Skip to main content

வெளுத்து வாங்கும் சகோதரர்கள் vs வெளியேற்றப்படும் சகோதரர்கள் - இந்திய கிரிக்கெட்!  

Published on 26/02/2018 | Edited on 26/02/2018

2006ஆம் ஆண்டு நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தபோது, 'இந்தியாவுக்கு  அடுத்த  கபில்தேவ்  கிடைச்சுட்டாரு'னு எல்லோரும்  பேசினார்கள். பௌலிங்  மட்டும்  இல்லை பேட்டிங்கும் நல்லா பண்ணுவேனென்று  சில போட்டிகளில் ரன் அடிச்சும் காண்பித்தார் இர்பான் பதான். அவரது பேட்டிங் பார்த்து சில போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராகவும் இறக்கி விட்டார்கள். அடைமழை போல இனி அடுத்த சில வருடங்கள் நிரந்தரமாக சாதிப்பாரென்று  பார்த்தால்,  பொசு பொசுவென தூறல் போல நின்று விட்டார். இவர் தான் இப்படியென்று பார்த்தால் இவரது அண்ணண் யூசுப் பதானும் ஆயிரம் வாலா பட்டாசு மாதிரி ஆரம்பத்தில்  சிக்ஸராக  பறக்க விட்டு பின்னர் ஓய்ந்துவிட்டார்.
 

pathan brothers


இர்பான் பதான் 2007ஆம் வருடம் நடந்த T20 தொடரின் இறுதி ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு, இந்தியா கோப்பையை வெல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தார், ஆட்டநாயகன் விருதும் வென்றார். 2008 ஆம் வருடம் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில்  சிறந்த பேட்டிங் மற்றும் பௌலிங் செய்து ஆட்டநாயகன் விருதும் பெற்றார். இவரது சிறப்பான ஆட்டம் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில்  டெஸ்ட் போட்டியில் இந்தியா வெல்ல உதவியது.

2007 -T20  உலககோப்பை , 2011- 50 ஓவர்  உலககோப்பை, 2013 சாம்பியன்ஸ் கோப்பை என்று வென்ற அணிகளில் இடம்பிடித்து பெயரெடுத்த பதான் சகோதரர்கள் தற்போது விளையாட இடம் கிடைக்காமல் காணாமல் போய்விட்டனர். இந்திய அணியில்விளையாடுவதைத் தாண்டி பரோடா அணியிலும் கூட  நீடிக்கமுடியாமல் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு, பின்பு அணியில் இருந்து வெளியேறி, 2017ஆம் ஆண்டு ரஞ்சி  சீசனை இர்பான் பதான் விளையாடவே இல்லை. அடுத்த வர உள்ள 2018 சீசனில் ஜம்மு அணிக்காக விளையாட உள்ளார். ஜம்மு அணிக்கு  இப்போது பயிற்சியாளர் பொறுப்பும் இர்பான் வசம் கொடுக்கப்பட்டுள்ளது. யூசுப் பதானும் உடல்நலக்குறைவால் விளையாடவில்லை. மேலும் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை உட்கொண்டதற்காக விளையாட்டிலுருந்தும்  ஐந்து மாதம் தடை செய்யப்பட்டார். சுவாசக் கோளாறு சிகிச்சையின் போது கொடுத்த மருந்தில் தெரியாமல் உட்கொண்டதாக ஒத்துக்கொண்டார். இதன் எதிரொலி ஐபிஎல் ஏலத்தில் எதிரொலித்தது, ஒரு காலத்தில் நட்சத்திர வீரராக இருந்த இர்பான் பதான் விலைபோகவில்லை. யூசுப் பதான் சற்று ஆறுதலாக சன் ரைசர்ஸ் அணியால் 1.90 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டார்.

 

