Skip to main content

தந்தூரி அடுப்பில் எரிக்கப்பட்ட மனைவி; மகளை மறைத்த குடும்பம் - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம் :70

Published on 30/08/2024 | Edited on 30/08/2024
thilagavathi ips rtd thadayam 70

நாட்டையே உலுக்கிய தந்தூர் கொலை வழக்கு பற்றி தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.

படிப்பிலும், அரசியலிலும் புகழ்பெற்ற நைனா சாஹ்னி, தன்னுடைய பழைய காதலருடன் பேசியதால் ஆத்திரமடைந்து நைனா சாஹ்னியின் கணவன் சுசில் குமார், நைனா சாஹ்னியை கொலை செய்து தந்தூரி அடுப்பில் வைத்து எரித்தது வரை போலீசாருக்கு தெரியவருகிறது. இதோடு முந்தைய தொடரில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாகப் பின்வருமாறு... 

தந்தூரி அடுப்பில் பாதி எரிந்த நிலையில், உள்ள அந்த உடலை அடையாளம் காண்பதற்கு நைனா சாஹ்னியினுடைய பெற்றோரை போலீசார் அங்கு சென்று அழைத்து வருகின்றனர். நைனா சாஹ்னி பெற்றோர் மற்றும் அவரது குடும்பம் அங்கு வந்து அந்த உடலை கண்டு அழுகிறார்களே தவிர, நைனா சாஹ்னியினுடைய உடல் தானா என்பதை அடையாளம் கண்டு சொல்ல மாட்டிக்கிறார்கள். நைனா சாஹ்னியினுடைய கணவர் சுசில் குமார் தன்னுடைய செல்வாக்கை வைத்து தங்கள் குடும்பத்திற்கு ஏதேனும் நல்லது செய்யக்கூடும் என்றும், தங்கள் குடும்பத்திற்கு அவரால் தொல்லை ஏற்படக்கூடும் என்றும் நினைத்து அந்த குடும்பம், உடலை அடையாளம் கண்டு சொல்ல தயங்கினார்கள்.

இதையடுத்து, சுசில் குமாரினுடைய பெற்றோரை அழைத்து உடலை அடையாளம் காணுமாறு கேட்கின்றனர். ஆனால், தங்களுடைய மகனுக்கு திருமணமே நடக்கவில்லை என அவர்கள் கூறுகின்றனர். நைனா சாஹ்னியும், சுசில் குமாரினுடைய பெற்றோரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை போலீசார் காண்பித்த பின்னால், சுசில் குமாரினுடைய பெற்றோர்கள் திருமணம் நடைபெற்றது உண்மை தான் என ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், அடையாளம் காண்பதற்கு தங்களால் முடியாது என்கின்றனர். வேறு வழியில்லாமல், நைனா சாஹ்னியினுடைய பழைய காதலன் மத்லுப் கரீமை அழைத்து அடையாளம் காணுமாறு கேட்கின்றனர். இது நைனா சாஹ்னியினுடைய உடல் தான் என அவர் அடையாளம் கண்டபின்பு நைனா சாஹ்னினுடைய உடலை பிரேத பரிசோதனை அனுப்புகின்றனர். இதற்கிடையில், காணாமல் போன சுசில் குமாரை கண்டுபிடிக்க நாடு முழுவதும் தகவல் சொல்கின்றனர். 

நைனா சாஹ்னியை கொலை செய்த பின்னால், தன்னுடைய வீட்டுக்குச் சென்று இடத்தை எல்லாம் சுத்தம் செய்துவிட்டு 2 லட்ச ரூபாய் பணமும், ஒரு துப்பாக்கியையும் எடுத்துக்கொண்டு குஜராத் பவனுக்கு தப்பித்துச் செல்கின்றான். அங்கு இருக்கக்கூடிய, கிஷோர் ராவ் ஐஏஸ்யிடம் உண்மைகளை சொல்லாமல் பதற்றமாக பேசுகிறான். அடுத்த நாள் அறையை காலி செய்யும் நேரத்தில் கிஷோர் ராவ்விடம் அந்த அறையை தனக்கு ஒதுக்குமாறு உதவி கேட்கின்றான். அதன்படி, கிஷோர் ராவ்வும் அந்த அறையை காலி செய்த பின்பு, அடுத்த நாள் தனது நண்பர் ஜெய்குமார் பேரில் அந்த அறையை புக் செய்துவிட்டு அவனை அழைத்து வந்து விஷயத்தைச் சொல்கின்றான். ஜெய்குமார் பயந்து, சுசில் குமாரை டெல்லியை விட்டு ஓடிப்போகுமாறு சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறான். அதையடுத்து, தனது நண்பர்கள் அனைவரிடம் நடந்த உண்மைகளைச் சொல்லி காப்பாற்ற சொன்னாலும், எவரும் சுசில் குமாருக்கு உதவி செய்ய முன்வரவில்லை. அதன் பின், ஜெய்ப்பூரில் உள்ள கிஷோர் ராவை தொடர்பு கொண்டு உண்மைகளை சொல்லி காப்பாற்ற கேட்கிறான். அவரும் உதவி செய்யாததால், ஜெய்ப்பூரில் இருந்து கிளம்பி மும்பைக்கு வந்து நண்பர்களிடம் உதவி கேட்டாலும் எவரும் உதவி செய்யவில்லை. அங்கிருந்து சென்னைக்கு வந்து காங்கிரஸ் கட்சியில் இருக்கக்கூடியவர்கள் மூலம் அனந்தபத்மநாபன் என்ற வழக்கறிஞரை தொடர்பு கொண்டு நடந்த விஷயங்களைச் சொல்லி பெயில் கேட்கிறான். அந்த வழக்கறிஞரும் அதற்கு ஒப்புக்கொண்டு சுசில்குமாரிடம் ஒன்றரை லட்சம் வாங்கிக்கொள்கிறார்.

