Skip to main content

"அவர் நன்றாக தேறி வருகிறார் என்பது எனக்கு மன அமைதியை தருகிறது" - சிரஞ்சீவி 

Published on 20/08/2020 | Edited on 20/08/2020
kyyfy

 

 

கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து திடீரென அவர் கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் இறந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எஸ்.பி.பி. உடல்நிலை குறித்த தகவல் வெளியானவுடன் பல்வேறு பிரபலங்கள் அவர் பூரண நலம்பெற பிரார்த்தனை செய்வதாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தார்கள். இதையடுத்து அவரது மகன் எஸ்.பி.பி. சரண், அவர் உடல்நிலை சீராக உள்ளதாக விளக்கம் அளித்தார். இதைத்தொடர்ந்து அவர் தினமும் எஸ்.பி.பியின் உடல் நிலம் குறித்து வீடியோ பதிவுகள் மூலம் தெரிவித்து வரும் நிலையில், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி  எஸ்.பி.பி உடல்நலம் குறித்து ட்விட்டரில் வீடியோ பதிவிட்டுள்ளார். அதில்...

 

"பல கோடி ரசிகர்களின் அபிமானத்தை பெற்றவர், தேசமே பெருமைப்படும் அற்புதமான கலைஞன், என் சகோதரர் எஸ்.பி.பி, சிகிச்சையில் தேறி வருகிறார் என்பதை கேள்விப்பட்டு மகிழ்ச்சியடைந்தேன், அதை உங்களிடம் பகிர விரும்பினேன். திரைப்படங்களைத் தாண்டி, எஸ்.பி.பி மற்றும் அவரது குடும்பத்தினருடன் தனிப்பட்ட முறையில் எனக்கு பந்தம் உள்ளது. சென்னையில் நாங்கள் பக்கத்து பக்கத்து தெருவில் வசிக்கிறோம். நான் அன்பாக அவரை அண்ணாவென்று அழைப்பேன். எஸ்.பி.பியின் சகோதரிகள் சைலஜா, வசந்தா ஆகியோர் என்னை அண்ணனாக பார்க்கின்றனர். நான் சைலஜா, வசந்தா ஆகியோருடன் பேசி வருகிறேன். எஸ்.பி.பியின் ஆரோக்கியம் குறித்து அவர்கள் தொடர்ந்து எனக்கு தகவல் சொல்லி வருகிறார்கள். இன்றும் அவர்களுடன் நான் பேசினேன். பாலு நாளுக்கு நாள் நன்றாக தேறி வருகிறார் என்பது எனக்கு மன அமைதியை, சந்தோஷத்தை தருகிறது. அவர் மீண்டும் வர வேண்டும், பாடல்கள் மூலம் மகிழ்விக்க வேண்டும் என்று அவரது கோடிக்கணக்கான ரசிகர்களோடு நானும் இறைவனை வேண்டுகிறேன். அனைவரது பிரார்த்தனைகளும், இறைவனின் ஆசியும் அவரை குணமடையச் செய்யும். அவருக்காக நாம் அனைவரும் சேர்ந்து இறைவனிடம் வேண்டுவோம்" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

18 வருடம் கழித்து மீண்டும் முன்னணி நடிகருக்கு ஜோடியான த்ரிஷா

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
trisha joined in chiranjeevi Vishwambhara

த்ரிஷா தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் டோவினோ தாமஸுடன் ஐடென்டிட்டி, மோகன்லாலின் 'ராம் பார்ட் 1' உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இது மட்டுமல்லாமல் இந்தியில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இப்படி தொடர்ந்து தமிழ், மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் கவனம் செலுத்தி வரும் த்ரிஷா தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியின் 156வது படத்தில் இணைந்துள்ளார். வசிஷ்டா இயக்கும் 'விஷ்வாம்பரா' படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக அவர் நடிக்கவுள்ளார். யுவி க்ரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கடந்த பொங்கலன்று இப்படத்தின் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து அடுத்த வருடம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 

இப்படம் மூலம் 18 வருடங்கள் கழித்து மீண்டும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட த்ரிஷா, மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். முன்னதாக ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2006ஆம் ஆண்டு ஸ்டாலின் படத்தில் நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு மன்சூர் அலிகான் கூறிய கருத்து பெரும் சர்ச்சையான நிலையில் சிரஞ்சீவி, த்ரிஷாவிற்கு ஆதரவாக மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

மன்சூர் அலிகான் மேல் முறையீடு; கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்த நீதிமன்றம்

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
mansoor alikhan trisha issue case

மன்சூர் அலிகான், சில மாதங்களுக்கு முன்பு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் த்ரிஷா குறித்துப் பேசியது பெரும் சர்ச்சையானது. அவர், லியோ படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி தனக்கு கிடைக்கவில்லை எனக் கூறியிருந்தார். இதற்கு த்ரிஷா, கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் பல்வேறு பிரபலங்கள், தமிழ் திரையுலகை சார்ந்த சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

பின்பு இது குறித்து விளக்கமளித்த மன்சூர் அலிகான், நான் பேசியதை திட்டமிட்டே வேறு மாதிரி கட் செய்து தவறாக பரப்புவதாக கூறி மன்னிப்பு கேட்கமுடியாது என தெரிவித்திருந்தார். இதையடுத்து மன்சூர் அலிகான் மீது ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்தது. அதன்படி மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக மன்சூர் அலிகானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். இதனிடையே முன் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டார். த்ரிஷாவும் மன்னித்துவிட்டதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். பின்பு இந்த விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு அனுப்பியது சென்னை காவல்துறை. பின்பு த்ரிஷாவிடம் விளக்கம் கேட்டிருந்தனர். மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டுவிட்டதால், மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என த்ரிஷா பதில் கடிதம் எழுதியிருந்தார். இதனிடையே த்ரிஷா, குஷ்பு மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். அவர்கள் மூவரும் தலா ரூ.1 கோடி தர உத்தரவிடக்கோரி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி சதிஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோர் பதிலளிக்க ஆணை பிறப்பித்து ஒத்தி வைத்தார். அடுத்த விசாரணையின் போது, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கில் மனு தொடரப்பட்டுள்ளதாக கூறி மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும் அபராதத் தொகையை 2 வாரங்களில் சென்னை அடையாறு புற்று நோய் மருத்துவமனைக்கு செலுத்த உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த 10ஆம் தேதி நடந்த விசாரணையில் மன்சூர் அலி கான் தரப்பில், அபராதத் தொகையை செலுத்த பத்து நாட்கள் அவகாசம் கேட்டு கோரிக்கை வைத்தது. அவரது கோரிக்கை ஏற்று 10 நாட்கள் அவகாசம் வழங்கி விசாரணை ஒத்திவைக்கபட்டது. 

இந்த நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் மன்சூர் அலி கான். இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அபராதத் தொகையை செலுத்துவதாக தனி நீதிபதியின் உத்தரவை ஏற்றுக்கொண்டு, கால அவகாசமும் பெற்றுக் கொண்டு இப்போது எப்படி மேல்முறையீடு செய்ய முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். மேலும் தனி நீதிபதியின் தனி உத்தரவிற்கும் தடை விதிக்க மறுத்துவிட்டார்கள். இந்த உத்தரவை திரும்ப பெறக்கோரி தனி நீதிபதி முன் நீங்கள் வலியுறுத்தலாம் எனக் கூறி வழக்கு விசாரணையை பிப்ரவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.