விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வருகிறது. இதனிடையே தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். மேலும் கடைசியாக தான் ஒப்புக்கொண்டுள்ள ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியல் பணிகளில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகம் எனத் தனது கட்சிக்குப் பெயர் வைத்துள்ளதாக சமீபத்தில் அறிவித்த விஜய், அதை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். 2024ல் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் கூறியுள்ளார். விஜய்யின் அரசியல் வருகைக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை வாணி போஜன் விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என தெரிவித்துள்ளார். ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்வி அவரிடம் கேட்ட நிலையில், “நல்லது நினைக்கும் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். செங்களம் சீரிஸ் நடிக்கிறப்போ ரொம்ப அழகாக இருந்தது. அந்த சமயத்தில் அரசியலில் இருக்க வேண்டும் என ஆசையாக இருந்தது. இப்பவும் இருக்கு. விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம். அவர் என்ன பண்ணுகிறார் என்பதை பார்க்கலாம். எல்லாம் நம் கையில் தான் இருக்கு” என பதிலளித்தார். கடந்த வருடம் எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் அரசியல் கதையான செங்களம் வெப் தொடரில் வாணி போஜன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.