
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த விக்ரமன், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பெண் வேடமிட்டு ஆண் ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தெரியும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட விக்ரமன், “சினிமா படப்பிடிப்பு சம்பந்தமாக நடந்த ஒன்றை வைத்து அடிப்படை ஆதாரமின்றி அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனப் பதிவிட்டிருந்தர்.
இதனைத் தொடர்ந்து தற்போது விக்ரமன் தனது மனைவியுடன் திருவேற்காடு காவல் நிலையத்திற்கு வந்து தன்னைப் பற்றி அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விக்ரமன், “நான் அரசியலில் நுழைந்தே பிறகு இது போன்ற அவதூறு நிறைய பரப்புகிறார்கள்” என்றார். இவர் வி.சி.க. நிர்வாகியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய விக்ரமனின் மனைவி, “இதற்கு முன்னாடி இருந்த வீட்டில் ஒரு ஷூட்டிங் சம்பந்தமாக ஒரு வீடியோ எடுக்க வேண்டியிருந்தது. ஷூட்டிங்கிற்காக எடுக்கப்பட்ட வீடியோவை தவறாக பயன்படுத்தி அவதூறு பரப்பியுள்ளார்கள். நான் ஒரு இயக்குநர். அப்போது மதுரையில் நான் இருந்ததால் என்னுடைய படத்துக்காக அப்படி வீடியோ எடுக்க சொல்லி கேட்டேன். விக்ரமன் பெண் வேடமணிந்து இருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர் ஒரு திருநங்கை என நினைத்து அடிக்க தொடங்கிவிட்டனர். இந்த விவகாரம் சம்பந்தமாக நான் ஊரில் இருந்து வந்தவுடனே சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி முடித்துவிட்டேன். இது நடந்து 7 மாதம் ஆகிவிட்டது. அந்த வீட்டில் நாங்கள் இப்போது இல்லை. இந்த வீடியோ வைரலாக்கியது தேவையில்லாத ஒன்று” என்றார்.