Skip to main content

228 ரன் வித்தியாசத்தில் பாக், வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

Published on 12/09/2023 | Edited on 12/09/2023

 

India won by defeating Pakistan by 228 runs!

 

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது ஆட்டம் ஞாயிறு (11-09-2023) இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. முதல் பேட்டிங்கின் பாதியிலேயே, மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. ரிசர்வ் நாளான நேற்று ஆட்டம் மீண்டும் தொடங்கியது. உலகக் கோப்பைக்கு இந்திய அணி தயாராகிவிட்டது என அறிவிப்பது போல இருந்தது நேற்றைய ஆட்டம்.

 

ஆசியக் கோப்பை கிரிக்கெட் 2023ன் சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது ஆட்டம் ஞாயிறு (11-09-2023)அன்று  இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, கேப்டன் பாபர் அசாம் பவுலிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் ரோகித் 56 ரன்களிலும், சுப்மன் கில் 58 ரன்னில் வெளியேறினார். பின்னர் ராகுல்-கோலி கூட்டணி களமிறங்கி விளையாடியது. இருப்பினும், ஆட்டம் மழையினால் நின்றதை அடுத்து நேற்று ரிசர்வ் நாளில் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இந்த நிலையில், ஞாயிறு ஆட்டத்தில் 24.1 ஓவரில் இந்திய அணி 147 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்திருந்தது. விராத் கோலி 8 ரன்களுடனும், ராகுல் 17 ரன்கள் எடுத்தும் களத்தில் இருந்தனர். 

 

நேற்று ரிசர்வ் நாளில் இருவரும் களமிறங்கினர் . தொடக்கத்தில் இருந்தே வலுவான ஆட்டத்தை இருவரும் வெளிப்படுத்த பாகிஸ்தான் பவுலர்கள் திணறினர். ஒரு முனையில் விராத் கோலி அடித்து ஆட, ராகுலும் இணைந்து பந்துகளை பறக்க விட்டார். பாகிஸ்தான் பவுலர்களும் முழு பலம் கொண்டு பந்து வீசினாலும் ராகுலும், கோலியும் அசரவில்லை. நேற்றைய ரிசர்வ் நாள் ஆட்டத்தில் விக்கெட்டை இழக்காமல் இந்தியா 50 ஓவர் வரை முழுமையாக விளையாடியது. கே.எல். ராகுல் 106 பந்தில் 111 ரன்கள் எடுத்து சதம் அடித்தார். இதில்,12 பவுண்டரிகள், 2 சிக்ஸர் என மிகவும் சிறப்பாக விளையாடினார். இதுவரை கே.எல்.ராகுல் ஒரு நாள் போட்டியில் விளையாடியதிலேயே மிக அற்புதமான ஆட்டம் இது. இதில் குறிப்பிட வேண்டியது, அவர் சமீபத்தில் தான் சிகிச்சையில் இருந்து வந்தார். இவரைத் தொடர்ந்து, விராத் கோலியும் தனது 47வது ஒரு நாள் போட்டி சதத்தை பதிவு செய்தார். அதிரடியாக விளையாடிய அவர் 94 பந்துகளை எதிர்கொண்டு 122 ரன்கள் எடுத்தார். மூன்று பெரிய சிக்சர்களுடன், 9 பவுண்டரிகளும் அதில் அடங்கும். மேலும், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 13,000 ரன்களைக் கடந்த ஐந்தாவது வீரர் என்ற சாதனையும் படைத்தார். இருவரும் இறுதி வரை விக்கெட்டை இழக்காமல் விளையாடினர். இதனால், இந்திய அணி 50 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் சேர்த்தது. 

 

எனவே, 357 ரன்கள் என்ற இமாலய இலக்கை எதிர்கொள்ள பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் பக்கர் சமான் - இமாம் உல் ஹக் விளையாடினர். மிகப் பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டதால் பாகிஸ்தான் தொடக்கம் முதல் அடித்து ஆட வேண்டிய சூழல் உருவாகியது. இருப்பினும், ஆட்டத்தை மெதுவாக நகர்த்தியது பாகிஸ்தான் அணி. இமாம் உல் ஹக் 9 ரன்னில் பும்ரா வீசிய பந்தில் வெளியேறினார். குறிப்பாக, இந்தியாவின் பந்து வீச்சும் நேற்று சிறப்பாக இருந்தது. இதனால், கேப்டன் பாபர் அசாம் 10, முகமது ரிஸ்வான் 2 ரன் என சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். பின்னர், 47 ரன்களில் 3 விக்கெட் இழந்து பாகிஸ்தான் தடுமாறத் தொடங்கியது. ஒரு கட்டத்திற்கு மேல் பாகிஸ்தான் அணி மீண்டு வரவே முடியாத சூழல் உருவானது. இதற்கு காரணம், குல்தீப் யாதவ் வீசிய சுழற்பந்துகள் தான். அவர் 8 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். பின்னர் 31.6 வது ஓவரில் பாகிஸ்தான் 8 விக்கெட்டுகளுக்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்து  தோல்வியுற்றது. 

