Skip to main content

"புர்கா படத்தை தடை செய்ய வேண்டும்" - சீமான் கோரிக்கை

Published on 20/04/2023 | Edited on 20/04/2023

 

seeman about burqa movie

 

சர்ஜுன் இயக்கத்தில் மோகன் தயாரிப்பில் கலையரசன், மிர்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'புர்கா'. இப்படம் கடந்த 7 ஆம் தேதி (07.04.2023) நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால், முஸ்லீம் குறித்தும் குரான் நூலை குறித்தும் இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது. 

 

இந்த நிலையில் புர்கா படத்தை தடை செய்யக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நபி பெருமானாரின் நன்மொழிகளால் தொகுக்கப்பட்டு இஸ்லாமியர்கள் பின்பற்றும் ஷரியத் சட்டம் பெண்களுக்கு சம உரிமை வழங்குவதில் பல முற்போக்கான கருத்துக்களை வலியுறுத்தும் நிலையில், இஸ்லாம் மார்க்கமே பெண்களுக்கு எதிரானது போல் ‘புர்கா' திரைப்படம் சித்தரிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

 

இந்திய பெருநாட்டில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு மதவாத சக்திகளின் ஆதிக்கம் அதிகரித்து, அவர்களின் கொடுங்கரங்களில் அதிகாரம் சிக்கியுள்ள நிலையில், ஒரு குறிப்பிட்ட சமய மக்களை ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிரானவர்கள் போல காட்ட முனைவது கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தவே வழிவகுக்கும். குறிப்பிட்ட மக்களின் நம்பிக்கைகளை இழிவுபடுத்தி, அவர்களின் உணர்வுகளைச் சீண்டி, பதற்றமான சூழலை உருவாக்கும் படைப்புகளைப் புறக்கணிக்க வேண்டுமென திரைக்கலை ரசிகர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

 

தற்போது 'ஆகா' ஓடிடி இணையதளத்தில் வெளியாகியுள்ள 'புர்கா' திரைப்படம் இசுலாமிய பெருமக்களின் இறை நம்பிக்கையையும், அவர்களின் புனித நூலான குரானையும் இழிவுபடுத்துவதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்து அதனை தடைசெய்யக் கோரும் இசுலாமிய மக்களின் கோரிக்கையை இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் விரைந்து கவனத்தில் எடுக்க வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் நாம் தமிழர் கட்சி மக்களைத் திரட்டி போராடும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்