Skip to main content

இசை - இளையராஜா; பின்னணி இசை - தேவா... 90களில் வெடித்த ஆடியோ ரைட்ஸ் சர்ச்சை!

Published on 29/07/2021 | Edited on 29/07/2021

 

writer sura

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், இளையராஜா இசையமைத்த படத்திற்கு தேவா பின்னணி இசையமைத்தது ஏன் என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

இளையராஜா இசையமைத்த ஒரு படத்திற்கு தேவா பின்னணி இசையமைத்தார். பின்னணி இசையில் இளையராஜா மன்னன். பின்னணி இசையமைப்பதில் இளையராஜாவை யாரும் நெருங்கக்கூட முடியாது. அப்படி இருக்கையில், இளையராஜா படத்திற்குத் தேவா எப்படி பின்னணி இசையமைத்தார். இளையராஜா அதற்கு எப்படிச் சம்மதித்தார்? இளையராஜா படத்தில் தேவா பிண்ணனி இசையமைத்தார் என்பது இந்தத் தலைமுறையினருக்குக் கேட்க நம்பமுடியாததாகத் தெரியலாம். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?

 

பி.வாசு இயக்கத்தில் பிரபு நடிப்பில் உருவான 'கட்டுமரக்காரன்' படத்தில்தான் இந்த சம்பவம் நடந்தது. காங்கிரஸ் கட்சி பிரமுகரான ஏ.ஜி.சுப்ரமணியம்தான் அந்தப்படத்தைத் தயாரித்தார். வாழப்பாடி ராமமூர்த்தி, கருப்பையா மூப்பனார் போன்ற முக்கிய பிரமுகர்களோடு மிக நெருக்கமாக இருந்தவர் ஏ.ஜி.சுப்ரமணியம். காமராஜரையும் நன்கறிந்தவர்.  'கட்டுமரக்காரன்' படத்திற்கு இளையராஜா இசையமைப்பாளர். நான் மக்கள் தொடர்பு அதிகாரி. 'கட்டுமரக்காரன்' படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் வெளியானபோது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. பி.வாசு - பிரபு கூட்டணியில் உருவான சின்ன தம்பி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதால் பி.வாசு - பிரபு கூட்டணி குறித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.  'கட்டுமரக்காரன்' படத்தின் பூஜை ஏ.வி.எம் ஸ்டூடியோவில் நடந்தபோது ஒட்டுமொத்த திரையுலகமுமே அங்கு வந்திருந்தது.

 

பின்னர் படப்பிடிப்பு தொடங்கியது. பாடல் பதிவு உள்ளிட்ட எல்லா வேலைகளும் சுமூகமாக நடந்தன. இளையராஜா இசையமைக்கக்கூடிய படங்களின் ஆடியோ ரைட்ஸ் எக்கோ என்ற நிறுவனத்திற்கு வழங்கப்படும். இது இளையராஜாவின் நண்பர் கம்பெனி. ஆனால், இதனுடைய ஓனர் இளையராஜாதான் என்பார்கள். பிற இசையமைப்பாளர்கள் இசையமைத்தால் அவர்களுக்கான சம்பளம் வழங்கப்படும். அதுபோக பாடல் பதிவுக்கான செலவு உள்ளிட்டவற்றிற்குப் பணம் வழங்கப்படும். ஆனால், இளையராஜா ஆரம்பகாலத்திலிருந்தே பாடலின் உரிமையையும் வாங்கிக்கொள்வார். படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் போடும்போது இதற்கான ஒப்பந்தத்தையும் போட்டுக்கொள்வார். ஒரு கட்டத்தில் எக்கோ கம்பெனியோடு சில பிரச்சனைகள் ஏற்பட்டு அது இழுத்து மூடப்பட்டது. பின்பு, ராஜா கேசட் என்ற நிறுவனத்தின் மூலம் பாடல் உரிமையை இளையாராஜா வாங்கிவந்தார். தமிழ்நாடு ரைட்ஸ், வெளிநாடு ரைட்ஸ் என இரு வகை உண்டு. இதில், தமிழ்நாடு ரைட்ஸை மட்டும் இளையராஜா பெற்றுக்கொள்வார். ஓவர்சீஸ் ரைட்ஸை பிற நிறுவனங்கள் போட்டிபோட்டு வாங்கிக்கொள்வார்கள். அந்த ஓவர்சீஸ் ரைட்ஸ்ஸில் 50 சதவிகிதம் இளையராவிற்கும் 50 சதவிகிதம் தயாரிப்பாளருக்கும் பங்கு உண்டு. எல்லா நிறுவனங்களும் அப்படித்தான் வழங்கிக்கொண்டு இருந்தனர். இது தொடர்பான பிரச்சனை முதல்முறையாக 'கட்டுமரக்கார'னில் வெடித்தது. 

