Skip to main content

'சிங்கம் 2' பட நடிகர் அதிரடி கைது!

Published on 30/09/2021 | Edited on 30/09/2021

 

Actor Chekwume Malvin

 

நைஜீரியாவைச் சேர்ந்த செக்வூம் மால்வின், தமிழ், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் சூர்யா நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான ‘சிங்கம் 2’ படத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்தார். இவர், தற்போது பெங்களூரு மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

பெங்களூரு கிழக்கு மண்டலத்தில் உள்ள கே.ஜி.ஹள்ளி பகுதியில் போதைப் பொருட்கள் அதிக அளவில் புழங்குவதாக பெங்களூரு காவல்துறைக்கு அடுத்தடுத்து புகார்கள் வந்த வண்ணம் இருந்துள்ளன. வெளிநாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கே.ஜி.ஹள்ளி பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக நேற்று (29.09.2021) கிடைத்த ரகசிய தகவலையடுத்து, அந்தப் பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் நடிகர் செக்வூம் மால்வின் கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருந்து 8 லட்சம் மதிப்பிலான 15 கிராம் எம்.டி.எம்.ஏ. போதை மாத்திரைகள், 250 மில்லி ஆசிஸ் ஆயில், விலை உயர்ந்த ஒரு செல்ஃபோன் மற்றும் ரூ. 2,500 ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து, போதைப்பொருட்கள் தடுப்புப் பிரிவின்கீழ் செக்வூம் மால்வின் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜாபர் சாதிக் வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் கிழிப்பு; ஆட்டோவில் வந்தது யார்?

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
NN

டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாகவும், அவர் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில், அந்த நபர் திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது.

மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார்.

Tearing down notice pasted at Jaber Sadiq's house; Police investigation

அதனைத் தொடர்ந்து மயிலாப்பூர் சாந்தோம் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கடந்த புதன்கிழமை வந்த மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டதோடு, வீட்டிற்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒன்றை ஒட்டிவிட்டு சென்றிருந்தனர். இப்பொழுது வரை ஜாபர் சாதிக் தலைமறைவாக உள்ளார். இந்நிலையில், நேற்று இரவு ஆட்டோவில் வந்த ஜாபர் சாதிக்கின் தாயார் உறவினர் ஒருவருடன் வந்து நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீசை கிழித்தெறிந்ததோடு, வீட்டிற்கு புதிய பூட்டு ஒன்றை போட்டு பூட்டிவிட்டு அவரும் தலைமறைவாகியுள்ளார். அவர் வந்த ஆட்டோ எண் மற்றும் அவருடன் வந்த உறவினர் யார் என்பது தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story

'இன்னும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது'- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
'Even more shocking'-Edappadi Palaniswami condemns

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பல கோடி ரூபாய் மதிப்பு கொண்ட போதைப் பொருள் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இருந்து செங்கோட்டை நோக்கிச் சென்ற பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் பயணித்த சென்னையைச் சேர்ந்த சிலமன் பிரகாஷ் என்பவரிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அவர் வைத்திருந்த பெரிய அளவிலான லக்கேஜ் பேக்கில் 30 கிலோ எடை கொண்ட மெத்தபட்டமைன் எனும் போதைப் பொருள் சிக்கியது.

இதன் மதிப்பு பல கோடி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் மதுரை ரயில் நிலையத்தில் இறங்க இருந்த சிலமன் பிரகாஷை பிடித்து நடத்தப்பட்ட சோதனையில், இந்த போதைப் பொருள் கடத்தல் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. டெல்லியிலிருந்தே சிலமன் பிரகாஷ் கண்காணிக்கப்பட்டதாகவும் பின்னர் அவர் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி மதுரை வந்த போது பின் தொடர்ந்து வந்த அதிகாரிகள் அவரை சுற்றிவளைத்து அதிகாலை 4.30 மணியளவில் கைது செய்து இருப்பது தெரியவந்தது.

அண்மையில் சினிமா தயாரிப்பாளரும், திமுக நிர்வாகியாகவும் இருந்த ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மதுரையில் அதிக அளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'Even more shocking'-Edappadi Palaniswami condemns

இந்நிலையில் இதற்கு சமூக வலைத்தளம் வாயிலாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த எக்ஸ் வலைதளப்பதிவில், 'தமிழ்நாட்டில் எங்கெங்கு காணினும் போதை வஸ்துக்களால் நிரம்பியிருக்கின்ற இன்றைய சூழ்நிலை பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

பெற்றோர்களே, தாய்மார்களே - இன்றைய தலைமுறையினரை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் முழுமையாக சீரழிக்கும் இந்த போதைப்பொருட்களில் இருந்து நாம் தான் நம் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும். மதுரையில் பலகோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ மெத்தோபட்டமைன் போதைப்பொருள் இன்று காலை பறிமுதல் செய்யப்பட்டிருப்பது இன்னும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

கஞ்சா, கொக்கைன், ஹெராயின் என வளர்ந்து இன்றைக்கு மெத் வரை நீளும் அனைத்து போதைப்பொருட்களும் சர்வசாதாரணமாக புழங்கும் மாநிலமாக தமிழ்நாட்டை திமுக அரசு மாற்றியிருப்பது மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உரியது.

தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே சவக்குழியில் தள்ளும் இந்த போதைப் பொருள் புழக்கத்தை தடுக்காமல், போதை மாபியா தலைவனுக்கு முதல்வர் குடும்பத்துடன் நெருக்கமும் அரசியல் பதவி பின்புலமும் அளித்து ஊக்குவித்த திமுக அரசின் முதல்வருக்கு என்னுடைய கடும் கண்டனம்' என தெரிவித்துள்ளார்.