Skip to main content

லெதர் பால் தந்த பரவசம், பின்னர் கிரிக்கெட் உலகமே இவர் வசம்! தோனி | வென்றோர் சொல் #15

Published on 28/08/2020 | Edited on 26/04/2021

 

Dhoni

 

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரு கேப்டனாக என்னென்ன சாதனைகள் செய்ய முடியும் என்று இணையத்தில் சிரமப்பட்டுத் தேடுகிறீர்கள் என்றால் தோனியின் விக்கிப்பீடியா பக்கத்தினை நீங்கள் பார்க்க மறந்து விட்டீர்கள் என்றுதான் சொல்லவேண்டும். ஆம்... இரண்டிற்குமான பதில் ஒன்றுதான். ஐ.சி.சி நடத்துகின்ற உலககோப்பை, ஆசிய கோப்பை போன்ற தொடர்களில் உலகின் எந்தவொரு கிரிக்கெட் கேப்டனும் செய்திராத சாதனைகள் பலவற்றைச் செய்தவர். பலருக்கு அசாத்தியமானதாகத் தெரிந்த விஷயங்கள் இவருக்கு மட்டும் சாத்தியமானதாகத் தெரிந்ததற்கு பின்பு 'கனவினை நோக்கிய கடின உழைப்பு' என்பதைத் தவிர வேறெந்த ரகசியமும் இருந்துவிட முடியாது. புகழ்ச்சியோ, இகழ்ச்சியோ பத்திரிகைகளில் விளையாட்டு செய்திகள் பக்கத்தில் கொட்டெழுத்தில் இவர் பெயர் இருக்கும். 'மகேந்திர சிங் தோனி...' இப்பெயர் இந்திய மக்களுக்கும், உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ரத்தத்தோடு கலந்த, சொல்லி விளக்கமுடியாத ஒரு உணர்வு. இவர் ஜார்கண்ட் மாநிலம் இந்தியாவிற்காக தன் கைப்பட எழுதிய வரலாறு.

 

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி எனும் ஊரில் 'கால் ரூபாய் சம்பளம் என்றாலும் கவர்மெண்ட்டு சம்பளமாக இருக்க வேண்டும்' என்ற மனநிலை கொண்ட சராசரி இந்தியத் தந்தைக்கு மகனாகப் பிறந்த தோனி படித்து முடித்து பெற்றோரின் விருப்பத்திற்கு இணங்கி இந்திய ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராகப் பணி செய்ததும், நெடுநாட்களுக்குப் பின் வாழ்வில் அவர் எதிர்பார்த்த ரயில் வர, இனி என்னவானாலும் இதில்தான் பயணப்பட வேண்டும் என்று தனக்குள் சத்தியம் செய்து கொண்டு முழுமூச்சாகத் தன்னுடைய பயணத்தைத் தொடங்கியதும், அதன் பின் கிரிக்கெட் வரலாற்றில் அவர் அழித்து எழுதிய அத்தனை பக்கங்களும் உலகம் அறிந்ததே. அந்த வெற்றிப் பயணம் குறித்த அவரது வார்த்தைகள் என்ன? 

 

தன்னுடைய வெற்றி குறித்தும் கடந்து வந்த பாதை குறித்தும் தோனி பேசிய வார்த்தை ஒவ்வொன்றும் நம் அனைவரது வாழ்க்கைக்கும் பயன்படும் நம்பிக்கை நாற்றுகள். "வெற்றி என்பது எளிதான விஷயம் தான். நாம் அதைப் பார்க்கும் விதம்தான் சிக்கலாக உள்ளது. என்னுடைய இளமைக் காலங்களில் டென்னிஸ் பந்துகளில் பொழுதுபோக்கிற்காக தெருக்களில் கிரிக்கெட் விளையாடுவேன். அங்கு சில நாட்களில் நான் தோற்க நேரிடும். அப்படியென்றால் மறுநாள் வெல்ல வேண்டும் என்பதே அதிகபட்ச ஆசையாக இருக்கும். 14 வயதில்தான் முதல் முறையாக லெதர் பந்துகளில் விளையாடினேன். கையுறை, காலுறை அணிந்து விளையாடும் அனுபவம் எனக்கு உற்சாகத்தையும் பரவசத்தையும் தந்தது. அதன் பின்பு தீவிரமாக கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன்.

