பா. ரஞ்சித்தின் 'நீலம் புரொடக்சன்ஸ்' தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'J.பேபி'. இப்படத்தில் ஊர்வசி, அட்டகத்தி தினேஷ் மற்றும் லொள்ளு சபா மாறன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டோனி பிரிட்டோ என்பவர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் வெளியானது. மேலும் 'நெடுமரம் தொலைந்ததே' என ஒரு பாடலின் லிரிக் வீடியோ அதற்கு முன்னதாக வெளியானது. இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இப்படம் வருகிற மார்ச் 8 ஆம் தேதி யு சான்றிதழுடன் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் பா. ரஞ்சித், ஊர்வசி, சுரேஷ் மாரி உள்ளிட்ட படக்குழுவினருடன் வெங்கட் பிரபுவும் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், “மங்காத்தா பட சமயத்தில் தான் அட்ட கத்தி பட ஷூட்டிங் போய்க்கிட்டு இருந்தது. அப்போது நான் ஞானவேலிடம் கமிட்டாகியிருந்தேன். அவருக்கு படம் போட்டு காட்டும் போது, வெற்றிமாறனையும் அப்போது அழைத்திருந்தோம். வெற்றிமாறன் போல் எந்த இயக்குநரும் படத்தை என்ஜாய் பண்ணி பார்க்கமாட்டாங்க. அவ்ளோ சத்தமா சிரிச்சு, சந்தோஷமா என்ஜாய் பண்ணுவார். அது தான் அட்டகத்தி ஞானவேல் வாங்கி ரிலீஸ் செய்ய பெரிய பிளஸ்ஸாக அமைந்தது. அதன் பிறகு ரஞ்சித்துடைய வளர்ச்சி ரொம்ப பெரிசு. அதை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு.
பா.ரஞ்சித் பாய்ஸ்-னு எல்லாரும் சொன்னாங்க. ஆனால் பா.ரஞ்சித்தே விபி (வெங்கட் பிரபு) பாய் தான். எல்லாருமே சின்ன சின்ன படங்களில் வேலை பார்த்தோம். ஒரு குடும்பமா சேர்ந்தது சென்னை 600028 படத்தில் தான். இன்னும் ஒரே குடும்பமாகத் தான் இருக்கிறோம். நான் இன்னும் படம் பார்க்கவில்லை. எங்க வீட்டில் பார்த்துட்டு ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. ரஞ்சித்திற்கு பெரிய நன்றி. இவ்ளோ நல்ல விஷயங்களை, கலையை தனி மனிதனா நின்னு தனி உலகமே உருவாக்கியிருக்கிறார். ரொம்ப பெருமையாவும் சந்தோஷமாவும் இருக்கு. உண்மையில் என்னால் கூட அதை பண்ண முடியாது. வெறும் கதையின் மீது மட்டும் நம்பிக்கை வைத்து தைரியமா படமெடுக்க பெரிய மனசு வேண்டும். அது அவருக்கு இருக்கு. இப்படமும் உண்மை சம்பவக் கதை தான். அதை ஜாலியா சொல்லியிருக்காங்க” என்றார்.