Skip to main content

"லஞ்சம் வாங்குனா கொல்லணும்னு படம் எடுத்த டைரக்டர் என்கிட்டே என்ன கேட்டார் தெரியுமா?" - EX. IAS அதிகாரி ஞானராஜசேகரன் பேச்சு 

Published on 14/05/2022 | Edited on 14/05/2022

 

Gnana Rajasekaran

 

முதல் மொழி சித்திரைத் திருவிழா என்ற இலக்கிய நிகழ்வு அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஞானராஜசேகரன் பேசுகையில்,

 

"நான் சென்சார் போர்டில் கொஞ்ச நாள் பணியாற்றினேன். தமிழ் சினிமாவில் நேர்மை, ஊழலுக்கு எதிராக பேசுதல், லஞ்சம் வாங்கினால் அவனைக் கொலை செய்யலாம் என்றெல்லாம் படம் எடுக்கிறார்கள். ஆனால், இந்த சினிமாக்காரர்கள் கட் இல்லாமல் சான்றிதழ் வாங்க சென்சார் போர்டுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சிக்கிறார்கள். சினிமாக்காரன் சென்சார் போர்டு, இன்கம் டேக்ஸ் என இரண்டு கவர்மெண்ட் ஏஜென்சிகளை மட்டும்தான் சந்திக்கிறான். இந்த இரண்டு ஏஜென்சிகளையும் அவர்கள் எப்படி அணுகுகிறார்கள் என்று பார்த்தால் வேடிக்கையாக உள்ளது. லஞ்சம் வாங்குவது மாபெரும் குற்றம். லஞ்சம் வாங்கினால் கொலையே செய்யலாம் என்று படமெடுத்த இயக்குநர், வேறொருவர் மூலமாக 'நம்ம படத்துக்கு ஏதாவது செய்ய முடியுமா சார்' என்று என்னை அணுகினார்.

 

படத்தில் ஒன்று பேசுகிறார்கள், நேரில் வேறு மாதிரி இருக்கிறார்கள். எல்லோரும் இரட்டை வேடம்தான். தீபாவளி நேரத்தில் எட்டு படங்கள் ரிலீசாகும். கடைசி நேரத்தில்தான் சென்சாருக்கு படத்தை கொண்டுவருவார்கள். அந்த நேரத்தில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து படங்கள் பார்க்க வேண்டியிருக்கும். அந்த சமயத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமை கூட படம் பார்ப்போம். ஒருமுறை, ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணிவரை படம் பார்த்து சென்சார் சர்டிஃபிகேட் கொடுத்துக்கொண்டிருந்தோம். 

 

12 மணிக்கு கடைசி சர்டிஃபிகேட் கொடுத்துவிட்டு வெளியே வந்தால் எல்லா தயாரிப்பாளர்களும் வெளியே காத்திருக்கிறார்கள். மதியமே சர்டிஃபிகேட் வாங்கியவர்கூட வெளியே காத்திருக்கிறார். ஞாயிற்றுக்கிழமையும் உட்கார்ந்து படம் பார்க்கிறார் என்றால் அவர் இவ்வளவு லஞ்சம் எதிர்பார்ப்பார் என்று அவர்களாகவே நினைத்து எனக்கு லஞ்சம் கொடுப்பதற்காக வெளியே காத்திருக்கிறார்கள். வேலையை முடித்துவிட்டு வெளியே வரும்போது, எல்லோரும் வெளியே இருப்பதை பார்த்து சரி இன்னும் கொஞ்ச நேரம் இவர்கள் நிற்கட்டும் என்று நான் மீண்டும் உள்ளே சென்று உட்கார்ந்துகொண்டேன்.

 

லஞ்சம் வாங்காதவர்களைக்கூட இவர்கள் லஞ்சம் வாங்க வைத்துவிடுவார்கள். அவர்கள் வெளியே காத்திருப்பதை எஞ்ஜாய் பண்ணேன். இது மாதிரியான எஞ்ஜாய்மெண்டை நான் நிறையவே செய்திருக்கிறேன். பின், அவர்களை அழைத்து இதுக்கு எந்தவிதமான காசும் நீங்க எனக்கு கொடுக்க வேண்டியதில்லை. இது என்னோட கடமை, நீங்கள் போகலாம் என்று அனுப்பிவைத்தேன். ஒரு நேர்மையானவனை ஊழல்வாதியாக மாற்றக்கூடிய சந்தர்ப்பங்கள் இது போன்று ஏராளமாக உள்ளன". இவ்வாறு ஞானராஜசேகரன் பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாய் திறந்த ஜாஃபர் சாதிக் - சிக்கும் திரைப் பிரபலங்கள்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Jaffer Sadiq case he invested in films by fraud money

டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுப்பட்டது திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது.

மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார். தொடர்ந்து ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்த நிலையில், அவரது இல்லத்தில் சோதனையில் ஈடுபட்ட மத்திய போதைப்பொருள் தடுப்புத்துறை, வீட்டை தாழிட்டு நோட்டீஸ் ஒட்டிச் சென்றிருந்தது. தொடர்ந்து ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

இது குறித்து என்.சி.பி. தலைமையகத்தில் சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய என்.சி.பி. துணை இயக்குநர் ஞானேஷ்வர் சிங்க், ஜாபர் சாதிக் குறித்து பல்வேறு அதிர்ச்சியான தகவல்களைப் பகிர்ந்தார். அவர் கூறுகையில், “ஜாஃபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெரும் தொகையை சம்பாதித்து, தனது குற்றங்களை மறைக்க திரைப்படங்கள், கட்டுமானம் மற்றும் விருந்தோம்பல் போன்ற பல தொழில்களில் முதலீடு செய்துள்ளார். அவரது போதைப்பொருள் கடத்தல், உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் புதுடெல்லி, தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற இடங்களில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா வரை பரவியிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் 3500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தியுள்ளனர். அவரது தயாரிப்பு நிறுவனத்தில் போதைப்பொருள் பணம் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவரது தயாரிப்பு நிறுவனம் பண மோசடி செய்யும் முன்னோடியாக இருந்ததாக தெரிகிறது” என்றார். 

மேலும், தமிழ்நாடு திரைத்துறை சார்ந்த பிரபலங்களுக்கும் தொடர்பிருப்பதாக ஜாஃபர் சாதிக் வாக்குமூலம் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல், கட்டுமான துறையில் இருக்கும் நபர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு, அதில் தொடர்புடைய திரைப் பிரபலங்களின் பெயர்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

திரிஷாவின் கண்டனம்; சில மணிநேரத்தில் வீடியோ வெளியிட்ட ஏ.வி. ராஜு

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
Trisha's Condemnation; AV released the video within an hour. Raju

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகியான ஏ.வி. ராஜு அண்மையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷாவை தொடர்புப்படுத்திப் பேசியிருந்தார். மேலும் தன்னை அதிமுகவிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதிமுகவின் சட்ட விதிகளைத் தெரியாமல் எடப்பாடி பழனிசாமி உள்ளார்’ எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

இந்நிலையில், கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புப்படுத்தி இழிவாகப் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜுவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகை த்ரிஷா, இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கவனம் ஈர்ப்பதற்காக எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து பேசுபவர்களை பார்ப்பதற்கே அறுவறுப்பாக உள்ளது. அவதூறு பேச்சுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமது வழக்கறிஞர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அதிமுக நிர்வாகி ஏ.வி. ராஜுவின் பேச்சுக்கு பல்வேறு சினிமா பிரபலங்களும் கண்டங்கள் தெரிவித்து வந்த நிலையில், த்ரிஷா இதை உறுதிப்படுத்தி உள்ளார்.

mm

இந்நிலையில் ஏ.வி.ராஜு இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''என்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில், சில ஊடகங்களில் திரைப்படத் துறையினரை அவதூறாக நான் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நான் பேசியது அரசியல் ரீதியாக மட்டும் தான் பேசினேன். அந்த இடத்தில் பேட்டியை முடித்த பின்பு ஒரு சிலர் கேட்ட கருத்துக்கு நான் அந்த விளக்கத்தை சொன்னேன். எந்த இடத்திலும் திரைத்துறையினரை வருத்தப்படும் அளவிற்கு பேசக் கூடியவர் நான் அல்ல.

ஒருவேளை அப்படி பேசியதாக தகவல்கள் உங்களுக்கு தவறாக கிடைத்திருந்தால், நான் உங்கள் அனைவருக்கும், பெப்சிக்கும், திரைப்பட நடிகர் சங்கத்திற்கும் மற்றும் சம்பந்தப்பட்ட திரிஷாவுக்கும் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவேளை மனம் புண்படும்படி இருந்திருந்தால் என் சார்பாக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.