Skip to main content

சிவாஜி, கமல், ரஜினி, விஜயகாந்த் காட்டிய வில்லத்தனம்! - இமேஜ்! நோ டேமேஜ்!

Published on 22/07/2018 | Edited on 23/07/2018

ரசிகர்களுக்குப் பரிச்சயம் இல்லாத முகம்! அந்த இளம் நடிகரின் பெயர் விக்கி. அவர் நடித்திருக்கும் படத்தின் பெயர் 'போத'. இதில் அவருக்கு ஒரு மாதிரியான கேரக்டர். அதாவது, ஆண் பாலியல் தொழிலாளியாக வருகிறார். திரைஉலகில் அவர் இப்போது பேசப்படும் நிலையில், ‘இந்த கேரக்டரில் நடித்தால் எதிர்காலம் என்னாவது? இமேஜ் போய்விடுமே’ என்ற சிந்தனைக்கே இடம் கொடுக்காமல், பின்னாளில் பெரிய நடிகர்கள் ஆனவர்கள், அந்தக் காலத்தில் ‘அப்படி-இப்படி’ நடித்தது, மனத்திரையில் விரிகிறது. 


திரும்பிப் பார்க்க வைத்த தீயவன்!

 

sivaji



1953-ல் வெளிவந்தது 'திரும்பிப்பார்'. டி.ஆர். சுந்தரம் இயக்கத்தில், கலைஞர் கதை, திரைக்கதை எழுதிய இந்தத் திரைப்படத்தில் சிவாஜி ஏற்றிருந்த கதாபாத்திரத்தின் பெயர் பரந்தாமன். 1952-ல் வெளியாகி, பெரும் வெற்றிகண்ட பராசக்தியின் மூலம், பெரிய அளவில் வரவேற்பு பெற்றிருந்தும், தன் 5-வது படமான 'திரும்பிப்பார்' திரைப்படத்தில், மோசமான வில்லனாக நடித்தார் சிவாஜி. வயோதிகர் ஒருவரின் வாய் பேசமுடியாத மனைவியை, நள்ளிரவில் தந்திரமாக வீடு புகுந்து பலாத்காரம் செய்வார். மில் முதலாளியிடம் கையூட்டு பெற்று, தொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பார். உடன்பிறந்த தம்பி சிவாஜி பெண் பித்துப்பிடித்து அலைவது கண்டு ஆவேசமான அவருடைய அக்கா பண்டரிபாய், க்ளைமாக்ஸில் “உனக்கு ஒரு பெண்தானே வேண்டும்! இதோ நான் இருக்கிறேன்!” என்று தயாராவார். “தீயவனே! திரும்பிப்பார்!” என்று குமுறித் தீர்ப்பார். சிவாஜியின் 12-வது படம் 'அந்த நாள்'. தேசத்துரோகி கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார். மனைவியின் கையாலேயே சுடப்பட்டு இறந்துபோவார். துளிவிஷம், எம்.ஜி.ஆரோடு இணைந்து நடித்த கூண்டுக்கிளி, நானே ராஜா, ரங்கோன் ராதா என மேலும் சில படங்களில், தயக்கமில்லாமல் எதிர்மறை நாயகனாக நடித்தார்.

 

thirumbipar






பால்வினை நோயைத் தேடிக்கொண்டவன்!
 

kamal



1973-ல் கே.பாலசந்தர் இயக்கத்தில் சிவகுமார் கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'சொல்லத்தான் நினைக்கிறேன்'. இதில் கமலுக்கு உமனைசர் கேரக்டர். லிஸ்ட் போட்டு பெண்களை அனுபவிக்கும் கவர்ச்சி வில்லனாக வருவார். வயோதிகர் ஒருவரின் மனைவியை தள்ளிக்கொண்டு போக திட்டமிடுவார். ஜெயசித்ரா இடையில் புகுந்து தன் சகோதரியின் வாழ்க்கைக்காக, கமல் நடத்தும் பேரத்துக்குப் பணிந்து படுக்கையைப் பகிர்ந்துகொள்வார். 1976-ல் ஆர்.சி.சக்தி இயக்கத்தில் வெளிவந்த 'உணர்ச்சிகள்' திரைப்படத்தில், விதவைப் பெண்ணான எல்.காஞ்சனா தொடங்கி, விலைமாதுக்கள் பலரிடமும் உறவு வைத்து, பால்வினை நோய்கண்டு, நிற்கக் கூட முடியாமல் துடிப்பார். தம்பியாக பாவித்து கமலிடம் அக்கறை காட்டிவரும் ஸ்ரீவித்யா “என் உடம்பை விற்று சம்பாதித்த பணத்தில் உன் உடம்பைக் கெடுத்துட்டு வந்துட்டியேடா” என்று அழுவார். இறுதியில் நோய் முற்றி, மருத்துவமனையின் வி.டி. வார்டில் இறந்தே போவார். 