pandya brothers


பதான் சகோதரர்கள் இப்படி சரிவில் இருக்க மறுபக்கம் பாண்டியா சகோதரர்கள் கலக்கி வருகின்றனர். ஹர்டிக் பாண்டியா மற்றும் குர்னால் பாண்டியா இருவரும் ஐபிஎல் ஏலத்தில் கூட்டாக 20 கோடிக்கு ரூபாய்க்கு விலை போயுள்ளனர். இது வரையில் பெரிய சாதனைகள் செய்யாவிட்டாலும்  ஹர்டிக் பாண்டியாவின் சிக்ஸர் அடிக்கும் திறமையும் பௌலிங் செய்வார் என்ற நம்பிக்கையும் அவரை இந்த நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. அதனாலேயே அவரை அடுத்த கபில் தேவ் என்று  ஒரு கூட்டம் கூற ஆரம்பித்துவிட்டது. 2017ஆம் ஆண்டு  ஐபிஎல் தொடரில் சிறப்பான பேட்டிங் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.  250 ரன்கள் தான் என்றாலும் அதை வெவ்வேறு சூழ்நிலையில் 160 பந்துகளில் அடித்தார் என்பது தான் சிறப்பு. கூடவே 4 ஓவர்களை வீசக்கூடிய வீரர். குர்னால் பாண்டியாவும் சரிசமமான ஆட்டத்தைத் தான் ஆடியிருந்தார் என்றாலும் பந்துவீச்சில் அவர் ஒரு சுழல் பந்து வீச்சாளர். இந்திய அணிக்கு தேவைப்படுபவர் வேகப்பந்து வீசக்கூடிய ஆல்ரவுண்டர் என்பதால் அதிர்ஷ்டம் தம்பிக்கு அடித்தது. சர்வதேச போட்டிகளில் அவ்வளவாக விளையாடவில்லை என்றாலும், ஐபிஎல் நல்ல தளமாக அமைந்து விட்டது. இந்திய அணி மிகவும் எதிர்பார்க்கும் ஆல்ரவுண்டரை ஹர்டிக் பாண்டியாவிடம் தேடுகிறது. பதில் இனி வரும் போட்டிகளில் தெரியும்.

 

pandya brothers celebrating


'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?' மாதிரி, 'உங்களில் யார் அடுத்த கபில்தேவ்?' என்ற மீடியா மற்றும் ரசிகர்களின் தேடலில் சிக்கி எத்தனை பேர் காணாமல் போகப்போறாங்களோ? பாண்டியா சகோதரர்கள் எப்படி இந்த புதிய அழுத்தத்தைத் தாங்கி தங்கள் திறமைகளை முழுமையாக வெளிக்கொண்டுவந்து இந்திய அணிக்கும் தங்கள் ஐபிஎல் அணிக்கும் வெற்றிகளை தேடித்தருவார்கள்  என்று பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும். பாண்டியா சகோதரர்களுக்கு சாதிப்பதற்கு வயதும் திறமையும் இருக்கிறது. வாழ்க்கை வட்டத்தில் இப்போது உள்ள உச்சத்தை தலைக்கேற்றாமல் சரியாக பயன்படுத்திக் கொண்டால்  இன்னும்  சிறப்பாக மிளிரலாம். பல உயரங்களைத் தொடலாம். பதான் சகோதரர்கள் 33 வயதை கடந்திருந்தாலும், மீண்டும் தங்களை சிறப்பாய் உலகிற்கு காட்டிக்கொள்ள, இன்னும் அவகாசம் உள்ளது. இப்போதுள்ள தடைகளைத் தாண்டி மீண்டு இன்னும் உள்ள சில வருடங்களை சிறப்பாய் விளையாடி விடைபெற வாழ்த்துவோம்.

Next Story

சோதனை மேல் சோதனை; ஹர்திக் பாண்டியாவுக்கு விபூதி அடித்த சகோதரர்!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Police action Hardik Pandya's brother for Money laundering case

முன்னணி இந்திய கிரிக்கெட் அணி வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் பொறுப்பு வகித்து வருபவர் ஹர்திக் பாண்டியா. முன்னதாக ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. அதன் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்த ஹர்திக் பாண்டியா அந்த அணியிலும் கேப்டனாகத் தொடர்ந்தார். ஆனால், மும்பை அணியின் நட்சத்திர வீரர், ரோகித் ஷர்மாவின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியாவிற்கு சென்றதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த ஆண்டு கேப்டன் ஹர்திக் பாண்டியா செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு மோசமான வரவேற்பு கிடைக்கிறது. ஆனாலும், ரசிகர்கள் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு மத்தியில் ஹர்திக் பாண்டியா மும்பை அணியை கேப்டனாக வழி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா தன் சகோதரர் ஒருவரால் மேலும் ஒரு பிரச்சனைக்கு ஆளாகி இருக்கிறார். ஹர்திக் பாண்டியாவின் உடன்பிறந்த சகோதரர் க்ருணால் பாண்டியா. இவரும் இந்திய அணியிலும், ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணிக்காகவும் விளையாடி வருகிறார். கிரிக்கெட் சகோதரர்கள் இருவரும் பிஸினஸிலும் காலூன்ற நினைத்துள்ளனர். அதற்கு பாண்டியா சகோதரர்களின், ஒன்றுவிட்ட சகோதரர் வைபவ் பாண்டியா துணையாக வந்துள்ளார். மூவரும் சேர்ந்து, கடந்த 2021 ஆம் ஆண்டு ‘பாலிமர்’ என்ற நிறுவனத்தை தொடங்கினர். அதில், ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருணால் பாண்டியா தலா 40 சதவீதம் என்றும், ஒன்றுவிட்ட சகோதரர் வைபவ் பாண்டியா 20 சதவீதம் என்றும் முதலீடு செய்தனர். ஒப்பந்தத்தில் லாபத்தையும் இதே விகிதத்தில் பங்கிட்டுக் கொள்ள முடிவு செய்து கொண்டனர். இதில், ஹர்திக் மற்றும் க்ருணால் இருவருமே முழு நேர கிரிக்கெட் வீரர்கள் என்பதால் நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பை சகோதரர் வைபவ் பாண்டியா எடுத்துக்கொண்டுள்ளார்.

