Skip to main content

80 ஆயிரம் கோடி செலவில் 21வது உலகக்கால்பந்து திருவிழா!!

Published on 14/06/2018 | Edited on 14/06/2018

கோடான கோடி ரசிகர்களை வைத்திருக்கும் ஒரு விளையாட்டு தான் கால்பந்து. அந்த கால்பந்திற்கான 21-வது  பிபா உலகக்கோப்பை இன்று ரஷ்யா தலைநகரான மாஸ்கௌவில் இரவு 8:30 மணிக்கு தொடங்க இருக்கிறது. உலகிலேயே மிக பிரமாண்ட விளையாட்டான இது இன்று ஜூன் 14 ஆம் தேதி தொடங்கி ஜூலை 15 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது . இதன் மூலம் உலகக்கோப்பையை நடத்தும் 17 வது நாடாக ரஷ்யா உள்ளது . ரஷ்யா முதன்முறையாக கால்பந்து உலகக்கோப்பை போட்டியை நடத்துகிறது. இதனால் அந்த அணி உலககோப்பைக்கு நேரடியாக தேர்வானது மற்ற 31 அணிகளும் தகுதிச்சுற்றின் வாயிலாகவே தேர்வானது. இந்த 32 அணிகளில் 20 அணிகள் இதற்கும் முன் நடந்த 2014 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளிலும் தகுதிச் சுற்றில் தேர்வாகி கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 

 

football

 

ஐஸ்லாந்து மற்றும் பனாமா நாடுகள் இந்த உலகக்கோப்பையில் மூலம் முதன் முதலாக கலந்துகொள்கின்றனர். அதேபோல எகிப்து அணி 28 வருடங்கள் கழித்தும், பெரு 36 வருடங்கள் கழித்தும், மொராக்கோ 20 வருடங்கள் கழித்தும், செனகல் 16 வருடங்கள் கழித்தும் களமிறங்குகின்றன. இதுவரை நடைபெற்ற உலகக்கோப்பையில் அதிகப்படியாக பிரேசில் அணி ஐந்து முறை கோப்பையை தங்கள் வசமாக்கியுள்ளது. இத்தாலி மற்றும் ஜெர்மனி அணிகள் நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால் இந்த ஆண்டு கால்பந்து போட்டியில் இத்தாலி அணி தகுதிச் சுற்றுடன் கிளம்பிவிட்டது என்பதுதான். ஜெர்மனி நான்கு முறை இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. 

  

football

 

ரஷ்யா உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 64 போட்டிகள் நடைபெற உள்ளது. உலகிலேயே பெரிய நாடான ரஷ்யாவில் உள்ள பதினோரு நகரங்களில் இந்த உலகக்கோப்பைக்காக கட்டப்பட்ட மற்றும் புதிதாக மாற்றப்பட்ட 12 மைதானங்களில் நடக்க இருக்கிறது. இன்று போட்டியை நடத்தும் ரஷ்யா, சவூதி அரேபியாவுடன் விளையாட இருக்கிறது. இப்போட்டி தொடங்குவதற்கு முன்பு மாலை 6:30 மணியளவில் கோலாகலமான விழாக்களுடன் தொடங்க இருக்கிறது. இந்த விழா வெறும் அரைமணிநேரமே நடைபெறுவதாக இருந்தாலும் உலகின் மிகப்பெரிய பிரபலங்களான ஆங்கில பாடகர் ராபியே வில்லியம்ஸ், ரஷ்ய பாடகி ஐடா கரிபுல்லினா மற்றும் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், நிக்கி ஜாம் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க உள்ளனர். இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக பிரேசிலின் முன்னாள் வீரர் ரொனால்டோ கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடத்தப்பட உள்ளது.

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

“3ஆம் உலகப்போர் உருவாகும்...” - ரஷ்ய அதிபர் எச்சரிக்கை

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
 Russian president warns about World War 3

உக்ரைன் - ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.  இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலை தொடுத்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும், போர் நின்றபாடில்லை. அதே வேளையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து போர் ஆயுதங்களை வழங்கி வருவதாக ரஷ்யா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், மூன்றாம் உலகப் போர் உருவாகும் சூழல் வரும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யாவில் 6 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு முறை அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில், ரஷ்ய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய சுதந்திர ஜனநாயகக் கட்சி, புதிய மக்கள் கட்சி ஆகியவை களம் கண்டன. ரஷ்ய வரலாற்றில் முதல்முறையாக நடைபெற்ற 3 நாட்கள் வாக்குப்பதிவில், 3வது முறையாக அதிபர் தேர்தலில் புதின் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். ஸ்டாலினுக்கு பிறகு தொடர்ச்சியாக 3வது முறையாக வெற்றி பெற்ற புதின், 200 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரு சாதனையை படைத்துள்ளார். 

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும், புதின் பேசியதாவது, “அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகளும், ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதிக்கொள்வது என்பது முழு அளவிலான மூன்றாம் உலகப் போரை நோக்கி ஒரு படி தொலைவில் இருக்கும் என அர்த்தம். இது அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அத்தகைய சூழலை யாரும் விரும்பவில்லை. அதே நேரத்தில், இந்த நவீன உலகில் எல்லாம் சாத்தியமே. உக்ரைனில் ஏற்கனவே, நேட்டோ இராணுவ வீரர்கள் உள்ளனர். அவர்களில் ஆங்கிலம் பேசும் வீரர்களும், பிரஞ்சு பேசும் வீரர்களும் உள்ளனர். அவர்கள் அங்கு அதிக எண்ணிக்கையில் இறந்து கொண்டிருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட நாடுகள் தங்கள் வீரர்களை திரும்பப் பெறுவது நலம்” என்று கூறினார். 

முன்னதாக தேர்தல் பரப்புரையின் போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அங்குள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “இங்கே எல்லாம் அணுசக்தி மோதல் வருவதாக நான் நினைக்கவில்லை. உக்ரைன் மீதும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. உக்ரைனுடனான பேச்சுவார்த்தைகளுக்கு ரஷ்யா தயாராக உள்ளது. ஆனால், அவை யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அதே வேளையில், ராணுவ தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் சிந்தித்தால், நாங்கள் நிச்சயமாக தயாராக இருக்கிறோம். 

அணு ஆயுத போரைத் தூண்டும் வகையில் எந்த ஒரு செயலிலும் அமெரிக்கா ஈடுபடாது என்று நம்புகிறோம். மேலும், அமெரிக்கா தனது ராணுவப் படைகளை ரஷ்ய எல்லையில் அல்லது உக்ரைனுக்கு அனுப்பினால், ரஷ்யா இந்த நடவடிக்கையில் ஈடுபடும் என்பதை அமெரிக்கா புரிந்து கொள்ளும். ஒருவேளை, அமெரிக்கா ஆணு ஆயுத சோதனை நடத்தினால், அதற்கு நாங்களும் தயாராக இருக்கிறோம்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.