 

பாகிஸ்தானின் நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப் இருவருக்கும் ஏற்பட்ட காயத்தால் களமிறங்கவில்லை. எனவே பாகிஸ்தான் ஆல்-அவுட் என அறிவிக்கப்பட்டது. இந்தியா பவுலிங்கில், பாண்டியா, பும்ரா, ஷர்துல் தலா 1 விக்கெட் எடுத்தனர். நேற்றைய ஆட்ட நாயகன் விருதை 122 ரன்கள் எடுத்த விராத் கோலி பெற்றார். இதனால் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பெற்றது.  இதன் மூலம் சூப்பர் 4    பட்டியலில் முதல் இடத்தை இந்தியா பிடித்துள்ளது. 

 

நேற்றைய ஆட்டம், இந்திய உலகக் கோப்பை அணியை பற்றி எழுந்த சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாகவும் இருந்தது. மேலும், உலகக் கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்ற நம்பிக்கையை ரசிகர்களிடம் கடத்தியுள்ளது.நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்திய அணி இன்று இலங்கையை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம், பிரேமதாச ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி மதியம் 3.00 மணிக்கு தொடங்கும்.

 


 

Next Story

பாகிஸ்தானுக்கு இதயம் கொடுத்த இந்தியா; தமிழ்நாட்டில் கிடைத்த மறுவாழ்வு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Indian gave heart to Pakistan girl for treatment

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரைச் சேர்ந்தவர் ஆயிஷா (19). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். அப்போது, ஆயிஷாவுக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, இந்தியா வந்த ஆயிஷா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அந்த சிகிச்சையின் போது, ஆயிஷாவின் இதயம் செயலிழந்ததை உறுதிப்படுத்திய மருத்துவர்கள், அவருக்கு அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றினார்கள். சிகிச்சை முடிந்த பிறகு, தனது சொந்த நாட்டிற்கு திரும்பிய ஆயிஷா, அங்கு தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்து படித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், பாகிஸ்தான் பெண்ணான ஆயிஷாவுக்கு கடந்த ஆண்டு மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரின் உடல்நிலை மோசமானதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு போதிய உபகரணங்கள் இல்லாததால் அவர் மீண்டும் சென்னை வந்து அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஆயிஷாவுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டால் தான் ஆயிஷாவை காப்பாற்ற முடியும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். 

அதன்படி, இதய தானத்துக்காக ஆயிஷா விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவருக்கு அந்த நேரத்தில் மாற்று இதயம் கிடைக்கவில்லை. இதயம் கிடைக்கும் வரை ஆயிஷா, கடந்த 18 மாதங்களாக இந்தியாவிலேயே தங்கி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் மூளைச்சாவு அடைந்த 69 வயதானவரின் இதயம், விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு ஆயிஷாவுக்கு மாற்று இதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆயிஷாவுக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. 

பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் பல காலமாக பிரச்சனைகள் இருக்கும் நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இந்தியாவில் தங்கி இருந்து வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை முடிந்து உயிர் காப்பாற்றப்பட்டிருப்பது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

Next Story

“மனைவியின் உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவம்” - இம்ரான்கான் பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Imran Khan sensational allegation on Poison is mixed in wife's food

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். தன்னுடைய பதவிக் காலத்தில், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகிய இருவரும் விற்பனை செய்து சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பின், கடந்த 2022 ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்த இம்ரான்கான் தனது பிரதமர் பதவியை இழந்தார்.

இதனையடுத்து, அல்-காதிர் அறக்கட்டளை முறைகேடு மற்றும் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களைக் கசியவிட்ட சிபர் வழக்கு எனப் பல்வேறு வழக்குகள் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராகத் தொடரப்பட்டது. பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாகக் கூறி தொடரப்பட்ட ‘சிபர்’ வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த நிலையில் ‘சிபர்’ வழக்கை விசாரித்து வந்த பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த ஜனவரி 30ஆம் தேதி இம்ரான் கானிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

அதே வேளையில், இஸ்லாமிய நடைமுறைக்கு எதிராக திருமணம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஸ்ரா பீவிக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, புஸ்ரா பீவி, இஸ்லாமாபாத்தில் உள்ள பாணி காலா இல்லத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், தனது புஸ்ரா பீவிக்கு, உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவும் கலந்து கொடுக்கப்பட்டுள்ளதாக இம்ரான்கான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஊழல் வழக்கு தொடர்பான வழக்கில் ஆஜரான இம்ரான்கான், ‘தனது மனைவிக்கு உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவம் கலந்து கொடுக்கப்படுகிறது. மேலும், அவருக்கு கொடுக்கப்படும் விஷம் கலந்த கலந்த உணவினால், அவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறார். அவரது உடல்நிலையும் மிகவும் நலிவடைந்து வருகிறது.

அதனால், இஸ்லாமாபாத்தில் உள்ள சர்வதேச மருத்துவமனையில் தனது மனைவியின் உடல்நிலையை பரிசோதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்’ எனக் கூறினார். இதையடுத்து, அடுத்த 2 நாட்களில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.