'துருவங்கள் பதினாறு' படத்தைத் தொடர்ந்து இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான படம் மாஃபியா. இதில் அருண் விஜய், பிரசன்னா மற்றும் பிரியா பவாணி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்த இந்தப் படமானது குறைந்த நாட்களில் ஷூட் செய்யப்பட்டு, வெகு விரைவிலேயே வெளியானது.

இந்த வருட ஃபிப்ரவரி 21ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில்தான் அமேசான் ப்ரைம் ஓடிடி பிளாட்ஃபார்மில் படம் வெளியானது. இதனையடுத்து படத்தில் வரும் ஒரு முக்கியக் காட்சியில், ப்ரூஸ் மெக்கார்தர் என்ற சீரியல் கில்லரால் கொல்லப்பட்ட ஐந்து பேரின் புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.அமெரிக்காவின் டொரண்டொவில் 2010 முதல் 2017ஆம் ஆண்டுவரை நடைபெற்ற தொடர் கொலையில் பலியானவர்களை இந்தப் படத்தில் போதை பொருட்கள் விற்கும் கும்பல்களுக்குத் தொடர்புடையவர்கள் என்று சித்தரித்திருப்பது சம்மந்தப்பட்ட குடும்பத்தாரை மனவேதனைக்கு ஆளாக்கியிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து லைகா நிறுவனம் எழுத்துப்பூர்வமாக இதற்கு வருத்தமும், அந்தக் காட்சியை நீக்கிவிடுவதாக உறுதியளித்துள்ளது.அதேபோல அமேசான் நிறுவனம், மாஃபியா படத்தை பர்ச்சேஸ் செய்வதிலிருந்து நீக்கிவிட்டது. குறிப்பிடப்பட்ட காட்சியை நீக்கிவிட்டு அல்லது புகைப்படங்களை மறைத்துவிட்டு பின் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.அமேசான் ப்ரைமில் தற்போதுவரை ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதிலும் குறிப்பிடப்பட்டவர்களின் காட்சி நீக்க்ப்பட்டு அப்லோட் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.