நண்பன் சாவதை ரசித்த வில்லன் மூஞ்சி!

 

3 mudichu



கே.பாலசந்தரின் இயக்கத்தில் 1976-ல் வெளிவந்த 'மூன்று முடிச்சு' திரைப்படத்தில் ‘சரியான வில்லன் மூஞ்சி’ என்று முகத்துக்கு நேராகவே ரஜினியை திட்டுவார் ஸ்ரீதேவி. வீட்டு வேலை பார்க்கும் அப்பாவிப் பெண்ணைத் தன் வலையில் வீழ்த்தி கர்ப்பமாக்கிவிடுவார் ரஜினி. நண்பன் கமலின் காதலியான ஸ்ரீதேவியை அடைவதற்கு துடிப்பார். இந்த கெட்ட குணத்தாலேயே, கமல் ஏரியில் தவறிவிழுந்து தவிக்கும்போது, காப்பாற்றாமல் அவர் சாவதை வேடிக்கை பார்ப்பார். பின்னாளில், தன் தந்தையை மணந்து, தனக்கு சிற்றன்னையாகிவிடும் ஸ்ரீதேவியிடம் “பேசாம இருடி” என்று கோபம் காட்டுவார். “தாய் ஸ்தானத்துல இருக்கிறவளைப் பத்தி அப்பாகிட்ட எந்த பிள்ளை தப்பா பேசுவான்?” என்று ரஜினியின் மோசமான நடவடிக்கை அறிந்து பேசுவார் ஸ்ரீதேவி. 'மூன்று முடிச்சு' மட்டுமல்ல, முதலில் வெளிவந்த அபூர்வராகங்கள் தொடங்கி, அவர்கள், 16 வயதினிலே, ஆடுபுலி ஆட்டம், காயத்ரி, மாங்குடி மைனர் வரை ரஜினி ஏற்று நடித்ததெல்லாம் வில்லன் வேடங்களே! 


உடல் விருந்து பிளாக்-மெயிலர்!

 

vijaykanth



கேப்டனும் கூட வில்லனாகத்தான் அறிமுகம் ஆனார். 1979-ல் எம்.ஏ.காஜா டைரக்‌ஷனில் வெளிவந்த 'இனிக்கும் இளமை' திரைப்படத்தில் சுதாகரும் ராதிகாவும்தான் ஹீரோ-ஹீரோயின். விஜயகாந்தை கராத்தே வீரராகக் காட்டுவார்கள். ஆண்களைப் பார்த்தாலே சபலப்படும் பாத்திரத்தில் மீரா நடித்திருப்பார். அவருடைய அழைப்பை ஏற்று, உடல் விருந்து அளிப்பார் விஜயகாந்த். அந்த நேரத்தில் ரகசியமாகப் படம் பிடித்து, போட்டோவை ரூ.25000-க்கு விற்றுவிடுவேன் என்று பிளாக்-மெயில் செய்வார். 'போத' ஹீரோ விக்கி இப்போது ஏற்று நடித்து, ‘உவ்வே’ என்று குமட்டலான ஒரு விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கும் கதாபாத்திரத்தில், 39 வருடங்களுக்கு முன்பே துணிச்சலாக நடித்தவர் விஜயகாந்த்.



கெட்ட பெயர் வாங்கிய நல்லவர்!

