Skip to main content

மிரட்டிய மேக்ஸ்வெல்; அதிரடி ஆட்டத்தால் வெற்றியைப் பறித்த ஆஸ்திரேலியா!

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

world cup 2023 australia afganistan maxwell double century cricket score update

 

உலகக்கோப்பை கிரிக்கெட் 2023இன் 39 ஆவது லீக் ஆட்டம் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (07.11.2023) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. குர்பாஸ் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து இப்ராஹிமுடன் இணைந்த ரஹ்மத் நிதானமாக ஆடினார். 30 ரன்களில் அவர் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் ஷஹிதி 26, அஸ்மத்துல்லா 22, நபி 12 என வீழ்ந்தனர். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறு பக்கம் இப்ராஹிம் நிலைத்து நின்று ஆடி சதமடித்தார். ஆறாவது விக்கெட்டுக்கு இணைந்த ரஷித் கானின் அதிரடியான 35 ரன்கள் உதவியுடன் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்தது. சிறப்பாக ஆடி சதமடித்த இப்ராஹிம் 129 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் ஹேசில்வுட் 2 விக்கெடுகளும், ஸ்டார்க், ஜம்பா, மேக்ஸ்வெல் ஆகியோர் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

 

பின்னர் 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தான் பந்து வீச்சில் திணறியது. தொடக்க ஆட்டக்காரர் ஹெட் ரன் ஏதும் எடுக்காமலும், வார்னர் 18 ரன்களிலும் வெளியேறினர். மார்ஸ் 24, இங்லிஸ் 0, லபுசேன் 14, ஸ்டாய்னிஸ் 6, ஸ்டார்க் 3 என அவுட் ஆக 91-7 என தடுமாறியது. அதன்பின் இணைந்த மேக்ஸ்வெல், கேப்டன் கம்மின்ஸ் இணை பொறுமையாக ஆடத் தொடங்கியது. கொஞ்ச நேரம் பொறுமை காத்த மேக்ஸ்வெல், பின் தனது அதிரடியை காட்டத் தொடங்கினார். சிறப்பாக ஆடிய அவர் சதத்தைக் கடந்தார். கம்மின்ஸ் அவருக்கு ரொடேட் செய்து தரும் வேலையை மட்டும் செய்தார். தொடர்ந்து ஆடிய மேக்ஸ்வெல்லுக்கு தொடையில் ஹார்ம்ஸ்டிரிங் ஏற்பட்டது. அதையும் பொறுத்துக் கொண்டு ஆடினார்.

 

ஒரு சமயத்தில் நடக்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் அணியின் வெற்றியை ஒன்றே இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கினார். வெறி கொண்டு ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்களை பதம் பார்த்தார். ஆப்கானிஸ்தான் கேப்டன் ஷஹிதி எவ்வளவோ பவுலர்களை மாற்றி, மாற்றி பார்த்தும் பலனளிக்கவில்லை. தொடர்ந்து மிரட்டிய மேக்ஸ்வெல் ஒருநாள் கிரிக்கெட்டில் தன் முதல் இரட்டை சதத்தை அடித்தார். ஒரு ஆஸ்திரேலிய வீரரால் அடிக்கப்பட்ட முதல் இரட்டை சதம் இதுவாகும்.  இதற்கு முன் ஷேன் வாட்சன் எடுத்த 185 ரன்களே அதிகபட்சமாக இருந்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 201 ரன்கள் குவித்து தனி ஆளாக வெற்றியை ஆப்கானிஸ்தானிடமிருந்து பறித்தார். அவருக்கு துணை நின்ற கம்மின்ஸ் 68 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த அபார வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 12 புள்ளிகளுடன், புள்ளிகள் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்து அரையிறுதிக்கும் தகுதி பெற்றது. 201 ரன்கள் அடித்து வெற்றி தேடித் தந்த மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

- வெ.அருண்குமார்

 

 

 

 

Next Story

வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; 6 பேர் பலி

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Mall incident in australia

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி பகுதியில், மிகப்பெரிய பிரபல தனியார் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் கூறுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்ட அந்த வணிக வளாகத்தில் இருந்த மக்கள் அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு ஓடினர். மர்ம நபர் ஒருவர் நடத்திய இந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகளை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பலர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த வணிக வளாகத்தில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக அவசர அவசரமாக போலீசாரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

Mall incident in australia

வணிக வளாகத்தில் நடந்த தாக்குதல் தொடர்பான பதிவுகளில் வணிக வளாகத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதையும், போலீசார் மற்றும் அவசர சேவை வாகனங்கள் அப்பகுதிக்கு விரைவதையும் காண முடிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிரபல தனியார் வணிக வளாகத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

இயக்குநராக அவதாரமெடுக்கும் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
All-rounder Yuvraj Singh will be incarnated as a director!

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு வீரர் யுவ்ராஜ் சிங். களத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராகவும், மிகச்சிறந்த பீல்டராகவும் மட்டுமல்லாமல், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்புடனேயே 2011 உலகக்கோப்பை விளையாடி, தொடர்நாயகன் விருதையும் பெற்று இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஒரு கிரிக்கெட் வீரராக சாதனை படைத்த வகையிலும், ஒரு நோயாளியாக கேன்சரை எதிர்த்து வென்று மீண்டும் கிரிக்கெட்டில் களம் கண்ட ஒரு வீரர் என்கிற வகையிலும் சமூகத்திற்கு ஒரு உதாரணமான மனிதர் என்றால் அது மிகையாகாது.

அப்படிப்பட்ட யுவ்ராஜ் சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். கிரிக்கெட் பற்றியும் அவ்வப்போது சினிமா பற்றியும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில்  அவர் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ,“என் படத்தில் நான். நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து நானே என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கவுள்ளேன். என்னை வாழ்த்துங்கள் நண்பர்களே! இன்னும் ஓரிரு வருடங்களில் என்னை பெரிய திரையில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் பல அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இது உண்மையா? இந்த பதிவுடன் சேர்த்து ஒரு கிண்டலான ஸ்மைலியையும் பதிவிட்டிருப்பதால் இது ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்துக்கான பதிவாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.