Skip to main content

ஒரு சதம் இவ்வளவு சாதனைகளா?; அசத்திய கோலி!

Published on 20/10/2023 | Edited on 20/10/2023

 

Is a hundred so many achievements Unreal virat kohli

 

உலகக் கோப்பையின் 17 வது லீக் ஆட்டம் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையே புனே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸை வென்ற வங்கதேச ஆணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களம் இறங்கிய வங்கதேச அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான டன்ஸித் மற்றும் லிட்டன் தாஸ் இணை தாஸ் சிறப்பான துவக்கம் தந்தது. அரை சதம் அடித்த டன்ஸித் 51 ரன்களில் அவுட் ஆனார். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் எடுத்தது. பின்னர் இணைந்த கேப்டன் ஷான்டோ 8 ரன்களில் பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த மெஹிதி ஹசனும் 3 மூன்று ரன்களில் ஆட்டம் இழந்தார்.

 

தொடர்ந்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த லிட்டன் தாஸ் 66 ரன்களில் ரவீந்திர ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார். அணியின் ஸ்கோர் 200 ஐ தாண்டுமா என்று வங்கதேச ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்த நிலையில் விக்கெட் கீப்பர் ரஹீமும், ஆல்ரவுண்டர் மெகமதுல்லாவும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ரஹீம் 38 ரன்களுக்கும்,  மெகமதுல்லா46 ரன்களுக்கும் ஆட்டம் இழக்க, இறுதியில் வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய பும்ரா, சிராஜ் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், குல்தீப் மற்றும் தாகூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

 

பின்னர் 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, கேப்டன் ரோகித் மற்றும் கில் இணை சிறப்பான துவக்கம் தந்தது. கில் பொறுமை காட்ட அதிரடியாய் விளையாடிய கேப்டன் ரோஹித் பௌண்டரிகளும் சிக்ஸர்களும் பறக்க விட்டார். 40 பந்துகளில் 48 ரன்கள் எடுத்த ரோஹித் சிக்ஸர் அடித்து அரை சதம் கடக்க நினைத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். கில் நிதானமாக ஆடி அரை சதம் கடந்து 53 ரன்களில் ஆட்டம் இழந்தார். பின்னர் மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கோலி ஸ்ரேயாஸ் இணை சிறப்பாக ரொட்டேட் செய்து பொறுமையாக ஆடியது. கோலி 48 பந்துகளில் அரை சதம் கடந்தார். நன்றாக ஆடிக் கொண்டிருந்த ஸ்ரேயாஸ் சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு 19 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

 

Is a hundred so many achievements Unreal virat kohli

 

பின்னர் கோலி மற்றும் ராகுல் இணை ஆஸ்திரேலியாவுடன் நடந்த முதல் ஆட்டத்தை போலவே பொறுப்புடன் ஆடியது. ஒன்றும் இரண்டுமாக ரன் சேர்த்த கோலியும் ராகுலும், தவறான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டவும் தவறவில்லை. அணியின் வெற்றிக்கு 2 ரன்கள், கோலியின் சதத்திற்கு 3 ரன்களும் தேவைப்பட்ட நிலையில் கோலி சிக்ஸர் அடித்து அணியின் வெற்றியையும், தனது சதத்தையும் பூர்த்தி செய்தார். ராகுல் 34 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். சிறப்பாக ஆடி சதம் அடித்த கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

 

கோலி அடித்த இந்த சதம் இதே மைதானத்தில் அவர் அடிக்கும் 3 ஆவது சதம் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் கோலியின் 48வது சதமாகும். உலகக்கோப்பை போட்டிகளில் சேசிங்கில் கோலியால் எடுக்கப்பட்ட முதலாவது சதமாகும். ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த இரண்டாவது வீரரானார். ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த சச்சின் டெண்டுல்கரின் (49) சாதனையை சமன் செய்ய கோலிக்கு இன்னும் ஒரு சதமே மீதம் உள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் 26000 ரன்களைக் குறைவான போட்டிகளில் கடந்து சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார். சச்சின் 600 இன்னிங்ஸ்களில் கடந்த இச்சாதனையை, கோலி 567 இன்னிங்ஸ்களில் கடந்துள்ளார். மேலும் ஒரு சாதனையாக கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த நான்காவது வீரரானார். சச்சின், சங்கக்கரா, பாண்டிங் வரிசையில் 4 ஆவது வீரராக இணைந்துள்ளார்.

 

Is a hundred so many achievements Unreal virat kohli

 

வெற்றிக்கு பின்னர் கேப்டன் ரோஹித் பேசியதாவது, “நாங்கள் சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுக்கவில்லை. ஆனால் மிடில் ஓவர்களில் வீரர்கள் சிறப்பாக விளையாடினர். ஜடேஜாவின் பந்து வீச்சு மற்றும் பீல்டிங் சிறப்பாக அமைந்தது. ஹர்திக்கின் காயம் பெரிதாக கவலை கொள்ளத் தேவையில்லை. நாளை காலை எழுந்தவுடன் அவருக்கு சோதனை செய்யப்பட்டு, பிறகு திட்டங்கள் மேற்கொள்ளப்படும். அணியில் உள்ள அனைவரும் அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். ஏனென்றால், எங்களை சப்போர்ட் செய்ய மக்கள் அதிக அளவில் மைதானத்திற்கு வருகின்றனர். ரசிகர்கள் எங்களை ஏமாற்றவில்லை. எனவே நாங்களும் அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்காத வகையில் விளையாட வேண்டும்” என்றார்.