 

nambiyar



ஆன்மிகவாதி, மிகமிக நல்லவர் என்று திரைஉலகில் பெயர் எடுத்தவர் ‘நம்பியார் சாமி’ என்றழைக்கப்படும் எம்.என்.நம்பியார். எம்.ஜி.ஆருடன் மோதும் வில்லன் பாத்திரங்களிலேயே தொடர்ந்து அவர் நடித்து வந்ததால், தமிழகத்தில் பெண்களில் பெரும்பாலானோர், நம்பியார் முகத்தை திரையில் பார்த்ததுமே கரித்துக் கொட்டுவார்கள். அந்தக் காலத்தில், சினிமாவை நிஜம் என்று நம்பியவர்கள் அனேகர் உண்டு. அதனாலேயே, பல நடிகர்களும் ‘மக்களிடையே தங்களின் இமேஜ் கெட்டுவிடக் கூடாது’ என்பதில் கவனமாக இருந்தார்கள். 

 

 


வெள்ளித்திரையில் சாதித்த சிவாஜி, கமல், ரஜினி, விஜயகாந்த் போன்ற ஹீரோக்கள், விதிவிலக்காக வில்லனாகவும் நடித்திருக்கின்றனர். ஹீரோவா? வில்லனா? எந்த வேடமாக இருந்தால் என்ன? ரசிகர்களை, குறிப்பாக பெண்களை எரிச்சலூட்டும் கதாபாத்திரமாக இருந்தாலும், அதையும் ஒரு சவாலாக ஏற்று நடித்து, அவரவர் பாணியில் முத்திரை பதித்திருக்கிறார்கள். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மவுசு குறையாத நடிகர் திலகம்; ரீ-ரிலீஸான படத்தைக் கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள்

Published on 28/11/2022 | Edited on 28/11/2022

 

the unrepentant actor sivaji; Fans celebrated the rerelease of the film

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் பட்டிக்காடா பட்டணமா. இயக்குநர் ஆர்.மாதவன் இயக்கி 1972ம் ஆண்டு இப்படம் வெளியானது. வெள்ளி விழா கண்ட இப்படத்தின் 50 ஆவது ஆண்டு பொன்விழா கொண்டாட்டம் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

 

the unrepentant actor sivaji; Fans celebrated the rerelease of the film

 

பெரிய நடிகர்களின் புதிய படங்களுக்கு இருக்கும் அதே வரவேற்பு மீண்டும் திரையிடப்பட்ட இப்படத்திற்கும் இருந்தது. ஏராளமான மக்கள் தங்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் வந்து படத்தைப் பார்த்துச் சென்றனர். சிவாஜி கணேசன் ரசிகர்கள் படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு பாடலையும் நடனமாடிக் கொண்டாடினர். 

 

நிகழ்ச்சியில் சிவாஜி கணேசன் மகன் ராம்குமார் மற்றும் மதுரை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

Next Story

நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் நாளை மரியாதை!

Published on 30/09/2021 | Edited on 30/09/2021

 

y

 


நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்த நாள் நாளை உலகம் முழுவதும் கொண்டாட இருக்கிறது. இதனை முன்னிட்டு சென்னை அடையாறில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை மரியாதை செலுத்துகிறார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, "  நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அடையாறில் அமைந்துள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு நாளை (1.10.2021) காலை 10.00 மணியளவில், தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்த உள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றுச் சிறப்பிக்க உள்ளனர்.

 

நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் 1927 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 1 ஆம் நாள் பிறந்தார். "நடிப்பு தனது மூச்சு என்றும் நடிப்பு ஒன்றுதான் தனக்குத் தெரிந்த தொழில், நடிப்புதான் எனக்குத் தெய்வம்" என்று மிகத் தெளிவாக தன்சுயசரிதையில் குறிப்பிட்டு அதற்கேற்ப வாழ்ந்தும், நடிப்பிலே உச்சம் தொட்டும், உலகப் புகழ் பெற்றவராவர். குழந்தைப் பருவம் முதற்கொண்டு நடிப்பதில் பேரார்வம் கொண்டு, பல்வேறு நாடகக் குழுக்களில் பங்கேற்று நடித்து வந்தார். அண்ணாவால் எழுதப்பட்ட "சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்" என்கிற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த அவரின் நடிப்புத் திறமையினைக் கண்ட பெரியார் வியந்து பாராட்டியதோடு, விழுப்புரம் சின்னையாப் பிள்ளை கணேசன் என்ற அவரது இயற்பெயரை "சிவாஜி கணேசன்" என்று பெயர் சூட்டினார். உலகப் புகழ்பெற்ற நடிகர் திலகத்திற்கு இந்த பெயரே இறுதிவரை நிலைத்து நின்றது.

