Skip to main content

"புலியே 2 அடி பின்னால வச்சா.. புஷ்பா வந்துட்டான்னு அர்த்தம்" - வைரலாகும் புஷ்பா 2 வீடியோ

Published on 07/04/2023 | Edited on 07/04/2023

 

Pushpa 2 - The Rule Where is Pushpa video released

 

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு இறுதியில் வெளியான படம் 'புஷ்பா – தி ரைஸ்'. இப்படத்தில் ராஷ்மிகா மந்தானா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியான இப்படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். குறிப்பாக சமந்தா சிறப்புத் தோற்றத்தில் நடனமாடிய 'ஊ...சொல்றியா மாமா' பாடலை இளைஞர்கள் கொண்டாடித் தீர்த்தனர். செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. 

 

இந்த நிலையில் அல்லு அர்ஜுன் நாளை (08.04.2023) அவரது 41வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அதனை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் 'புஷ்பா 2 - தி ரூல்' படத்தின் ஒரு முன்னோட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில், புஷ்பாவான அல்லு அர்ஜுனை போலீசார் தேடுகின்றனர். அவரை கண்டுபிடிக்க சிறப்பு தனிப்படை அமைக்கின்றனர். அந்த அமைப்பு காட்டுக்குள் தீவிரமாகத் தேட புஷ்பா அணிந்திருந்த சட்டை ரத்தக் கறைகளுடன் கிடைக்கிறது. இதனால் புஷ்பா உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என போலீசார் முடிவுக்கு வருகின்றனர். ஆனால், செம்மரம் கடத்திய பணத்தில் பல உதவிகளை புஷ்பா செய்துள்ளார் என பொதுமக்கள் தொலைக்காட்சி சேனலில் கூறி வருகின்றனர். இப்போது புஷ்பா எங்கே இருக்கிறார் என்ற கேள்வி அனைவருக்கும் எழ, ஒரு தொலைக்காட்சி சேனலில் காட்டுக்குள் பொருத்தப்பட்ட சிசிடிவியில் பதிவான வீடியோ காட்சி ஒன்றை தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்கிறது. அதில் அல்லு அர்ஜுன் வருகிறார். 

 

இந்த வீடியோவில் வரும், "காட்டு விலங்கு எல்லாம் 2 அடி பின்னால வச்சா புலி வந்திருச்சுன்னு அர்த்தம். அந்த புலியே 2 அடி பின்னால வச்சா புஷ்பா வந்துட்டான்னு அர்த்தம்" என்ற வசனம் அவரது ரசிகர்களை ரசிக்க வைக்கிறது. இந்த வீடியோ தற்போது பலரது கவனத்தை ஈர்த்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்