே மெதுவாக ஆரம்பித்து போகப்போக வேகம் எடுத்து இரண்டாம் பாதி ஜெட் வேகத்தில் பறந்து பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து நிறைவான படம் பார்த்த உணர்வை கொடுத்துள்ளது வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம். ஒரு சந்தானம் படத்தில் நாம் என்னவெல்லாம் எதிர்பார்ப்போமோ அதை எல்லாம் இந்த படம் மீண்டும் ஒருமுறை நிறைவாக கொடுத்து ரசிக்க வைத்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பிளஸ்ஸாக அமைந்து படத்தையும் கரை சேர்த்திருக்கிறது.

வழக்கம்போல் நாயகன் சந்தானம் தனது ட்ரேட் மார்க் ஆன்லைன் பஞ்ச் வசனங்களால் ரசிகர்களுக்கு காமெடி விருந்து கொடுத்துள்ளார். இவரது அதிரிபுதிரியான வசன உச்சரிப்பு, காமெடி டைமிங்ஸ் ஆகியவை படத்திற்கு தூணாக அமைந்திருக்கிறது. வழக்கமான நாயகியாக வரும் மேகா ஆகாஷ் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்திவிட்டு சென்றிருக்கிறார். சந்தானம் படம் என்றாலே மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இருக்கும். அதேபோல் லொள்ளு சபா டீமும் உடன் இருந்து கலக்குவார்கள். அவை அப்படியே இந்தப் படத்தில் பிரதிபலித்து படத்தை வேறு ஒரு காலத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரும் ரவி மரியா, ஜான்விஜய், சேசு, மாறன், கூல் சுரேஷ், மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன், தண்டோரா போடும் நபர், இட் இஸ் பிரசாந்த், எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் கொண்ட நட்சத்திர பட்டாளம் அவரவருக்கான ஸ்பெஷலில் புகுந்து விளையாடி பார்ப்பவர்களை கிச்சு கிச்சு மூட்டி உள்ளனர். இவர்களின் நேர்த்தியான காமெடி டைமிங்குகளும் ஆன்லைன் பஞ்ச் வசனங்களும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக புல் சுரேஷின் அசிஸ்டன்ட்களாக வரும் நடிகர்கள் அனைவரும் நகைச்சுவையில் பின்னி பெடல் எடுத்திருக்கின்றனர். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் வரும் மூத்த நடிகர் நிழல்கள் ரவி அவர் பங்குக்கு காமெடியில் அதகலம் செய்து இருக்கிறார். 

தீபக்கின் ஒளிப்பதிவில் வடக்குப்பட்டி கிராமமும் அதை சுற்றி இருக்கும் மலை முகடுகளும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக படம் 1970களில் நடப்பதால் எங்குமே மொபைல் டவர்கள் தென்படாமல் இருக்கும் படி பார்த்துக் கொண்டு அதே சமயம் நேர்த்தியான காட்சி அமைப்புகளையும் சிறப்பாக கையாண்டு இருக்கிறார். சான் ரோல்டன் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை நகைச்சுவைக்கு சிறப்பாக உதவி புரிந்துள்ளது.

கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவர் கடவுள் நம்பிக்கை இருக்கும் மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார். அதேபோல் அவருக்கு ஏற்படும் அச்சுறுத்தலை சமாளிக்கும் விதமாக மெட்ராஸ் ஐ நோயை வைத்து அவர் செய்யும் சேட்டைகளை சிறப்பான திரைக்கதை மூலம் ஜனரஞ்சகமான நகைச்சுவை படமாக இந்த வடக்குப்பட்டி ராமசாமி படத்தை கொடுத்து ரசிகர்களை காமெடியில் மீண்டும் ஒருமுறை திக்கு முக்காட செய்து இருக்கின்றனர்.

வடக்குப்பட்டி ராமசாமி - சிரிப்புக்கு கேரன்டி!