Skip to main content

"அஜித்தின் இந்த செயல் பிடித்திருந்தது... " மனம் திறந்த ராஜமௌலி!

Published on 31/12/2021 | Edited on 31/12/2021

 

rrr director rajamouli talk about ajithkumar

 

இயக்குநர் ராஜமௌலி பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இருவரையும் வைத்து 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தை இயக்கியிருக்கிறார். இதில் ஆலியா பட், சமுத்திரக்கனி, பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ஜனவரி 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

 

ad

 

இந்நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் இறங்கியுள்ள படக்குழு, பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறது. அந்த வகையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ராஜமௌலி, ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் பேட்டியளித்துள்ளனர். பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக தனியார் தொலைக்காட்சியில் வெளியாகவுள்ள இந்த பேட்டியின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் நடிகர் அஜித் குறித்து ஆர்.ஆர்.ஆர் பட இயக்குநர் ராஜமௌலி பகிர்ந்துள்ளார். 

 

அதில், "நான் அஜித்தை ஒருமுறை ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் சந்தித்தேன். அவர் அங்கிருந்த ரெஸ்டாரன்ட் ஒன்றில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது என்னைப் பார்த்த அஜித் இருக்கையிலிருந்து எழுந்து வந்து என்னிடம் நலம் விசாரித்தார். அதன் பிறகு என்னை அவரது டேபிளுக்கு அழைத்துச் சென்றார். அங்கு நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் என்னுடைய மனைவி அந்த ரெஸ்டாரன்ட்டுக்குள் நுழைந்தபோது, நான் அவரைப் பார்த்துக் கையசைத்தேன். “அவர் உங்கள் மனைவியா?” என்று என்னிடம் கேட்ட அஜித், என் மனைவியை நோக்கி எழுந்து சென்ற அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அவருடைய பணிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவருக்குக் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தும், அவர் தன்னுடைய ‘தல’ என்ற பட்டப்பெயரை துறந்து தன்னை அஜித் என்று அழைக்குமாறு கேட்டுக்கொண்டார்'' எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்