 

தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றாலும் ரன் விகித அடிப்படையில் (+1.659) இந்திய அணி இரண்டாவது இடத்தையே பிடித்துள்ளது. நியூசிலாந்து அணி நான்கு வெற்றிகளுடன் ரன் விகித அடிப்படையில் அதிகம் பெற்று (+1.923) முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. தோல்வியை சந்திக்காத இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அக்டோபர் 22ஆம் தேதி தரம்சாலாவில் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது. 

- வெ.அருண்குமார்

 

 

Next Story

ட்விஸ்ட் இருக்கு... சன் ரைசர்ஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த ராயல் சேலஞ்சர்ஸ்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
There is a twist Royal Challengers rocking performance against Sunrisers!

ஐபிஎல் 2024இன் 41 ஆவது லீக் ஆட்டம் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நேற்று (ஏப்.25) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆர்சிபி, அனுபவ கோலி, டு பிளசிஸ் இணை ஹைதராபாத் பந்து வீச்சை ஆரம்பத்திலேயே ஆட்டம் காண வைத்தது. அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த டு பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வில் ஜேக்ஸும் 6 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து வந்த பட்டிதார், கோலியுடன் இணைந்து அசர வைக்கும் விதத்தில் ஆடினார். மார்கண்டேவின் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர்கள் அடித்து ஹைதராபாத் பவுலர்களை திகைக்க வைத்தார். 20 பந்துகளில் அரை சதம் அடித்து 50 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலியும் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். க்ரீனின் 20 பந்துகளுக்கு 37 எனும் கடைசி கட்ட அதிரடி கை கொடுக்க பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. சிறப்பாக பந்து வீசிய உனாத்கட் 3 விக்கெட்டுகளும், நடராஜன் 2 விக்கெட்டுகளும், மார்கண்டே, கம்மின்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 207 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்தியது. கடந்த சில போட்டிகளாக அதிரடியாக ஆடி ரன்கள் குவித்து வரும் ஹைதராபாத் அணி இந்த இலக்கை எளிதில் அடித்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்க, முதல் ஓவரிலேயே ஹைதராபாத் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. டு பிளசிஸ் தைரியமாக முதல் ஓவரை ஸ்பின்னரான வில் ஜேக்ஸுக்கு கொடுக்க, சிக்சர்கள் பறக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த வேளையில், ட்விஸ்ட் நடந்தது. தொடர்ச்சியான அதிரடி ஆட்டத்தால் எதிரணிகளை மிரட்டி வந்த ஹெட் 1 ரன்னில் அவுட் ஆனார்.

There is a twist Royal Challengers rocking performance against Sunrisers!

பின்னர் சிறிது அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா 31 ரன்களில் வெளியேறினார். அடுத்து ஸ்வப்னில் சிங் சுழலில் மார்க்ரம் 7, கிளாசென் 4 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நித்திஷ் ரெட்டியும் 13 ரன்களில் கரன் ஷர்மா பந்தில் போல்டு ஆனார். அடுத்து வந்த அப்துல் சமத்தும், கரன் ஷர்மா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

85-6 என்ற இக்கட்டான சூழலில் கேப்டன் கம்மின்ஸ் களமிறங்கினார். அவருடன் இணைந்து சபாஸ் அஹமதுவும் இணைந்து எவ்வளவோ முயன்றும் வெற்றி இலக்கை அடைய முடியவில்லை. கம்மின்ஸ் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி வரை களத்தில் நின்ற சபாஸ் அஹமது 40 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணியால் 171 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

சிறப்பாக பந்து வீசிய ஸ்வப்னில் சிங், கரன் ஷர்மா, க்ரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், யாஸ் தயால், வில் ஜேக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். அட்டகாசமாக ஆடி 20 பந்துகளில் அரை சதம் அடித்த பட்டிதார் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் 4 புள்ளிகள் பெற்றாலும் ரன் ரேட் அடிப்படையில் பெங்களூரு அணி கடைசி இடத்திலேயே நீடிக்கிறது.

இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று மற்ற அணிகளின் ஆட்டங்களின் முடிவைப் பொறுத்து பெங்களூரு அணிக்கு கொஞ்சம் பிளே ஆஃப் வாய்ப்பு எஞ்சியுள்ளது. அதனால் இந்த வெற்றியானது 6 ஆட்டங்களாக தொடர் தோல்விகளால் துவண்டிருந்த பெங்களூரு அணிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

Next Story

RCB vs SRH: ஒன் மேன் ஷோ காட்டிய தினேஷ் கார்த்திக்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Dinesh Karthik who showed one man show!

