Skip to main content

கிரிக்கெட் வரலாற்றிலே 161.3 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசிய வீரர் திரும்பி வருகிறார்...

Published on 14/02/2019 | Edited on 14/02/2019

 

aa

 

எல்லைக்கோட்டிற்கு அருகிலிருந்து ஓடி வரும் தூரம், பந்தின் வேகம், முகபாவனைகள் உள்ளிட்டவை மூலம் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்துபவர் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் அக்தர். 2011-ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடியது தான் அவரின் கடைசி போட்டியாக இருந்தது. அனைத்து பேட்ஸ்மேன்களையும் தனது வேகத்தால் மிரட்டும் அக்தர் இதுவரை 163 ஒருநாள் போட்டிகளில் 247 விக்கெட்கள் எடுத்துள்ளார். பவுலிங் சராசரி 24.98,  எகானமி ரேட் 4.77. 46 டெஸ்ட் போட்டிகளில் 178 விக்கெட்கள், எகானமி ரேட் 3.37. 15 டி-20 போட்டிகளில்  19 விக்கெட்கள் எடுத்துள்ளார். 

 

சர்வேதச கிரிக்கெட் வரலாற்றில் 161.3 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசிய வீரர் அக்தர். இவரது வேகமான பந்துவீச்சை எதிர்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்கள் ஒரு சிலர் மட்டுமே. அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் பேட்ஸ்மேன்களான சச்சின் மற்றும் டிராவிட் ஆகியோர் குறிப்பிடத்தகுந்த வீரர்கள். 2003-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் அக்தர் பந்துவீச்சை சிக்ஸர்களாகவும், பவுண்டரியாகவும் அடித்து அசத்தினார் சச்சின். டிராவிட் என்ற தடுப்பு சுவரை தனது வேகத்தால் அக்தர் அவுட் செய்து இருந்தாலும், எல்லை கோட்டிற்கு அருகில் இருந்து ஓடி வந்து வீசும் பந்தை அசால்ட்டாக தடுத்து நிறுத்தும் திறமை டிராவிட் தவிர வேறு எந்த வீரரிடமும் இல்லை.

 

ஐ.பி.எல் போட்டிகளில் ஒரு அங்கமாக முதல் சீசனில் கொல்கத்தா அணிக்கு விளையாடினார் அக்தர். டெல்லி அணிக்கு எதிராக 11 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்கள் எடுத்து அணியை வெற்றி பெற உதவினார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு டிவி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும், ஜட்ஜாகவும் கலந்து கொண்டு வந்தார். தற்போது பெரும்பாலும் கிரிக்கெட் வர்ணனையாளராக பங்கேற்று வருகிறார். 

 

இந்த நிலையில் ஷோயப் அக்தர், தான் மீண்டும் கிரிக்கெட் விளையாட  வரப்போவதாக தெரிவித்துள்ளார். இவரின் இந்த அறிவிப்பை பல முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் வரவேற்று உள்ளனர். தற்போது விளையாடி வரும் இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒரு உண்மையான ஃபாஸ்ட் பவுலிங் என்றால் எப்படி இருக்கும் என்று காட்ட திரும்ப வருவதாக கூறி தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மெசேஜ் மூலம் தன் வருகையை தெரிவித்துள்ளார் ஷோயப் அக்தர்.

 

“இன்றுள்ள கிட்ஸ் தங்களுக்கு கிரிக்கெட் பற்றி அதிகமாக தெரியும் என்று நினைக்கின்றனர். அவர்களுக்கு ஃபாஸ்ட் பவுலிங்னா என்னவென்று காட்டுகிறேன். பிப்ரவரி 14-ஆம் தேதியை காலண்டரில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நான் மீண்டும் வருகிறேன்” என்று அந்த வீடியோ மெசேஜில்  பதிவிட்டுள்ளார். 

