Skip to main content

கரோனா தடுப்புக்கு ரோஹித் சர்மா செய்த உதவி...

Published on 31/03/2020 | Edited on 31/03/2020

கரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ. 80 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா.  

 

rohit sharma contribution towards corona containing actions

 

 

உலகளவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழு லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர், 35,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் இந்த வைரசால் 1251 பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து குணமடைந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது.

இதனையடுத்து கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் முதல் பிரபலங்கள் வரை பல்வேறு தரப்பினரும் அரசுக்கு நிதியுதவிகளைச் செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான ரோஹித் சர்மா கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.80 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். இதில், ரூ. 45 லட்சத்தைப் பிரதமர் நிவாரண நிதிக்கும், ரூ. 25 லட்சத்தை மகாராஷ்ட்ரா முதல்வர் நிவாரண நிதிக்கும் அளித்துள்ளார். மேலும், சொமேட்டோ ஃபீடிங் இந்தியா நிறுவனம் மற்றும் தெரு நாய்களின் நலனுக்கான அமைப்பிற்கும் தலா ரூ. 5 லட்சத்தையும் வழங்கியுள்ளார்.