Police action Hardik Pandya's brother for Money laundering case

இதனையடுத்து வைபவ், தனது இரு சகோதரர்களுக்கும் தெரியாமல் அதே தொழிலில் ஈடுபடும் மற்றொரு நிறுவனத்தை ரகசியமாக துவக்கியுள்ளார். இது ஹர்திக், க்ருணால் பாண்டியாக்களுடன் செய்து கொண்ட ஒப்பந்த விதிகளுக்கு எதிரானது என்று தெரிந்தும் அவர் செய்ததாக கூறப்படுகிறது. மறுபுறம், சகோதரர்கள் மூவரும் இணைந்து கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கிய நிறுவனத்தின் லாபம் படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. இதைக் கவனித்த ஹர்திக் பாண்டியா என்ன பிரச்சனை என நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்துள்ளார். அதில், ஹர்திக் பாண்டியாவிடம் சொல்லாமல் வைபவ் சொந்தமாக தனி நிறுவனத்தை தொடங்கி இருப்பது தெரிய வந்ததுள்ளது. தங்கள் குடும்பத்தில் ஒரு நபராக இருந்த வைபவ் பாண்டியாவை நம்பி, பாண்டியா சகோதரர்கள் புது நிறுவனத்தைத் தொடங்கிய நிலையில், அவரே இப்படி செய்தது பாண்டியா சகோதரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைபவ் பாண்டியா ரகசியமாக புதிய கம்பெனி தொடங்கியதால் பழைய கம்பெனிக்கு 3 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு ஹர்திக் பாண்டியாவிடம் சொல்லாமல் பழைய கம்பெனியில் தனக்கான லாபத்தின் சதவீதத்தை 20 சதவீதத்தில் இருந்து 33.3 சதவீதமாக வைபவ் அதிகரித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. அத்துடன் முதலில் மூன்று பேர் சேர்ந்து தொடங்கிய கூட்டு நிறுவனத்தில் கிடைத்த பணத்தை அடிக்கடி தனது சொந்த நிறுவனத்திற்கு வைபவ் மாற்றிக் கொண்டுள்ளார். பாண்டியா சகோதரர்களுக்கு தெரியாமல் இதுவரை ஒரு கோடி ரூபாய் வரை வைபவ் மாற்றியதாக தகவல் சொல்லப்படுகிறது. ஒருகட்டத்தில் ஹர்திக் பாண்டியாவிற்கு நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வந்த அதிர்ச்சி பின்னணி முழுமையாக தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, ஹர்திக் பாண்டியா தன்னை ஏமாற்றிய வைபவிடம் விளக்கம் கேட்டு வாக்குவாதம் செய்ததாகவும், உடனே உனது பெயரை களங்கப்படுத்திவிடுவேன் என்று ஹர்திக் பாண்டியாவை வைபவ் மிரட்டியதாக தகவல் சொல்லப்படுகிறது.

இதையடுத்து, ஒன்று விட்ட சகோதரரால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஹர்திக் பாண்டியா, வைபவிற்கு எதிராக மும்பை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து வைபவை கைது செய்து 5 நாள்கள் போலீஸ் காவலில் விசாரித்து வருகின்றனர். வைபவ் மொத்தம் 4.3 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளதாக ஹர்திக் பாண்டியா தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. விரிவான விசாரணைக்குப் பிறகே, மோசடி சம்பவம் குறித்து தகவல்கள் முழுமையாக தெரியவரும் என போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர். பிரபல கிரிக்கெட் வீரருக்கு சகோதரரால் நடந்த  மோசடி, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

“மீண்டு வர சிறிது காலம் ஆகும்” - மருத்துவமனையில் முகமது ஷமி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Mohammed Shami tweet after surgery

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக சாதனை படைத்தார். அந்த போட்டிகளில் விளையாடிய போதே, முகமது ஷமியின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு போட்டியிலும் அவர், காயத்திற்கான ஊசி செலுத்திக்கொண்டு விளையாடி வந்தார் என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி வந்த முகமது ஷமி, அதன் பின் லண்டனுக்கு சென்று கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (26-02-24) லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் தனது புகைப்படத்தை எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் முகமது ஷமி. மிகவும் தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அடுத்த மாதம் நடைபெறும் ஐ.பி.எஸ் தொடரிலும் ஜூன் மாதம் அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.