 

திரும்ப வருகிறேன் என்று சொன்ன அக்தர் எங்கு நடக்கும் போட்டியில், எந்த அணியில் பங்கு பெறப்போகிறார் என்பதை இன்னும் சொல்லவில்லை. துபாய், அபுதாபி, ஷார்ஜா, லாகூர், கராச்சி உள்ளிட்ட இடங்களில் இன்று (பிப்ரவரி 14) முதல் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் தொடங்கவுள்ளன. இந்த நிலையில் அக்தர் இவ்வாறு தெரிவித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. அவர் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் பங்கு பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறனர்.

 

ஆறு அணிகள் பங்கு பெரும் இந்த தொடரில் ஏ.பி.டி வில்லியர்ஸ், ஷேன் வாட்சன், டுவைன் பிராவோ, சோயப் மாலிக், ஷாஹித் அப்ரிடி, ஆண்ட்ரே ரசல், கிரண் போலார்ட் போன்ற உலகின் சிறந்த டி-20 வீரர்கள் விளையாடவுள்ளனர். பிப்ரவரி 14 முதல் மார்ச் 17 தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளது.

 

 

 

Next Story

"ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள்..." நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராகக் கொந்தளித்த அக்தர்!

Published on 27/11/2020 | Edited on 27/11/2020

 

Shoaib Akhtar

 

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 இருபது ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் இருபது ஓவர் போட்டி அடுத்த மாதம் 18 -ஆம் தேதி ஆக்லாந்தில் நடைபெற இருக்கிறது. நியூசிலாந்தில் கரோனா பாதுகாப்பு வளையத்தினுள் முகாமிட்டுள்ள பாகிஸ்தான் வீரர்களில் 6 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கரோனா பாதுகாப்பு விதிகளை முறையாகக் கடைப்பிடிக்காததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. 

 

நியூசிலாந்து சுகாதாரத்துறை இது குறித்து கூறுகையில், "சில வீரர்கள் கரோனா கட்டுப்பாட்டு விதிகளை மதிக்காமல் அவற்றை மீறியிருப்பது கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. மொத்த அணிக்கும் இறுதி எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது" எனக் கூறியது. இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் நியூசிலாந்து சுகாதாரத்துறை மற்றும் கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராகத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

 

இது குறித்து அவர் பேசும் போது, "நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இது கிளப் அணி அல்ல. பாகிஸ்தான் நாட்டின் தேசிய அணி. தொடரை ரத்து செய்துவிடுவோம் என்ற கருத்தை நீங்கள் எப்படிக் கூறலாம். எங்களுக்கு நீங்கள் தேவையில்லை. இத்தொடருக்கான ஒளிபரப்பு உரிமை மூலம் கிடைக்கும் பணமும் உங்களுக்குத்தான் வருகிறது. இந்த நெருக்கடியான நேரத்தில் விளையாட வந்ததற்கு நீங்கள் எங்களுக்கு நன்றிக்கடன்பட்டிருக்க வேண்டும். நீங்கள் பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறீர்கள். ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். இது போன்ற கருத்துகள் கூறுவதை நிறுத்துங்கள். அடுத்த முறை ஒரு விஷயத்தைக் கூறும் போது கவனமாக இருங்கள்" எனக் கூறினார்.

 

 

 

Next Story

"போதைப் பொருள் எடு... இல்லாவிட்டால்" என்று என்னிடம் கூறினார்கள் - அக்தர் பேச்சு!

Published on 25/11/2020 | Edited on 25/11/2020

 

shoaib akhtar


தான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த காலங்களில், "போதைப் பொருட்கள் எடுத்துக்கொள்" என்று தன்னிடம் சிலர் கூறியதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

 

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர், பாகிஸ்தான் நாட்டின் போதைப்பொருள் எதிர்ப்பு பிரிவு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியின் போது பேசிய அக்தர், "நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த காலங்களில் என்னைச் சிலர் போதைப் பொருட்கள் எடுத்துக் கொள்ளக் கூறினார்கள். இல்லையென்றால், என்னால் வேகமாகப் பந்துவீச முடியாது என்றார்கள். நான் அதை மறுத்துவிட்டேன்" எனக் கூறினார்.

 

மேலும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படத்தையும் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் அக்தர் பகிர்ந்துள்ளார்.