 

அப்போதைய என் கனவு, பள்ளி அணிக்காக விளையாட வேண்டும் என்பது மட்டுமே. ஒரு வருடம் கழித்து பள்ளி அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. பள்ளி அணிக்காக விளையாடும் போது மாவட்ட அணிக்காக விளையாட வேண்டும் என்பதே என் கனவு. மாவட்ட அணிக்காக விளையாடிய போது மாநில அணிக்காக விளையாட வேண்டும் என்பதே என் லட்சியம். மாநில அணிக்காக விளையாட ஆரம்பித்த பின்புதான் எனக்கு இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசையே வந்தது. இந்த அணுகுமுறைதான் சரியானது என்று நினைக்கிறேன். லட்சியமும், கனவுகளும் குறுகியதாக இருக்கும் போதுதான் அதை அடையக்கூடிய வழியும் எளிதாக இருக்கும்.

 

அந்த வெற்றி தரும் உற்சாகம் உங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும். நீங்கள் ஆசைப்படுகிற விஷயத்தில் நீங்கள் சிறந்தவராக இல்லாமல் இருக்கலாம். அதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தேடல் இருந்தால் உங்களால் அந்த லட்சியத்தை அடைய முடியும். உங்களுக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் நீங்கள் இன்னும் உங்களை மெருகேற்ற வேண்டியுள்ளது என்று அர்த்தம். கிடைக்காத வாய்ப்புகளை நினைத்து வருந்துவது எந்த விதத்திலும் உங்களுக்கு உதவப் போவதில்லை. சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை மாற்றிக்கொள்வதுதான் வெற்றிக்கான முதற்படி. எவ்வளவு வேகமாக நீங்கள் உங்களை மாற்றிக் கொள்கிறீர்களோ அவ்வளவு வேகமாக வெற்றியை நெருங்குகிறீர்கள் என்று பொருள்...".

 

http://onelink.to/nknapp

 

தனி நபராக அவரது கனவுகளுக்கு உயிர் கொடுத்ததைப்போல, அணித்தலைவனாக இந்திய அணிக்கு தோனி மறுஉயிர் கொடுத்ததை வரலாறு என்றும் மறுக்காது. பொதுவாக கிராமப்புறங்களில் 'கொடை காணாத தெய்வம்' என கவனிப்பற்றுக் கிடக்கின்ற கோவில் தெய்வங்களைச் சொல்வதுண்டு. தோனி கேப்டன் பதவியை ஏற்கும் வரை இந்த வரிகள் சச்சினுக்கும் பொருந்தும். உலக கிரிக்கெட் ரசிகர்களால் 'கிரிக்கெட்டின் கடவுள்' என அன்போடு அழைக்கப்பட்ட சச்சின் பல சாதனைகள் படைத்திருந்தாலும், உலககோப்பை என்பது அவர் கைகளுக்கு எட்டாத ஒன்றாகவே இருந்தது. அதையும் சாத்தியமாக்கி முழு மனநிறைவுடன் சச்சினை வழியனுப்பி வைத்த பெருமையும் தோனிக்கு உண்டு. பொதுவாக இயற்கைக்கு முன்னால் மனிதன் ஒரு கத்துக்குட்டி என்பார்கள். ஆனால் தோனி மட்டும் இதற்கு விதிவிலக்கு. மின்னலின் வேகத்தை விடக் குறைவான நேரத்தில் பல முறை ஸ்டம்பிங் செய்து இயற்கைக்கே சவால் விட்டவர்.

 

'கடின உழைப்பு', 'அர்ப்பணிப்பு', 'உயிர்ப்புத் தன்மையுள்ள கனவு' இம்மூன்றும் உங்களிடம் இருக்கிறதா???... உலக சாதனையாளர் வரிசையில் உங்களுக்கான இடம் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது... தொடர்ந்து ஓடுங்கள்....

 

 

Next Story

குடிப்பழக்கத்தை நிறுத்த கவுன்சிலிங்கில் புதிய முறை - ஜெய் ஜென்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

 Manangal Manithargal Kathaikal JayZen Interview

 

கவுன்சிலிங் கொடுக்கும்போது தான் எதிர்கொண்ட விஷயங்கள் குறித்து நம்மோடு ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.

