Skip to main content

நாங்களும் உலக சாதனையாளர்கள்தான்... விளையாட்டில் சாதித்துவரும் பெண்கள்...!

Published on 08/03/2019 | Edited on 08/03/2019

கிரிக்கெட் மிகவும் பிரபலமான விளையாட்டாக இருக்க அதன் சிறப்பம்சங்கள் மட்டுமே காரணமல்ல. வணிகம் தான் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தியது என்பது மறுக்க முடியாத உண்மை. ஒவ்வொரு ஓவருக்கு ஒரு முறையும் சில விளம்பரங்களை ஒளிபரப்ப முடியும். வேறெந்த விளையாட்டிலும் அது சாத்தியம் இல்லாத ஒன்று. அதிகம் வணிகம் சார்ந்த விளையாட்டாக இருப்பதால், கிரிக்கெட் இந்தியாவில் மற்ற விளையாட்டுகளை ஓரம்கட்டிவிட்டது. பல நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்களை நாம் அதிகம் அறியாமல் போனதற்கு வணிகத்தை மையமாக கொண்ட கிரிக்கெட்டே முக்கியக் காரணம். 

 

rampal

 

மேலும் வேதனை என்னவென்றால் மற்ற விளையாட்டுகளில் உலகில் நம்பர் 1, உலக தரவரிசைகளில் டாப் 10-ல் இருப்பவர்கள், பதக்கங்களை பெறுபவர்கள்கூட அதிகமாக அறியப்படவில்லை. இதிலும் மகளிர் என்றால் இன்னும் அவர்களுக்கு தடைகளும், சோதனைகளும் அதிகம். ஆனால் இவற்றை கடந்து உலகளவில் சாதித்தவர்கள் சிலர் உண்டு. வறுமை, கேலி, கிண்டல்கள், உடல்ரீதியான பிரச்சனைகள், பாலின வேறுபாடுகள், பாலியல் வற்புறுத்தல்கள் போன்ற பலவற்றை கடந்து சாதித்தவர்களின் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது. 

 

ராணி ராம்பால் – ஹாக்கி

 

rampal

 

14 வயதில் இந்தியா ஹாக்கி அணியில் இடம்பிடித்தவர். தற்போது இந்திய ஹாக்கி அணிக்கு கேப்டனாக இருந்து வருகிறார். 2010-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் 7 கோல் அடித்து 'சிறந்த இளம் வீரர்' என்ற விருதை பெற்றார். ஹரியானாவில் கட்ட பஞ்சயாத்து நடைபெறும் கிராமத்தில் இருந்து வந்தவர். கடும் எதிர்ப்புகளை தாண்டி இவரது பெற்றோர் இவரை சிறு வயதில் ஹாக்கி அகாடமியில் சேர்த்தனர். இவரது தந்தை குதிரை வண்டி ஓட்டுபவர். 



மேரி கோம் – குத்துச்சண்டை
 

இந்திய விளையாட்டு துறையில் இவரை போல வேறெந்த மகளிரும் தடைகளை சந்தித்திருக்க மாட்டார்கள். அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து உலகின் நம்பர் 1 குத்துச்சண்டை வீரர் என்ற இடத்தை அடைந்தவர். ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர். 2014-ல் இவரின் வாழ்க்கை, படமாக வெளியிடப்பட்டது. அதில் மேரி கோமாக பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார். பத்ம புஷன், அர்ஜுனா விருது, பத்ம ஸ்ரீ போன்ற விருதுகளை பெற்றுள்ளார். இவருடைய பெற்றோர் குத்தகை விவசாயம் செய்து வந்தனர்.
 


சாக்சி மாலிக் – மல்யுத்தம்
 

2016-ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த போட்டியில் வெண்கல பதக்கம் வென்று இந்தியாவை தன் பக்கம் ஈர்த்தார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் மல்யுத்த வீரர் ஆவார். தடைகளாக இருந்த பல சமூக காரணிகளை கடந்து மல்யுத்தத்தில் சாதித்து வருகிறார்.
 


மிதாலி ராஜ் – கிரிக்கெட்
 

பி.பி.சி.-ன் உலகின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் 2017-ஆம் ஆண்டு இவர் இடம் பிடித்தார். 1999 முதல் தேசிய அணியில் உள்ளவர். 20-க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். லேடி கிரிக்கெட்டின் சச்சின் எனப் போற்றபடுபவர்.


தீபிகா குமாரி – வில்வித்தை

 

deepika

 

தீபிகா தற்போது உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இதற்கு முன்னாள் முதல் இடத்தில் இருந்தார். பத்ம ஸ்ரீ, அர்ஜூனா விருது பெற்றவர். இவரது தந்தை ஆட்டோ ரிக்ஷா டிரைவர்.

 


சாய்னா நேவால் – பேட்மின்டன்
 

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால். பேட்மிட்டன் தரவரிசை பட்டியலில் முதலிடம் வகித்த முதல் பெண். 20-க்கும் மேற்பட்ட சர்வதேச டைட்டில்களை பெற்றுள்ளார். கராத்தேவில் பிரவுன் பெல்ட் வாங்கியுள்ளார். இவரது தந்தை கடன் மற்றும் லோன் வாங்கி பேட்மிட்டன் பயிற்சி பெற ஊக்குவித்தார்.  
 


