காமன்வெல்த் பதக்கங்களை வென்றவர்களுக்கு கோவையில் உற்சாக வரவேற்பு
காமன்வெல்த் பளுதூக்கும் போட்டிகளில் தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்று அசத்திய கோவையை சேர்ந்த 5 இளைஞர்களுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
7 வது காமன்வெல்த் பளுதூக்கும் சேம்பியன்ஸ்சிப் 2017 போட்டிகள் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட 25 நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இதில், இந்தியாவின் சார்பில் பங்கேற்ற 72 வீரர்களில் கோவையைச் சேர்ந்த 6 வீரர்கள் உட்பட தமிழகத்தைச் சேரந்த 10 வீரர்கள் பங்கேற்றனர். காமன்வெல்த் போட்டியில் 3 வீரர்கள் தங்கப் பதக்கங்களையும், இருவர் வெள்ளிப் பதக்கமும், ஒரு வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்தனர். இதைதொடர்ந்து இன்று கோவை வந்த 5 வீரர்களுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய 3 தங்க பதக்கங்களை வென்ற வெங்கடேஷ் பிரபு, பளுதூக்குதல் போட்டிகளுக்கு தமிழக அரசு உரிய அங்கீகாரம் அளிப்பதில்லை என தெரிவித்தார். மேலும் காமன்வெல்த் போட்டிகளுக்கு வீரர்கள் தன்னார்வத்தில் நண்பர்கள் உதவியுடன் சென்று பதக்கங்களை வென்று இருப்பதாகவும், இப்போட்டிகளுக்கு அரசு உரிய அங்கீகாரம் மற்றும் உதவிகளை வழங்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
அருள்குமார்