 

காமராஜர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் என்றும், அவரைப் பெற்றதால் இந்த நாடே பெருமை அடைகிறது என்று குறிப்பிட்டார். கருணாநிதி 'பொங்கு தமிழர் கண்டெடுத்த புதையல், புத்தர் வழிவந்த காந்தி மகான் பக்தர்' நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று பெருமையோடு குறிப்பிட்டதோடு, அவர் எழுதிய பராசக்தி, மனோகரா உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் நடிகர் திலகம் திரைவானிலே புதிய உச்சம் தொட்டார். கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்குப் பெருமைச் சேர்க்கும் வகையில் அவருடைய நினைவு நாளில் 21.07.2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை கடற்கரை காமராசர் சாலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலையினை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய கருணாநிதி ''நான் எழுதிய கவிதை வரிகளுக்கும், வசனங்களுக்கும் உயிர்கொடுத்தவர்; தமிழாக வாழக்கூடியவர்; தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியவர்; எனதருமை  தோழர், எனதாருயிர் நண்பர் என்றும், என்னுள்ளே உறைந்திருப்பவர் சிவாஜி கணேசன்'' என்றும் குறிப்பிட்டதோடு, ''எனது நண்பரின் சிலை மட்டும் இங்கே அமையாது போயிருக்குமேயானால், நானே இங்குச் சிலையாகியிருப்பேன்'' என்று நெகிழ்ந்து குறிப்பிட்டார். 

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தொடக்கக் காலத்தில் எண்ணற்ற நாடகங்கள், 300க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்கள், 2 இந்தி திரைப்படங்கள், 9 தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்து தமிழ்த் திரையுலக வரலாற்றில் புதிய சகாப்தம் படைத்தார். "நடிகர்திலகம்", "நடிப்புச் சக்கரவர்த்தி" என்று மக்களாலும், திரை உலகத்தினராலும் போற்றி அழைக்கப்பட்டார். இவர் நடித்த கப்பலோட்டியத் தமிழன், இராஜராஜ சோழன், வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் தலைமுறைகள் பல கடந்தும் காண்போரின் மனதில் நின்று நிலைப்பதே சரித்திரச் சான்றாகும். நடிகர் திலகத்தின் திறமைக்குச் சான்றாகப் பத்ம ஸ்ரீ விருது, பத்ம பூஷன் விருது, செவாலியே விருது மற்றும் நம் தாய்நாட்டின் உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருது உள்ளிட்ட விருதுகளோடு அயல்நாட்டின் உயரிய விருதுகளையும் பெற்ற பெருமைக்குரியவர். 

 

நடிப்பின் இமயமாகத் திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 2001 ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் நாள் இயற்கை எய்தினார். அன்னாருடைய அருமை பெருமைகளை போற்றுகின்ற வகையில் அவரின் பிறந்த நாளானது அரசு விழாவாக அறிவிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட அற்புத கலைஞன்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். எது நடிப்பு, எது இயல்பு எனக் காண்போர் அறிந்திடா வண்ணம், ஒட்டுமொத்த உணர்ச்சிக் குவியல்களை வெள்ளித் திரையில் கொட்டி வெற்றி வீரராகவே வலம் வந்தவர். இந்த பூமிப் பந்தில், மனிதக் குலத்தின் கடைசி ரசிகன் உயிர்வாழும் வரை, சிவாஜி கணேசன் என்கிற சகாப்தத்துக்கு மரணமுமில்லை..காலமுமில்லை...!" இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.