 

கவுன்சிலிங் கொடுப்பதற்காக நிறுவனங்களுக்கு நாம் செல்லும்போது, அங்கு தனி நபர்களும் நம்மிடம் கவுன்சிலிங் பெற வருவார்கள். அப்படி ஒரு மனிதர் என்னிடம் வந்தார். அவருக்கு இரண்டு பிரச்சனைகள். ஒன்று குடி. இன்னொன்று சிகரெட். இரண்டும் தவறு என்று தெரிந்தும் தான் செய்து வருவதாகவும், எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை என்றும் கூறினார். இதற்காக ஏன் அவர் கவலைப்படுகிறார் என்று கேட்டபோது, இதனால் தனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது என்றும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறினார்.

 

குடியால் வீட்டுக்கு நிதானம் இல்லாமலும் அவர் வந்துள்ளார். ஆனாலும் குடிப்பது தொடர்ந்தே வந்திருக்கிறது. எதார்த்தமாக ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் பின்பு மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. இதை ஒரு வாழ்வியலாகவே பலர் மாற்றி வைத்துள்ளனர். ஒரு விஷயத்தை விட வேண்டும் என்று நினைத்தாலும் விட முடியவில்லையே என்பதுதான் தன்னுடைய குற்ற உணர்ச்சி என்று அவர் கூறினார். இதில் நீங்கள் நிச்சயம் தோற்பீர்கள், உங்களால் குடியை நிறுத்த முடியாது என்று அவரை வேண்டுமென்றே உசுப்பேற்றினேன். அவருக்கு கோபம் வந்தது. தன்னால் குடியை நிறுத்த முடியும் என்று அவர் கூறினார். 

 

இரண்டு வாரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வந்தது. கடந்த 14 நாட்களில் 4 நாட்கள் தான் குடிக்கவில்லை என்று கூறினார். மீதி 10 நாட்கள் குடித்தீர்களே என்று மீண்டும் அவரை உசுப்பேற்றினேன். குடும்பத்தில், தொழிலில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று இயல்பாகவே அவர் விரும்பினார். மூன்று மாதம் கழித்து அவர் மீண்டும் பேசினார். அப்போதும் அவர் குடியை முழுமையாக நிறுத்தவில்லை. 7 வருடங்கள் கழித்து சமீபத்தில் அவரை சந்தித்தேன். இப்போது அவர் குடியை சுத்தமாக நிறுத்திவிட்டார். என்னுடைய டெக்னிக் பலித்தது. குடியை நிறுத்திய பிறகு குடும்பம் எவ்வளவு அழகானது என்பது புரிந்தது என்று கூறினார். குடும்பத்தின் மகிழ்ச்சியும் ஒரு போதை தான் என்பதை அவர் உணர்ந்தார்.

 

இது அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது. இதுபோன்று பலர் மாறியிருக்கின்றனர். குடியால் பலருடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெயர் கெட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் மீள வேண்டும்.

 

 

Next Story

உலகம் முழுக்க சைக்கிளில் சுற்றி வந்த சாதனை இளைஞன் அருண் ராகேஷ் 

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

Arun Rakesh is the young man who cycled around the world

 

நடந்தே லடாக் வரை சென்றார், பைக்கில் இந்தியா முழுக்க சுற்றினார் போன்ற செய்திகளை சமீபகாலங்களில் நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் சைக்கிளை எடுத்துக்கொண்டே தன்னால் உலகம் முழுக்க சுற்ற முடியும் என்று நம்பி, 11 நாடுகள் சுற்றி முடித்துவிட்டு இந்தியா திரும்பியிருக்கும் இளம் சாதனையாளர் அருண் ராகேஷ். பல கிலோமீட்டர்கள் பயணம் செய்த அவரிடமும் அவருடைய சைக்கிளிடமும் சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள் பல இருக்கின்றன. 

 

சைக்கிளிலேயே உலகம் முழுக்க பயணம் செய்யலாம் என்கிற எண்ணம் உங்களுக்கு முதலில் எப்போது வந்தது?

