பியாண்ட் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 8 பாய்ண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் டி.மது, பி.அருமைச்சந்திரன் தயாரித்து, டி. ரங்கநாதன் இயக்கியுள்ள படம் 'ப்ளூவேல்'. பூர்ணா முன்னணி கதாபத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகை பூர்ணா இப்பட அனுபவம் குறித்து பேசியபோது....

''முதலில் நான் இயக்குனரிடமும், ஒளிப்பதிவாளரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறன். ஏனென்றால், என்னை முதலில் இந்த படத்தில் நடிக்க கூப்பிட்டபோது இப்படக்குழுவினர் அனைவரும் புதுமுகமாக இருக்கிறார்களே, இது நமக்கு ஒத்துவருமா என்று யோசித்தேன். அதுபோக ப்ளுவேல் கேம் குறித்தும் எனக்கு தெரியாது. அதுவும் இது சின்ன பட்ஜெட் படம் வேறு. அதனால் ஒரு தயக்கத்துடனே படப்பிடிப்பிற்கு சென்றேன். இன்னும் சொல்லப்போனால் நான் இரண்டாம் நாள் படப்பிடிப்பிற்கு செல்லவே இல்லை. இந்த படம் மேல் எனக்கு நம்பிக்கையே இல்லாததால் ஏதோ ஒரு கலக்கம் என்னுள் இருந்துகொண்டே இருந்தது. பிறகு இயக்குனரும், ஒளிப்பதிவாளரும் என்னை நேரில் சந்தித்து கன்வின்ஸ் செய்து படப்பிடிப்பிற்கு அழைத்து சென்றனர். அதன்பின் இப்படக்குழு எனக்கு ஒரு குடும்பம் போல் மாறிவிட்டது. இவ்வளவு சிறிய பட்ஜெட்டில் இந்த அளவு பிரமாண்டமாக எடுக்கமுடியாது. படம் முடிந்து ட்ரைலர் எல்லாம் பார்க்கும்போது, இந்த படத்திற்கா நாம் இப்படி செய்துவிட்டோம் என எனக்கு மிகவும் அவமானமாகவும், வருத்தமாகவும் இருந்தது. அதனால்தான் தற்போது அனைவரின் முன்னிலையிலும் இருவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.