தன்யா சச்தேவ் – செஸ்
 

பல சர்வதேச மாஸ்டர் மற்றும் பெண் கிராண்ட்மாஸ்டர் டைட்டில்களை வென்றவர். ஆசிய பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வென்றார். 8 வயதில் சர்வதேச டைட்டில் வென்ற பெருமைக்குரியவர். 2009-ஆம் ஆண்டு அர்ஜூனா விருது பெற்றார்.  


கீதா பகாட் – மல்யுத்தம்
 

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கீதா பல சமூகப் பிரச்சனைகள், குழந்தை திருமணம் அதிகமுள்ள பகுதியிலிருந்து வந்து சாதனை படைத்துள்ளார். காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் 2010-ஆம் ஆண்டு மல்யுத்தத்தில் தங்கப் பதக்கம் வென்றார். இவரின் விளையாட்டு வாழ்க்கை அமீர் கான் நடித்த “தங்கல்” என்ற படமாக வெளிவந்து சிறப்பான வரவேற்பை பெற்றது.  

 

பி.வி. சிந்து – பேட்மின்டன்
 

ஒலிம்பிக்கில் பேட்மின்டனில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர். தற்போது 3-வது இடத்தில் உள்ளார். பத்ம ஸ்ரீ, அர்ஜூனா விருது பெற்றவர். 2018-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். 
 

ஜுலன் கோஸ்வாமி – கிரிக்கெட்டர்

 

jhulan


  
கிரிக்கெட்டில் வேகப்பந்து வீசுவது என்பது மிகவும் சவாலான ஒன்று. அதிலும் மகளிருக்கு மிகவும் சிரமமான ஒன்று. ஆனால் சிறுவயதிலிருந்தே ஆர்வம் கொண்டு அதில் சாதித்தும் காட்டியவர். தற்போது உலகில் நம்பர் 1 பவுலராக இருந்து வருகிறார். பத்ம ஸ்ரீ, அர்ஜூனா விருது பெற்றவர். மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்த வீரர். 
 

தீபா கர்மகார் – ஜிம்னாஸ்டிக்ஸ்
 

2016-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் நூலிழையில் வெண்கல பதக்கத்தை நழுவவிட்டார். 2014-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்றார். சர்வதேச அளவில் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளார். இந்தியாவின் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் இருந்து வந்து சாதித்து காட்டியவர்.  


தீபிகா பல்லிகல் – ஸ்குவாஷ்

 

கிரிக்கெட்டால் மற்ற விளையாட்டுகள் மூழ்கடிக்கப்பட்ட காரணத்தால் கிரிக்கெட்டை வெறுத்தவர். இவர் ஸ்குவாஷ் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த முதல் இந்தியர். பத்ம ஸ்ரீ, அர்ஜூனா விருது பெற்றவர். தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் அங்கமாக இருந்தார். இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் மனைவி. 

 

 

 

 

Next Story

“பெற்றோர்களிடம் இந்த மனப்போக்கு மாற வேண்டும்” - ஆளுநர் ரவி

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
RN Ravi says it is wrong for parents not to allow their children to play sports

திருச்சி தேசிய கல்லுாரியில் விளையாட்டு வீரர்களின் 5 நாள் ஐ.சி.ஆர்.எஸ் கருத்தரங்கின் நிறைவு விழா நேற்று நடந்தது.  கல்லுாரி செயலாளர் ரகுநாதன் தலைமையில் நடந்த கருத்தரங்கின் நிறைவு விழாவில் ஆளுநர் ரவி பேசியதாவது, “விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் அவர்கள் இந்த நாட்டின் சொத்துகள். 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் அபினவ் பிந்த்ரா மட்டும் ஒரு தங்கப்பதக்கம் வென்ற போது ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒரு பதக்கம் மட்டும் வென்றது சற்று மன வருத்தத்தைத் தந்தது. 

2010ம் ஆண்டு டில்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடந்தது. டில்லி விளையாட்டு கிராமத்தில் நடந்த விருந்தில் விஐபிக்கள் வரவில்லை என்பதற்காக வீரர்கள் சாப்பிடுவதற்கு 45 நிமிடங்கள் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டது. இதுபோல வீரர்களை நடத்தக் கூடாது. பதக்கம் வென்றவர்களுக்கு அரசுகள் கோடிக்கணக்கில் பரிசு கொடுப்பதை போல விளையாட்டு உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும். பிரதமர் மோடி அறிவித்த  பிட் இந்தியா திட்டத்தின் படி பல்வேறு விளையாட்டு மேம்பாட்டு நிகழ்ச்சிகள் நடக்கிறது. 

