
இந்திய கிரிக்கெட் அணியில் இடஒதுக்கீட்டை கொண்டுவர வேண்டும் என பிரபல கன்னட நடிகர் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் இடஒதுக்கீட்டை கொண்டு வர வேண்டும் என பிரபல கன்னட நடிகரும், சமூக ஆர்வலருமான சேத்தன் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், “இந்திய அணியில் உள்ள வீரர்களில் 70 சதவிகிதம் பேர் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். இந்தியாவில் அரசியல், கல்வி, வேலைவாய்ப்பில் இருப்பதுபோல் கிரிக்கெட்டிலும் இடஒதுக்கீடு கொண்டுவர வேண்டும். பட்டியலின மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இடஒதுக்கீடு மூலம் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டால் அவர்களின் ஆட்டத்திறன் சிறப்பாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தென்னாப்பிரிக்கா அணியில் கடந்த 2016 ஆம் ஆண்டு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. அதில் அணியில் 6 வீரர்கள் வெள்ளை நிறத்தவர்கள் அல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்றும், அதிலும் குறிப்பாக இரண்டு பேர் கறுப்பினத்தவர்களாக இருக்க வேண்டும் என வகுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய சேத்தன் குமார், அதே போன்ற விதி இந்திய கிரிக்கெட் அணியிலும் வகுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.