Skip to main content

"இரவின் நிழல் தான் ஃபர்ஸ்ட் அதில் எந்த சந்தேகமும் இல்லை" - பார்த்திபன் விளக்கம்

Published on 12/11/2022 | Edited on 12/11/2022

 

parthiban explained about iravin nizhal issue

 

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான புது முயற்சிகளை மேற்கொண்டு வரும் பார்த்திபன் கடைசியாக 'இரவின் நிழல்' படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தியா சார்பாக ஆஸ்கரில் போட்டியிட சமர்ப்பிக்கப்பட்ட 13 படங்களில் 'இரவின் நிழல்' படமும் ஒன்றாக இருந்தது. இதனைத் தொடர்ந்து இப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் தனக்கே தெரியாமல் வெளியாகியுள்ளது எனத் தெரிவித்துள்ளார். இப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெயரில் தான் வெளியானது. 

 

ஆனால் இப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் இரண்டாவது திரைப்படம் எனவும், இயக்குநர் பார்த்திபன் தொடர்ந்து பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறார் எனவும் பிரபல நிறுவனமான ஐஎம்டிபி (IMDB) நிறுவனம் தங்களது வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் சமூக வலைத்தளத்தில் விவாதத்தையும் ஏற்படுத்தியது. 

 

இந்நிலையில் பார்த்திபன், "நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் ஃபர்ஸ்ட் படம் இரவின் நிழல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த பெருமையுடன் மட்டுமே இந்தப் படம் தயாரிக்கப்பட்டது. அந்தப் பெருமைக்காக மட்டுமே மிகப் பெரிய பொருட்செலவில் கிட்டதட்ட 3ஆண்டுகள் எனது வாழ்க்கையைப் பணயம் வைத்து எடுக்கப்பட்ட ஒரு படம். இப்படம் முதல் படமா...அல்லது இரண்டாவது படமா...என்ற விமர்சனத்தை எல்லாம் தாண்டி. இப்படம் அமேசானில் வெளியாகியுள்ளது. தயவு செய்து படத்தைப் பாருங்கள். முடிவை உங்களிடமே விட்டு விடுகிறேன்" எனப் பேசியுள்ளார். 

 

 


 

சார்ந்த செய்திகள்