Skip to main content

சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது; விசாரனையில் ட்விஸ்ட்

Published on 24/10/2024 | Edited on 24/10/2024
salman khan thretened person arressted

1998ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் படப்பிடிப்பிற்காக சென்ற சல்மான் கான், அரிய வகை மானான 'கலைமானை' வேட்டையாடியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் கைதும் செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் வெளியே வந்தார். இதையடுத்து மான்களை தெய்வமாக வழிபடும் பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்த பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய், சல்மான் கானை கொல்ல இருப்பதாக மிரட்டல் விடுத்திருந்தார். இதனால் சல்மான் கான் எப்போதும் போஸ் பாதுகாப்புடனே இருந்தார். 

தொடர்ந்து அவர் மீது கொலை மிரட்டலும் இருந்து கொண்டே வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சல்மான் கான் வீட்டில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த இரண்டு நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து சமீபத்தில் சல்மான் கானின் நெருங்கிய நண்பரும், மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து சல்மான் கானுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த 70 பேர் சல்மான் கானை, 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாக, மகராஷ்டிரா காவல்துறை தெரிவித்தது. இதையடுத்து மும்பை போக்குவரத்து காவல்துறைக்கு லாரன்ஸ் கும்பலைச் சேர்ந்த ஒருவர், “சல்மான் கான் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடனான பகையை முடித்துக்கொள்ள விரும்பினால் அவர் ரூ.5 கோடி வழங்க வேண்டும். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். பணம் கொடுக்காவிட்டால் சல்மான் கானின் நிலைமை பாபா சித்திக்கை விட மிகவும் மோசமாக இருக்கும்” என குறிப்பிட்டு மெசேஜ் அனுப்பியிருந்தார். 

இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் அந்த நபரிடம் இருந்து அடுத்த மேசேஜ் வந்தது. அதில், மிரட்டல் விடுத்து பெரிய தவறு செய்துவிட்டதாக குறிப்பிடப்பட்டது. இந்த மெசேஜ் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து வந்ததாக போலீசார் கண்டுபிடித்து அங்கு சென்று தேடுதலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் காய்கறி வியாபாரி என்றும் லாரன்ஸ் பிஷ்னோய் என்ற பெயரில் மெசேஜ் அனுப்பியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

சார்ந்த செய்திகள்