
இயக்கம் மற்றும் நடிப்பு என பயணித்து வரும் பார்த்திபன் இயக்குநராக டீன்ஸ் படத்தை கடைசியாக இயக்கியிருந்தார். நடிகராக பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்திருந்தார். இப்போது மலையாளத்தில் 11 வருடங்கள் கழித்து மீண்டும் அறிமுக இயக்குநர் கே.சி.கௌதமன் இயக்கத்தில் நடிக்கிறார். இதையடுத்து ‘54ஆம் பக்கத்தில் மயிலிறகு’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கவுள்ளார்.
இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பார்த்திபன் பல்வேறு விஷயங்கள் குறித்து பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய்யுடன் பேசுவது போல் கனவு வந்ததாக தற்போது குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நேற்றிரவு நேற்றைய நண்பரும், இன்றைய தவெக தலைவருமான விஜய்யுடன் ஊடலான உரையாடல், பஜ்ஜியுடன் தேனீர் ருசித்தல், வெளியில் கசியா ரகசிய அரசியல் வியூகம் அமைத்தல் இப்படி விடிய விடிய நீண்ட சுவாரஸ்ய நிகழ்வுகள். சரி அதை பதிவு செய்ய ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ளலாமே எனப் பார்த்தால்…அது கனவு!
ஏந்தான் இப்படியொரு பகல் கனவு இரவில் வருதோ? ஆனா சத்தியமா வந்தது. கனவுகள் நம் நினைவுகளின் நகல்கள் எனச் சொல்வார்கள். சமீபமாக என்னிடம் அவர் பற்றிய கேள்விகள் அது சம்மந்தமான மந்தமான என் பதில்கள்…இப்படி சில பல! காரணமாக இருக்கலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் இரண்டு மூன்று செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய் அரசியல் குறித்த கேள்விக்கு பார்த்திபன் தனது கருத்தை பகிர்ந்திருந்தார். அதில் ஒன்றில், ‘விஜய் அரசியலுக்கு கூப்பிட்டால் கண்டிப்பாக போகமாட்டேன்” எனப் பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றிரவு நேற்றைய நண்பரும், இன்றைய தவெக தலைவருமான திரு விஜய் அவர்களுடனான ஊடலான உரையாடல் , பஜ்ஜியுடன் தேனீர் ருசித்தல், வெளியில் கசியா ரகசிய அரசியல் வியூகம் அமைத்தல் இப்படி விடிய விடிய நீண்ட சுவாரஸ்ய நிகழ்வுகள். சரி அதை பதிவு செய்ய ஒரு selfie எடுத்துக்கொள்ளலாமே எனப் பார்த்தால்… pic.twitter.com/MzV00BS3b7— Radhakrishnan Parthiban (@rparthiepan) February 19, 2025