சமீபத்தில் நடந்த சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர்கள் பதக்கம் குவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.  தங்கள் குழந்தைகள் விளையாடினால் அதிக மதிப்பெண் பெற முடியாது என நினைத்து பெற்றோர்கள் விளையாட்டில் ஈடுபட அனுமதிக்காதது தவறாகும். பெற்றோர்களிடம் இந்த மனப்போக்கு மாற வேண்டும். விளையாட்டில் ஈடுபடுவதால் உடல், மன வலிமை, தலைமை பண்பு, கூட்டு முயற்சி போன்ற திறமைகள் உருவாகும். இந்த விளையாட்டு கருத்தரங்கில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து அதிக அளவில் வீரர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டது சிறப்பாகும். வீரர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு மருத்துவர்கள், பயோ மெக்கானிக் அனைவர்களும் இணைந்து செயல்பட்டால்தான் விளையாட்டில் சிறப்பு நிலைமை அடைய முடியும். ஓட்டப்பந்தயத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மைக்ரோ வினாடியில் போட்டியில் முடிவைக் கணிக்க முடிகிறது. நுாற்றாண்டு பாரம்பரிய பெருமை கொண்ட தேசியக் கல்லுாரிகளில் இது போன்ற விளையாட்டு கருத்தரங்கை அதிக அளவில் நடத்த வேண்டும்” என்றார். 

இந்தக் கருத்தரங்கில் 50 நாடுகளைச் சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர்கள், வல்லுநர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கருத்தரங்கில் ஆயுர்வேதம், போட்டிகளில் ஏற்படும் காயங்களுக்கான சிகிச்சை, உணவு மேலாண்மை, உடற்பயிற்சி, யோகா,மருத்துவம், விளையாட்டு கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள், குறும்பட போட்டி நடந்தது. நிகழ்ச்சியில் ஒலிம்பியன் பாஸ்கரன், எக்ஸல் நிறுவன சேர்மன் முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர். துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி கருத்தரங்கம் குறித்த அறிக்கை மற்றும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வாசித்தார். முன்னதாக கல்லுாரி முதல்வர் குமார் வரவேற்றார்.

Next Story

“விளையாட்டுத்துறையில் தலைசிறந்த  மாநிலமாக தமிழகம் உள்ளது”-  அமைச்சர் ஐ.பெரியசாமி 

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
 Tamil Nadu is the best state in the field of sports says Minister I.Periyasamy

திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலைநாடார் பள்ளியில்  கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியை முன்னிட்டு  மாவட்ட அளவில் நடைபெற்ற ஓவியம், கட்டுரை, திருக்குறள், பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில்  வெற்றி பெற்ற 30 மாணவ-மாணவிகளுக்கு ஊரக வளர்ச்சித்துறை  அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி பரிசு வழங்கி பாராட்டினார்கள்.

இந்த விழாவில் உணவு மற்றும் வழங்கல்துறை  அமைச்சர் அர.சக்கரபாணி பேசும்போது, “முதலமைச்சர் ஸ்டாலின்  சென்னையில் 180 உலக நாடுகள் கலந்து கொண்ட செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்திக் காட்டினார். அதே போல இளைஞர்  நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, தேசிய,  மாநில ஆசிய விளயாட்டு போட்டி மற்றும் பல்கலைக்கழக  விளையாட்டு போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி  பெற்ற வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத்தொகை வழங்கி  சிறப்பித்து வருகிறார். இன்று சென்னையில் தொடங்கும் கேலோ  இந்தியா விளையாட்டு போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள், விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்  கொள்கிறேன்” என்றார்.

 Tamil Nadu is the best state in the field of sports says Minister I.Periyasamy

இறுதியாக பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்  ஐ.பெரியசாமி பேசும்போது, “சென்னை, மதுரை, திருச்சி, கோவை  ஆகிய நகரங்களில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்கி வருகின்ற 31ம் தேதி வரை நடைபெற  உள்ளது. தமிழகத்தில் கல்விக்கு மட்டுமின்றி விளையாட்டுத்துறைக்கும்,  முதலமைச்சர் ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். விளையாட்டுத்துறையில் தலைசிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கால்பந்து, கபடி போட்டிகளில் மிக சிறந்த மாணவர்கள் உள்ளனர். விளையாட்டுத்துறையில் ஆர்வம் உள்ள  மாணவர்கள் இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்று நமது  மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்” என கூறினார்.

இதில் மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமை  வகித்தார். மாவட்ட எஸ்பி. பிரதீப், பழனி சட்டமன்ற உறுப்பினரும்,  கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், திண்டுக்கல் மாநகர மேயர்  இளமதி, துணை மேயர் ராஜப்பா, மாநில வர்த்தகர் அணி இணைச்  செயலாளர் ஜெயன், திண்டுக்கல் வடக்கு ஒன்றிய செயலாளர்   நெடுஞ்செழியன், திண்டுக்கல் மாநகர பகுதி செயலாளர்களான  ராஜேந்திரகுமார், ஜானகிராமன்,  சந்திரசேகர் உள்பட கட்சிப்பொறுப்பாளர்களும், அதிகாரிகளும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.