
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழில் கமல் - மணிரத்னத்தின் தக் லைஃப், ஜெயம் ரவி - அறிமுக இயக்குநர் அர்ஜுனனின் ‘ஜீனி’ மற்றும் பிரபு தேவா - மனோஜின் ‘மூன் வாக்’ உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏகப்பட்ட படங்களை வைத்துள்ளார்.
இதனிடையே பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் தமிழ் மொழியை விட்டுக்கொடுக்காது பேசி வரும் அவர் தற்போது தமிழ் மொழிக்கான ஒரு பெருமைச்சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் “தமிழ் உலகின் செம்மொழிகளில் இன்றும் பரிணமித்து வளரும் மிகத்தொன்மையான மொழியாகும். குறிப்பாக தமிழ் சங்கங்கள், ஆய்வுகள் மூலம் மொழியை வலுப்படுத்துவதிலும், அதில் திருத்தங்களைச் செய்வதன் மூலம் அதனைச் செறிவாக்குவதிலும் இன்றியமையா பங்கு வகித்துள்ளன.

இப்படி புதுமை குன்றாத நம் தமிழின் நீட்சியை, அர்த்தமுள்ள தொடர்பாடல்கள் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற பொறுப்பையே நமக்கு சுட்டிக் காட்டுகிறது. இந்த அடிப்படையில் ஏ.ஆர்.ஆர். இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு, தமிழ் மொழிக்கான ஒரு பெருமைச்சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது, தமிழ் இலக்கியங்களை விளக்கப்படங்களாகவும் இன்னும் பல்வேறு புதிய வடிவங்களிலும் வழங்கவிருக்கிறது.
ஏ.ஆர்.ஆர். இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு இந்த தமிழ் பெருமைச்சின்னத்தை ஒரு டிஜிட்டல் ரெண்டரிங்காக உருவாக்கவுள்ளது. எதிர்காலத்தில் இப்பெருமைச் சின்னத்திற்கென ஒரு கட்டிடமும் வரக்கூடும். இது குறித்து மேலும் தகவலகளை வெளியிடவிருக்கிறோம். இம்முயற்சி தமிழர்களாகிய நம் அனைவருக்கும் உற்சாகம் அளிக்கும் என்று நம்புகிறேன். தமிழால் மகிழ்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.