Skip to main content

டி20 உலகக்கோப்பை; இந்தியா முடிவெடுக்க ஐசிசி அவகாசம்...

Published on 02/06/2021 | Edited on 02/06/2021

 

ganguly

 

2021 ஆம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெற இருக்கிறது. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த தொடரை இந்தியாவில் நடத்துவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்திய கிரிக்கெட் வாரியம், 20 ஓவர் உலகக்கோப்பையை இந்தியாவிலேயே நடத்த விரும்புகிறது.

 

இந்நிலையில், இந்தாண்டிற்கான 20 ஓவர் உலகக்கோப்பையை இந்தியாவிலேயே நடத்தலாமா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றலாமா என்பது குறித்து முடிவெடுக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி, 20 ஓவர் உலகக்கோப்பை தொடரை இந்தியாவிலேயே நடத்த முடியுமா என்பதைத் தெரிவிக்கக் கால அவகாசம் கோரினார்.

 

இதனைத்தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், 20 ஓவர் உலகக்கோப்பையை இந்தியாவிலேயே நடத்த முடியுமா என்பது குறித்து முடிவெடுக்க இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இம்மாதம் 28 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளது. அதேநேரத்தில், 20 ஓவர் உலகக்கோப்பையை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் நடத்துவது குறித்தும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பரிசீலிக்கத் தொடங்கியுள்ளது. ஒருவேளை 20 ஓவர் உலகக்கோப்பையை நடத்துமிடம் மாற்றப்பட்டாலும், போட்டியை நடத்தும் உரிமை இந்தியாவிற்கே வழங்கப்படும் எனச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.