Skip to main content

மோலிவுட்டில் முதல் முறை - ‘எம்புரான்’ படைத்த சாதனை

Published on 07/04/2025 | Edited on 07/04/2025
empuraan enters 250 cr club

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியான படம் ‘எல்2;எம்புரான்’. இப்படம் இவர்கள் கூட்டணியில் 2019ஆம் ஆண்டு வெளியான  'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ளது. முரளி கோபி கதை எழுதியுள்ள இப்படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்திருந்தார். மஞ்சு வாரியர், பிரித்விராஜ், டோவினோ தாமஸ், ஷிவதா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு தீபக் தேவ் இசை அமைத்துள்ளார். பான் இந்தியா படமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. 

இது ஒரு புறம் இருக்க இப்படத்தில் சில காட்சிகள் 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தை சித்தரிப்பதாக சொல்லி வலதுசாரி அமைப்புகளும், முல்லை பெரியாறு அணை குறித்து தவறான காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தொடர்ச்சியாக பிரித்விராஜ் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக தமிழக விவசாயிகள் கூறினர். இதையடுத்து படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளும் முல்லை பெரியாறு அணை தொடர்பான காட்சிகளும் படத்தில் இருந்து நீக்கப்பட்டது. இருப்பினும் இந்த படத்திற்கு எதிர்ப்பு குரல்கள் ஓயாத நிலை இருக்கிறது. 

இப்படி பல்வேறு சர்ச்சைகளில் இப்படம் சிக்கியிருந்ததாலும் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. முதல் இரண்டு நாளில் உலகளவில் ரூ.100 கோடி வசூலை ஈட்டி மலையாளத் திரையுலகில் குறைவான நாட்களில் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனையை இப்படம் படைத்தது. இப்போது உலகம் முழுவதும் ரூ.250 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதன் மூலம் மலையாளத் திரையுலகில் அதிக வசூல் செய்த படத்தில் இப்படம் முதல் இடம் பெற்று  சாதனை படைத்துள்ளது. முன்னதாக ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் ரூ. 241 கோடி வசூலித்து முதல் இடத்தில் இருந்த நிலையில் அதை இப்படம் முறியடித்துள்ளது.

சார்ந்த செய்திகள்