சைக்கிளில் செல்ல வேண்டும் என்பதை விட பயணம் செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஐடி துறையில் பணிபுரியும் நான், மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே பயணங்கள் செய்யத் தொடங்கினேன். பொதுவாகவே எங்கு சென்றாலும் டூரிஸ்ட் ஸ்பாட்டுகளைத் தேடித்தான் நாம் முதலில் செல்வோம். ஆனால், அந்த இடங்களில் எளிய மக்களோடு நாம் பழக முடியாது. பள்ளியில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் சைக்கிளிலேயே இந்தியாவுக்கு வந்தார். "இப்படி எல்லாம் செய்ய முடியுமா?" என்கிற எண்ணம் அவரைப் பார்த்து எனக்கு ஏற்பட்டது. அதுதான் இந்த சைக்கிள் பயணத்திற்கான முதல் உந்துசக்தி என்று சொல்லலாம். 

 

சைக்கிளை எடுத்துக்கொண்டு நம்முடைய ஏரியாவுக்குள் உலவுவது வேறு. கடினமான பாதைகளில் செல்லும்போது எப்படி இருந்தது?

சைக்கிள் டியூப் உள்ளிட்ட தேவையான பொருட்கள் அனைத்தையும் நானே கையில் வைத்துக் கொள்வேன். கிட்டத்தட்ட மூன்று, நான்கு நாடுகள் வரை சைக்கிள் பஞ்சராகவே இல்லை. அதன் பிறகுதான் ஆனது. தேவையான பொருட்கள் என்னிடம் இருப்பதால் நானே சமாளித்துக் கொள்ளும் நிலையில் தான் இருந்தேன்.

 

இதுபோன்ற நீண்ட பயணத்தை விரும்புபவர்கள் செய்ய வேண்டியவை என்ன?

தேவைக்கு அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை. டூரிஸ்ட் ஸ்பாட்டுகளை மட்டும் குறிவைக்காமல் பல்வேறு இடங்களுக்கும் செல்ல வேண்டும். உதாரணத்திற்கு, தாய்லாந்தில் பீச் போன்ற அனைவரும் செல்லும் பகுதிகளைத் தாண்டி கிராமங்களுக்குள் செல்லும்போது அந்த மக்கள் நம் மீது செலுத்தும் அன்பு பிரமிப்பை ஏற்படுத்தியது. அவர்களுடைய கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. 

 

உங்களை மிகவும் ஈர்த்த நாடு, கலாச்சாரம் எது?

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் தனி கலாச்சாரங்கள் உள்ளன. ஆனால் வெளிநாடுகளில் அந்த நாடுகளுக்கென்று பொது கலாச்சாரங்கள் உள்ளன. மியான்மர் மக்களின் கலாச்சாரமும், அவர்கள் அளித்த வரவேற்பும், அவர்களுடைய வழிபாட்டு முறையும் எனக்கு அதிகம் பழக்கப்பட்ட ஒன்று போல் தோன்றியது. தாய்லாந்து மக்களின் அன்பும் என்னை மிகவும் ஈர்த்தது. கரும்பு ஜூஸ் குடிக்கச் சென்ற எனக்கு இலவசமாக வாட்டர் பாட்டில் கொடுத்து ஊக்கப்படுத்தினார் தாய்லாந்தில் ஒரு மொழி தெரியாத கடைக்காரர். மறக்க முடியாத நினைவு அது.

 

சைக்கிளில் செல்லும்போது கிடைக்கும் பிரத்தியேக அட்வான்டேஜ் என்ன?

பைக்கில் நாம் செல்லும்போது ஒவ்வொரு பகுதியையும் வேகமாகக் கடந்து விடுவோம். ஆனால் சைக்கிளில் மெதுவாகச் செல்லும்போது நின்று நிதானமாக ஒவ்வொரு பகுதியையும் ரசிக்கலாம். 

 

இது போன்ற பயணங்களில் எந்த வழி செல்வது என்பதைக் குறித்த வழிகாட்டுதல்  நிச்சயம் தேவை. அந்த விஷயத்தில் மக்களுடைய ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

மியான்மரில் ஒருமுறை இரவு நேரத்தில் கூகுள் மேப்பை நம்பி ஏமாந்தபோது, அங்கிருந்த மக்கள் நான் செல்ல வேண்டிய கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர தூரத்தில் இருந்த ஒரு பகுதிக்கு அவர்களே என்னை அழைத்துச் சென்றனர். அவசரமான இந்த உலகத்தில் இவ்வளவு மனிதநேயம் கொண்ட மக்களைப் பார்த்து வியந்தேன். கடவுளே என்னைப் பார்த்துக்கொள்வது போன்ற ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.