 

அந்த ஓவர்சீஸ் ரைட்ஸ்ஸில் 50 சதவிகிதத்தை இளையராஜாவிற்கு வழங்க தயாரிப்பாளர் ஏ.ஜி.சுப்ரமணியம் தயாராக இல்லை. நாம் ஏன் கொடுக்கவேண்டும் என நினைத்தார். இளையராஜா கையெழுத்துப் போட்டு கடிதம் கொடுத்தால்தான் பாடலைத் தருவோம் என ஏ.வி.எம்மில் கூறிவிட்டனர். அவர்கள் பாடல் கொடுத்தால்தான் கேசட் பதிந்து விற்பனை செய்யமுடியும். உடனே, ஏ.ஜி.சுப்ரமணியம் வேறொரு படத்தின் பாடல் பதிவில் இருந்த இளையராவை நேரில் சென்று சந்தித்தார். தனக்கு 50 சதவிகிதம் ஷேர் கொடுத்தால் கடிதம் தருவதாக இளையராஜா கூற, கொடிகட்டிப்பறந்த எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன்கூட இதெல்லாம் கேட்டதில்லையே என ஏ.ஜி.சுப்ரமணியம் கூறுகிறார். மேலும், தமிழ்நாடு ரைட்ஸ் உங்களுக்கு தருகிறேனே... பிறகு எதற்கு ஓவர்சீஸ் ரைட்ஸ் தரவேண்டும் என ஏ.ஜி.சுப்ரமணியம் கேட்க, எல்லா தயாரிப்பாளரும் கொடுக்கும்போது நீங்கள்மட்டும் எப்படித் தரமுடியாது எனக் கூறலாம் என இளையராஜா கூறுகிறார். இந்த வாக்குவாதம் அப்படியே நடந்துகொண்டிருக்க, ஒருகட்டத்தில் கடுப்பான இளையராஜா அங்கிருந்து நகர்கிறார். அவரைப் பின்தொடர்ந்த ஏ.ஜி.சுப்ரமணியம், 'பேசிக்கிட்டு இருக்கும்போது எப்படி நீங்க போகலாம்' என குறுக்கே கைநீட்டி அவரைத் தடுத்தார். அப்படியிருந்தும் இளையராஜா கடிதம் கொடுக்கவில்லை.

 

சில நாட்கள் கழித்து மீண்டும் ஏ.ஜி.சுப்ரமணியம் இளையராஜாவை சந்திக்கச் செல்கிறார். அப்போது வாலியும் இளையராஜாவும் ஒரு படத்திற்காக பாடல் பதிவு வேலையில் இருந்தனர். இளையராஜாவிடம் அனுமதி கேட்காமல் அவர் இருந்த அறைக்குள் ஏ.ஜி.சுப்ரமணியம் சென்றுவிடுகிறார். கடுப்பான இளையராஜா, 'நீங்க இந்த விஷயத்தை பெரிய பிரச்சனை ஆக்குறீங்க... ரெண்டு மாசம் கழிச்சு எங்கிட்டதான் ரீரெக்கார்டிங்க்கு வரணும்' எனக் கூறுகிறார். அதற்கு, 'ரெண்டு மாசம் கழித்து நடப்பதை அப்போது பார்த்துக்கொள்ளலாம்... இப்ப நடக்குறத பத்தி பேசுங்க சார்' என்கிறார் ஏ.ஜி.சுப்ரமணியம். இந்த விவகாரம் பெரிதாக ஆரம்பித்தவுடன் ஏ.வி.எம் பாடல்களைக் கொடுத்துவிடுகின்றனர். இதற்கு மேலும் இந்த பிரச்சனையை வளர்த்தால் விருப்பத்தகாத சம்பவங்கள் நடக்கும் என நினைத்து அனைவருமே இந்த விவகாரத்தை அப்படியே விட்டுவிடுகின்றனர். ஓவர்சீஸ் ரைட்ஸ்ஸில் ஒரு ரூபாய்கூட இளையராஜாவிற்கு தயாரிப்பாளர் தரவில்லை. 

 

பின், பிண்ணனி இசை என்று வரும்போது தேவாவை இசையமைக்க வைத்தனர். இளையராஜாபோல யாரும் பிண்ணனி இசை அமைக்கமுடியாது என்பது ஏ.ஜி.சுப்ரமணியத்திற்குத் தெரிந்தாலும் சந்தர்ப்பச் சூழல் காரணமாக தேவாவை இசையமைக்க வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எதிர்ப்பாராத சூழல் காரணமாகத்தான் இந்த கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஏ.ஜி.சுப்ரமணியத்தோடு இணைந்து இரண்டு படங்களில் இளையராஜா முன்னர் பணியாற்றியிருக்கிறார். இந்த சம்பவம் பற்றி இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நேரங்களில் சுவாரசியமான மற்றும் எதிர்பாராத சம்பவங்கள் திரையுலகில் நடைபெறும். அதுபோன்ற ஒரு சம்பவம்தான் இந்த ஏ.ஜி.சுப்ரமணியம் - இளையராஜா விவகாரம்.         