40 ஓவர்கள் 549 ரன்கள்.. கிரிக்கெட் வரலாற்றில் பந்து வீச்சாளர்கள் வாழ்க்கையில் மறக்க நினைக்கும் நாளாகவும், பேட்ஸ்மேன்கள் வாழ்க்கையில் பசுமையான நினைவுகளாக மனதில் நிறுத்தும் நாளாகவும் ஏப்ரல் 15 இருக்கும் என்றால் அது மிகையாகாது.

ஒருநாள் வரலாற்றில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவால் 434 அடிக்கப்பட்ட போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் தூங்கச் சென்று விட்டனர். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் அந்த 434 ஐயும் துரத்திப் பிடித்து வரலாறு படைத்தனர், தென் ஆப்பிரிக்க அணியினர். முக்கியமாக கிப்ஸின் ஆட்டமானது கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்று.

அந்த ஆட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்தது நேற்று சின்னசாமி மைதானத்தில் நடந்த ஆட்டம். கிப்ஸ் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு கிடைத்த வெற்றி போல ஆர்.சி.பிக்கும் கிடைக்க வேண்டியது. ஆனால் மிடில் ஆர்டர் சொதப்பலால் வெற்றிக்கனியின் அருகில் போய் தவறவிட்டுள்ளது ஆர்.சி.பி.

ஐபிஎல்2024 இன் 30ஆவது லீக் ஆட்டம் பெஙகளூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளசிஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். ஏன் பவுலிங்கை தேர்வு செய்தோம் என்று நினைக்கும் அளவுக்கு ஹைதராபாத் அணி பேட்டிங் இருந்தது. ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் தங்களது அலட்சியமான அதிரடியால் எதிரணி பவுலர்களை நிலைகுலைய வைத்தனர்.

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியர்களின் தூக்கத்தைக் கெடுத்த ஹெட், நேற்று பெங்களூரு ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்தார். ஒரு மிகச்சிறந்த டெஸ்ட் வீரராக பார்க்கப்பட்ட ஹெட், இப்படி ஒரு அதிரடி ஆட்டத்தை ஆடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. 9 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் 40 பந்துகளி சத்தைக் கடந்தார். கடந்த சில ஆட்டங்களாகவே ஃபயர் மோடில் இருக்கும் கிளாசன், ஹெட்டின் அதிரடிக்கு ஈடுகொடுக்கும் வகையில் 31 பந்துகளில் 7 சிக்சர்களுடன் 67 ரன்கள் எடுத்தார். மார்க்ரமும் தான் எதிர்கொண்ட பந்துகளை மைதானத்தில் சுழல விட்டு 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.

இவர்களின் அதிரடியை அலேக்காக தூக்கி சாப்பிட்டார் அப்து சமத். 10 பந்துகளில் 37 ரன்கள் குவித்து ஹைதராபாத் முந்தைய சாதனையான 277 ஐ முறியடித்து 287 ரன்கள் எனும் புதிய வரலாற்றைப் பதித்தது. பெங்களூரு சார்பில் பந்து வீசிய அனைவரின் எகானமியும் 10.00 க்கு மேல் இருந்தது.

பின்னர் 288 என்ற வரலாற்று இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு மோசமான தோல்விதானோ என்று ரசிகர்கள் அஞ்சிய வேளையில், நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று கோலி மற்றும் டு பிளசிஸ் அதிரடி காட்டினர். கோலி 20 பந்துகளில் 42, டு பிளசிஸ் 28 பந்துகளில் 62 என ரன் ரேட்டை அதிகரித்து இலக்கைத் துரத்தினாலும் அடுத்து வந்த இளம் வீரர்கள் வில் ஜேக்ஸ் 7, பட்டிதார் 9, செளகான் 0 என ஏமாற்றினர்.

பின்னர் வந்த பினிஷர் கார்த்திக், அதிரடியின் உச்சம் காட்டினார் என்று சொன்னால் அது மிகையாகாது. நடராஜன் பந்தில் அடித்த ஒரு இமாலய சிக்சர் 108 மீட்டர் எனும் புதிய உச்சத்தை ஐபிஎல் 2024இல் எட்டியது. 7 சிக்சர்களுடன் 35 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். அனுஜ் ராவத்தும் 14 பந்துகளில் 25 ரன்கள் குவித்தார். வரலாற்று வெற்றியாக இருந்திருக்க வேண்டிய ஆட்டம் மிடில் ஆர்டர் சொதப்பியதால், வெற்றிக்கு அருகே வந்து கை நழுவியது. 25 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வியைத் தழுவியது.

பெங்களூரு தோல்வியைத் தழுவினாலும் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி பேட்டிங் பெங்களூரு அணி ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. மும்பை அணியுடனான ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடிய போது ரோஹித், தினேஷ் கார்த்திக்கை கிண்டல் செய்யும் வகையில் உலகக்கோப்பை தேர்வு உள்ளது என்றார். தற்போது உண்மையிலேயே உலகக்கோப்பை அணிக்கு தன்னை தேர்வாளர்கள் உற்றுநோக்கும் வகையில் ஒரு இன்னிங்சை ஆடியுள்ளார் டி.கே என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.