Skip to main content

"கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன்" - வைரலாகும் யுவனின் பதிவு

Published on 18/04/2022 | Edited on 18/04/2022

 

yuvan shankar raja dark dravidian post goes viral

 

'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள புத்தகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா ""மேக் இன் இந்தியா" திட்டம் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. நாட்டில் சாலைகள், ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விரைவு எக்ஸ்பிரஸ் சாலைகள் போன்றவை உலகத் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சமூக நீதியைப் பொறுத்தவரை, பல்வேறு சட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி இருக்கிறார். முத்தலாக் சட்டம், 'பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் - பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்' என்ற திட்டமும், பெண்களின் திருமண வயதை உயர்த்த முடிவெடுத்ததும் பெண் சமுதாயத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும். இதுபோன்ற நரேந்திர மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளைக் கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார். அம்பேத்கரும், நரேந்திர மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

இளையராஜாவின் இந்த முன்னுரை தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.  பிரதமர் நரேந்திர மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிடுவது தவறானது என்று கூறி சமூக வலைத்தளங்களில் இளையராஜாவின் கருத்துக்கு பலரும் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் பதிவிட்டு வருகின்றனர். இதே போன்ற இளையராஜாவின் கருத்திற்கு ஆதரவாக பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா உள்ளிட்ட சில தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா, "கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன்" என்று அவரது புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இளையராஜாவின் சர்ச்சைக்குரிய கருத்திற்கு இடையில் யுவன் சங்கர் ராஜாவின் இந்த பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by U1 (@itsyuvan)

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கனவை நோக்கி ஓடும் ‘ஸ்டார்’ கவின்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
kavin star movie trailer released

டாடா பட வெற்றியை தொடர்ந்து 'பியார் பிரேமா காதல்' பட இயக்குநர் இளன் இயக்கத்தில் 'ஸ்டார்' படத்தில் நடித்துள்ளார் கவின். மேலும் நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் படத்திலும் நடிக்கிறார். இரு படத்தின் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதில் ஸ்டார் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினி சித்ரா என இரண்டு நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்தில் லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படம் அடுத்த மாதமான மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் 4 பாடல்கள் முன்னரே அடுத்தடுத்து வெளியான நிலையில் சமீபத்தில் வெளியான ‘மெலோடி’ பாடல் ரசிகர்களை கவர்ந்தது. இதில் கவின் பெண் வேடமிட்டு நடனமாடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

இதையடுத்து இயக்குநர் இளனுக்கு தயாரிப்பாளர் பெண்டேலா சாகர், வீட்டு மனை வாங்கி கொடுத்துள்ளார். “ஸ்டார் படத்தை பார்ப்பதற்கு முன்பே ஹைதராபாத்தில் எனக்கு ஒரு வீட்டு மனை வாங்கி தந்துள்ளார்” என இயக்குநர் இளன் அவரது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. சினிமாவில் நடிகனாக ஆக வேண்டும் என்ற கனவோடு ஓடும் இளைஞன், வாழ்க்கையில் என்னென்ன சிக்கல்களை சந்திக்கிறான், அதை எதிர்கொண்டு எப்படி ஹீரோவாக மாறினான் என்பதை காதல், காமெடி, எமோஷன் என கலந்து விரிவாக விவரிக்கும் படமாக இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. கவின் பல்வேறு கெட்டப்புகளில் தோன்றுகிறார். இந்த ட்ரைலர் தற்போது ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. 

Next Story

“பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்” - இளையராஜா வழக்கில் நீதிமன்றம் கேள்வி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
ilaiayaraaja copyright case update

இளையராஜாவின் 4500 பாடல்களை பயன்படுத்துவதற்காக எக்கோ, அகி உள்ளிட்ட நிறுவனங்கள் அவரிடம் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ஆனால் 2014ஆம் ஆண்டு, ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை இல்லாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ, அகி மியூசிக் உள்ளிட்ட சில நிறுவனங்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2019ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில் தயாரிப்பாளரிடம் உரிமை பெற்று இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதென்றும், இளையராஜாவுக்கும் இந்தப் பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருக்கிறதென்றும் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

இந்த மேல்முறையீட்டு மனு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அவர்கள்,  இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்தனர். இந்த தீர்ப்பை எதிர்த்து, பாடல்களின் காப்புரிமையை தயாரிப்பாளரிடமிருந்து பெற்றுள்ளோம் என்றும் அதனடிப்படையில் இந்த பாடல்களை பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் எக்கோ நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 

இந்த மனு கடந்த மாதம் நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் சக்திவேல் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி சுப்பிரமணியன் அறிவித்தார். மேலும் இந்த வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தும் உத்தரவிட்டார். இதையடுத்து இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பிற்கும் இளையராஜா தரப்பிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது. 

இந்த நிலையில் இந்த மனு இன்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷஃபிக் முன்பு மீண்டும் விராணைக்கு வந்தது. அப்போது எக்கோ நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “இசையமைத்ததற்கு இளையராஜாவிற்கு தயாரிப்பாளர் ஊதியம் கொடுத்து விடுவதால், அதன் உரிமை தயாரிப்பாளரிடம் சென்றுவிடும். தயாரிப்பாளரிடம் உரிமை பெற்றுள்ளதால் பாடல்கள் தங்களுக்கு சொந்தமாகிவிடும்” என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு வழக்கறிஞர், “இசையமைப்பது என்பது கிரியேட்டிவ் பணி என்பதால் காப்புரிமை சட்டம் பொருந்தாது” என்றார். 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “பாடல் வரிகள், பாடகர் அனைத்தும் சேர்ந்து தான் பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அப்படி இருக்கும் போது, பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்” என்ற கேள்வியை முன் வைத்தார்கள். மேலும் பாடல்கள் விற்பனை செய்ததன் மூலம் வணிக ரீதியாக இளையராஜா பெற்ற தொகை யாருக்குச் சொந்தம்? அவர் பெற்ற தொகை மேல்முறையீட்டு வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என தெரிவித்துள்ளனர். அதே போல் பாடலாசிரியருக்கு உரிமை கோருவதற்கு வாய்ப்பிருக்கிறதா, அது குறித்து தங்களின் விளக்கம் என்ன என்று இளையராஜா தரப்பிடம் கேட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்கள்.