 

இந்தப் பயணத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் அந்தந்த மக்களின் மொழிக்கு என்னால் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிந்தது. ஆனாலும் சில சமயங்களில் அது தவறான வார்த்தைகளைக் காட்டிவிடும். என்னை அனைவரும் ஏற இறங்கப் பார்ப்பார்கள். இந்த அனுபவம் எனக்கு மியான்மரில் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட 'முத்து' படத்தில் ரஜினி சாருக்கு ஏற்பட்டது போன்ற அனுபவம் அது.

 

ஏதாவது முக்கியமான ஒரு இடத்தில் 'இதற்கு மேல் முடியாது' என்கிற சோர்வு ஏற்பட்டதுண்டா?

நேபாள நாட்டில் காடுகள் நிறைந்த ஒரு இடத்தில் அந்த எண்ணம் ஏற்பட்டது. இருட்டுவதற்குள் தங்குவதற்கான இடத்தைத் தேர்வு செய்து முடிப்பது சிறந்தது என்பார்கள். அதுபோல நானும் இருட்டுவதற்குள் டென்ட் போடும் பணியை முடித்துவிடுவேன். அதுபோன்ற தருணங்களில் யானைகள் சூழும் ஆபத்தான இடங்களில் கூட தங்க நேர்ந்திருக்கிறது.

 

சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் தமிழர்களின் வரவேற்பு எப்படி இருந்தது?

என்னுடைய பயணத்தை நான் தொடங்கியதிலிருந்து வீட்டிற்கு வந்து சேரும் வரை அவர்கள் தான் எனக்கு உதவினர். என்னை அவர்களுடைய உறவினர் போல் பார்த்துக்கொண்டனர். மலேசியாவில் நான் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். செலவுக்கு எனக்கு அவர்கள் தான் பணம் கொடுத்தனர். அந்த அளவுக்கு அன்பு நிறைந்தவர்கள்.

 

பயணத்தின் போது நீங்கள் உணர்ந்த சிறந்த விஷயம் எது?

ஏன் அனைவரும் பணத்தின் பின் இவ்வளவு வேகமாக ஓடுகிறோம் என்று தோன்றியது. தாய்லாந்தில் மக்கள் அவரவர் வீடுகளுக்கு அருகிலேயே தான் வேலை பார்ப்பார்கள். விவசாயம் மூலம் அறுவடை செய்த பொருட்களை அவர்களுடைய கடையில் விற்பனை செய்வார்கள். அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுகின்றனர். செல்போனை அவர்கள் பயன்படுத்தி நான் பார்க்கவே இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது அங்கேயே செட்டிலாகி விடலாமா என்று கூடத் தோன்றியது.

 

உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன?

ஆர்க்டிக் முதல் அண்டார்டிக் வரை பயணம் செய்யவிருக்கிறேன். இது ஒரு உலக சாதனை முயற்சி. இதுவரை யாரும் செய்ததில்லை. இது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 50000க்கும் அதிகமான கிலோமீட்டர்கள் கடந்து செய்யப்போகும் பயணம். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா பகுதிகளில் இந்தப் பயணம் இருக்கும். இது என்னுடைய வாழ்நாள் கனவு. ஒரு பகுதியில் நாம் செய்யும் தவறு இன்னொரு பகுதியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் என்னுடைய பயணம் இருக்கும். இரண்டு வருடங்கள் நான் செய்யப்போகும் இந்தப் பயணத்திற்கு தமிழ்நாடு அரசு மற்றும் கார்ப்பரேட்டுகளின் உதவியை நாடுகிறேன். நிச்சயம் தமிழர்கள் பெருமைப்படும் வகையில் என்னுடைய பயணம் அமையும். எங்களுடைய ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ திரு. பிரபாகர் ராஜா அவர்கள் என்னுடைய பயணத்திற்குப் பிறகு என்னை அழைத்து சால்வை அணிவித்து ஊக்குவித்தார். அவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.