இதையடுத்து, சுசில்குமார் அங்கிருந்து கிளம்பி திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, சென்னைக்கு வந்த பின்பு இவருக்கு ஜாமீன் கிடைக்கிறது. இதற்கிடையில், நாட்டில் உள்ள முக்கியமான பத்திரிகைகளில் இந்த சம்பவத்தை செய்தி ஆக்குகிறார்கள். காங்கிரஸ் கட்சியில் இருப்பதால் சுசில் குமாரை போலீஸ் ஒன்றும் செய்யாது என்று ஒவ்வொரு பத்திரிகைகளிலும் இந்த செய்தியாக போடுகிறார்கள். கேவியேட் கோர்ட்டில் ஆர்டர் வாங்கிவிட்டால், டெல்லி போலீஸை கேட்காமல் இந்தியாவில் இருக்கும் எந்த கோர்ட்டிலும் ஜாமீன் வாங்க முடியாது என்ற நடவடிக்கையில் போலீஸ் இறங்கிறது. இந்த சமயத்தில், சென்னையில் சுசில் குமாருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது என்ற செய்தி வருகிறது. இதையும் பத்திரிகைகளில் செய்தியாக்கி டெல்லி போலீஸை கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். 

சூப்பர் காப் மேக்ஸ்வெல் பரேரா என்பவரின் தலைமையில் ஒரு குழுவை அமைத்து சுசில் குமாரை பிடிக்க திட்டமிட்டு அனுப்புகிறார்கள். அவர்கள் சென்னைக்கு வந்து, சுசில் குமாருக்கு ஜாமீன் கொடுத்தது தவறு என கோர்ட்டில் வாதாடி அந்த ஜாமீனை கேன்சலேஷன் ஆர்டரை வாங்குகிறார்கள். ஜாமீன் கேன்சல் ஆனதால், சுசில் குமார் கர்நாடகாவிற்கு சென்று வேணுகோபால் எஸ்பியிடம் சரண்டர் ஆகிறார். இந்திய பத்திரிகைகள் அனைத்திலும் இது தலைப்பு செய்தியாக வருகிறது. சுசில் குமாரை விசாரணைக்காக டெல்லிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என கர்நாடகா கோர்ட்டில் டெல்லி போலீஸ் கேஸ் ஒன்றை போட்டு உத்தரவை வாங்குகிறார்கள். விமானம் மூலம் சுசில் குமாரை டெல்லிக்கு சென்று விசாரணை செய்கிறார்கள். அதில், தான் அந்த கொலையை செய்யவில்லை என்றும், கட்சியில் உள்ள எதிரிகள் செய்த சதி என்று போலீசிடம் சொல்கிறார். ரகசியமாக நைனா சாஹ்னியை திருமணம் செய்ததால், தனக்கு திருமணமே ஆகவில்லை எனவும் சொல்கிறார். இருப்பினும், சுசில் குமார் வீட்டில் இருந்த தடயங்களை எல்லாம் சேகரித்து, கிட்டத்தட்ட 90 பேரிடம் விசாரித்து 100 டாக்குமெண்ட்ஸுக்கு மேல் பதிவு செய்கின்றனர். கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் இந்த விசாரணை தொடர்ந்தது. கீழ் கோர்ட்டில், சுசில் குமாருக்கு தூக்கு தண்டனை கொடுத்த பின்பு ஹை கோர்ட்டில் மனு போடுகிறார். அங்கு தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக 26 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என குறைத்து தீர்ப்பளிக்கிறார்கள். அதன் பின்பு, சுசில் குமார் திகார் சிறையில் இருந்துகொண்டே 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அதன் பின்னால், சுசில் குமார் ஆயுள் தண்டைனைக்கு மேல் சிறையில் இருப்பதாகவும், சிறையில் சுசில் குமாரினுடைய நடவடிக்கை நன்றாகவும் இருந்ததாகச் சொல்லி அவரை விடுதலை செய்கிறது.