   

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சிவாஜி பேச மறுத்த வசனம்; அவருக்காக இவர் தான் பேசினார்” - எழுத்தாளர் சுரா பகிர்ந்த சுவாரசியம்  

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

sura

 

நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலுக்கு எழுத்தாளர் சுரா அவர்கள் ஞான ஒளி திரைப்படத்தின் ஒரு பாடல் பற்றி பகிர்ந்து கொண்ட சுவாரசியமான தகவல்கள் பின்வருமாறு…

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து நூறு நாட்கள் ஓடிய திரைப்படம் ஞான ஒளி. இத்திரைப்படத்தின்  கதை, வசனம் எழுதியவர்  வியட்நாம் வீடு சுந்தரம். இவர் சிவாஜி நாடக மன்றத்துக்கு வியட்நாம் வீடு  என்ற நாடகத்தை எழுதினார். நாடகத்தின் நாயகனாக சிவாஜி கணேசன் நடித்தார். நாடகத்தின் புகழ் காரணமாக, இதே கதையை சிவாஜி பிலிம்ஸ் திரைப்படமாக தயாரித்தது. பி.மாதவன் வியட்நாம் வீடு என்ற படத்தை இயக்கினார். இதுவும் நூறு நாட்கள் ஓடியது. பின்பு அதன் புகழ் காரணமாக கதை ஆசிரியர் சுந்தரம், வியட்நாம் வீடு சுந்தரம் என அழைக்கப்பட்டார். அதன் பிறகு, சிவாஜி கணேசனை வைத்து கௌரவம் என்ற படத்தை வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கினார். கதை ஆசிரியராக இருந்த வியட்நாம் வீடு சுந்தரம் இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநர் ஆனார்.  இந்தப் படமும்  நூறு நாட்கள் ஓடியது. 

 

இந்தத் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் வக்கீலாகவே வாழ்ந்து மிகவும் சிறப்பாக நடித்தார். அதன் பிறகு, கர்ணன் என்ற கதாபாத்திரம் மூலமும், சுந்தரம் என்ற கதாபாத்திரம் மூலமும் காலம் கடந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

 

இதே மாதிரி  ஞான ஒளி என்ற நாடகத்திற்கு வியட்நாம் சுந்தரம் கதை எழுதினார். நாடகத்தின் வெற்றி, அதன் புகழ் காரணமாக திரைப்படமாக ஜெ.ஆர்.மூவிஸ் என்ற நிறுவனம் தயாரித்தது. சிவாஜி கணேசன் உடன் இணைந்து மேஜர் சுந்தர்ராஜன் நடித்தார். இதுவும் நூறு நாட்கள் ஓடியது. பி.மாதவன் என்பவர் இயக்கினார். சிவாஜி கணேசன் நடித்த மிகச்சிறந்த திரைப்படங்களில் ஞான ஒளியும் ஒன்று. ஞான ஒளி திரைப்படத்தை இப்போது உள்ள தலைமுறையினர் பார்த்தால் கூட ஒரு மிகச்சிறந்த திரைப்படம் என்பதை உணரலாம். சிவாஜி கணேசன் எந்த அளவுக்கு ஆழமாக நடித்து முத்திரை பதித்து உள்ளார் என்பதை உணரலாம். ஆண்டனி என்ற கிறிஸ்தவ கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பார் என்பதையும் அறியலாம். 

 

ஞான ஒளி திரைப்படத்தில் வரும், 'தேவனே என்னை பாருங்கள்' என்ற பாடல் இன்றளவும் மிகவும் பிரபலமாக வானொலி, மேடைகள், கலை நிகழ்ச்சிகளில் ஒலித்துக் கொண்டுள்ளது. இந்தப் பாடலின் நடுவில் வரும் வசனமான ‘ஓ  மை  லார்ட் பார்டன்  மீ,  இந்த மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் இரு வேறு பாதையில் போய் விட்டன’ என்ற வசனத்தை சிவாஜி உச்சரிக்க மறுத்து விட்டார். பின்பு அவரது உதவியாளர் ஜோசப்  கிருஷ்ணன் என்ற ஆங்கிலோ இந்தியரை வைத்து பாட வைக்க முடிவு செய்தனர். பின்பு தவிர்த்து விட்டனர். அதன் பிறகு, சதன் என்ற மிமிக்ரி கலைஞர் அவர்கள் மூலம் பாட வைக்கலாம் என முடிவு செய்தனர். ஆனால் அதுவும் ஒர்க்கவுட் ஆகவில்லை. 

 

பின்பு பாடல் மற்றும் வசனம் என இரண்டையும் டி.எம். செளந்தராஜன் அவர்களே பாடவும் முடிவு செய்தார்கள். இருந்தாலும் சிவாஜி எப்படி உச்சரிப்பாரோ அது போன்று உச்சரிக்க வேண்டும் என்று சிவாஜியை உச்சரிக்கச் சொல்லி, அதை காதில் வாங்கி, சிவாஜி எப்படி உச்சரிப்பாரோ அதே போன்று டி.எம்.சௌந்தரராஜன் பாடினார். சிவாஜி கணேசன் எந்த அளவிற்கு உணர்ச்சிவசப்பட்டு நடிப்பாரோ அந்த அளவிற்கு உச்சரித்தார் டி.எம்.எஸ்.  ஐம்பது சதவீதம் சிவாஜி கணேசன் அளவுக்கு உச்சரித்தார். அதனால் தான்  இரண்டு மாமன்னர்களும் காலங்கடந்து சென்றாலும், மக்கள் மனதில் பசுமையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

 


 

Next Story

"நிராகரித்தவர்கள் மத்தியில் தன்னை நிரூபித்தவர் விஜய் சேதுபதி" - எழுத்தாளர் சுரா பகிர்ந்த சுவாரசிய தகவல்

Published on 29/09/2022 | Edited on 29/09/2022

 

writer sura about talk vijay sethupathi

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில், நடிகர் விஜய் சேதுபதி குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு....

 

"சாதாரண நிலையில் இருந்து ஒரு உயர்ந்த இடத்திற்கு வந்துள்ள விஜய் சேதுபதியை நீங்கள் ரோல் மாடலாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர் தனது வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளை சந்தித்துள்ளார். தனது சொந்த ஊரான ராஜபாளையத்தில் இருந்து சினிமாவில் பெரிய ஆளாக்கிடனும்னு சென்னைக்கு வருகிறார். அந்த மாதிரி நேரடியா எடுத்த உடனே சினிமாவில் பெரிய ஆளாக்கி முடியாது என்பதை  உணர்ந்த விஜய் சேதுபதி ஒரு சிறிய சிமெண்ட் கம்பெனியில் அக்கவுண்டன்ட்டா வேலைக்கு சேர்ந்து பணி செய்துகொண்டு வருகிறார். அதன்பிறகு  செல்போன் கடை, பாஸ்ட்புட், சேல்ஸ்மேன் என கிடைக்கிற வேலை எல்லாம் செய்து வருகிறார். 

 

அந்த சமயத்தில் ஒரு நாள் விஜய் சேதுபதிக்கு துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் அக்கவுண்டன்ட்டாக நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கிறது. தொடர்ந்து 4 ஆண்டுகள் துபாயில் வேலை பார்த்தார். இதனிடையே ஆன்லைன் மூலம் ஜெஸி என்ற பெண்ணுடன் அறிமுகமாகி அவரையே திருமணமும் செய்துகொண்டார். ஒரு கட்டத்தில் துபாய் வேலையும் அவருக்கு பிடிக்காமல் போக, மீண்டும் சென்னைக்கு வந்து தனது நண்பர்களுடன் இணைந்து இன்டீரியர் டெக்கரேஷன் வேலைகளை செய்து வந்தார். அப்படி இருக்கையில் ஒரு நாள் சினிமாவிற்கு அடித்தளமாக இருக்கும் கூத்துப்பட்டறை போஸ்டர் ஒன்றை பார்க்கிறார். அப்போதும் கூட அந்த கூத்துப்பட்டறையில்  அக்கவுண்டன்ட்டாகத்தான் பணிக்கு சேர்ந்துள்ளார். அதன் பிறகு தான் தனுஷின் புதுப்பேட்டை, கார்த்தியின் நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட பல படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம். இந்தி என பிறமொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். 

 

ஆனால் விஜய் சேதுபதி 16 வயதில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நம்மவர் படத்தில் நடிப்பதற்காக நேர்காணலுக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கு நிராகரிக்கப்படுகிறார். ஆனால் அவரின் விடா முயற்சியால் அன்று யார் படத்தில் விஜய் சேதுபதி நிராகரிக்கப்பட்டாரோ இன்று அவருடனே விக்ரம் படத்தில் நடித்து பாராட்டுகளை குவித்து இருக்கிறார். அதனால் கடுமையாக உழைத்து முன்னேற வேண்டும் என்று நினைக்க கூடியவர்கள் விஜய் சேதுபதியை ரோல் மாடலாக வைத்துக் கொள்ளலாம்".